24.8.11


தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன்.(ஒளிப்படம்: புதுவை இளவேனில்)

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள்
பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற
அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது.
*
தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி
யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி
திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான்
ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு,
அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன்.
அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது.
அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது.
இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது
நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள்.
*
அன்புடன்
பாவண்ணன்

அன்பான பாவண்ணன்,
வணக்கம். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
இதன்வழி என் நண்பர்களுக்கும் உங்கள் கருத்தை முன்வைக்கிறேன்.

22.8.11




பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.



கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.
[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்]

28.6.11

அந்த மூன்று குரங்குகள்!

புதுச்சேரியில், மாசிமகத் திருவிழாவின்பொழுது, சாலையோரம் விற்பதற்காகப் பரப்பியிருந்த மண்பொம்மைகளில் 'மூன்று குரங்குகள்' பொம்மை, எங்கள் பெயர்த்தியின் கவனத்தைக் கவர்ந்தது. வாங்கியபின், வீட்டுக்குப் போனதும் இயல்பாக(குழந்தைகளின் இயல்பாக)மூன்று குரங்குகள் எதற்கு ஏன் என்று காரணம் கேட்டாள்.

காந்தியடிகளுக்குப் பிடித்த உருவம் என்று இந்த பொம்மையைச் சொல்வார்கள். "தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைப் பேசாதே!" என்பவற்றை உணர்த்தவே குரங்கொன்று தன் கண்களையும்; மற்றது செவிகளையும்; மூன்றாவது வாயையும் பொத்திக் கொண்டிருப்பதாக விளக்குவார்கள்.

மெய்யாக எப்படி இந்தப் படிமம் தோன்றியது?

ஜப்பான் நாட்டின் நிக்கோ[ர்] நகரத்தில் உள்ளது கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதொரு புத்த விகாரை.'டோஷோ' என்பது அவ்விகாரையின் பெயர். அதில் இந்த உருவம் பழமையானதோர் ஓவியமாக உள்ளது. இதாரி ஜிஸ்கோ என்ற ஓவியர் தன் இடது கையால் தீட்டிய சித்திரம் அது. ஜப்பான் மொழியில் இதாரி என்றால் இடதுகைப் பழக்கமுள்ள ஆள் என்று பொருள். ஜிஸ்கோ என்ற அந்த ஓவியரின் இடக்கைப் பழக்கமே அவர் பெயருக்கு அடைமொழி ஆனது. இங்குள்ள பொருளற்ற - பொருத்தமற்ற விருதுப் பெயர்களைப் போன்றதன்று 'இதாரி.'

சரி.. அந்த மூன்று குரங்குகள்?

மூன்று குரங்குகள் படிமத்தை நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்வார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குரிய சீன நன்னெறியின் விளக்கம் அது என்றும் சொல்வார்கள். தமிழ் நன்னெறி நூலான 'வாக்குண்டாம்' சொல்லாததா இது?

ஒன்றன் பெயர் மீசா[ஜா]ரு. மற்றதன் பெயர் இவாசா[ஜா]ரு. மூன்றாவதன் பெயர் சிக்சா[ஜா]ரு.(மிஜாரு, இஜாரு, கிஜாரு என்று மக்கள் மொழியில் சொல்வார்களாம்)

மீசா[ஜா]ரு என்பதற்கே குரங்குகள் மூன்று என்ற பொருள் ஜப்பான் மொழியில் உண்டாம்.

இந்தச் சேதியை, நான் பணிக்கு வந்து இரண்டாண்டுகள் கழிந்தபின், பணிபுரிந்த தாகூர் கல்லூரியில் இடண்டாமாண்டு கணிதவியல் படித்த திரு த. மணிகண்டன் வழி தெரிந்து கொண்டேன். 31.1.1971 நாளிட்ட 'கல்கி' இதழில் வயணம் வந்திருந்தது.

அப்பொழுதெல்லாம் குமுதம் இதழ் கூட ஒழுக்கத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.

2.6.11


கருவிளை

Central Institute of Classical Tamil,Chennai has offered a short term project and appointed Dr.S.A.Vengada Soupraya Nayagar as coordinator: Translation of Kurunthogai into French. 2009-2010

16.5.11



என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு. நண்பரின் உழைப்பை உணர்ந்து போற்றுகிறேன்.


தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார்.

அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ:

http://thamizhanambi.blogspot.com

14.4.11

ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
• தேவமைந்தன்

'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை.
இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர். மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர்.
பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன்.
"மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள். பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)"
கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார். திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார். ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ? அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன்.
"திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.]
ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?"
ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம்.
இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:-
அத்வைத விளக்கம்
"எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி
மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!"
சாதிபேதமற்ற நிலை
"கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!"
"மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம்
"மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று"
பயனென்ன?
"காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்
உன்னாசை போச்சோ மூடா.."
வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு
"தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு
தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு
சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு
ஏலேலோ ஏகாந்த ரஸம்!
ஏலேலோ வேதாந்த ரஸம்!"
குயில் கண்ணி
"மனமும் பொய்யடியோ குயிலே
மனக்கூடும் பொய்யடியோ!
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!"
தீட்டு எதிர்ப்பு
"எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்
எச்சில் இலாத இடம்
இல்லை பராபரமே!"
"உலகத்துப் பிள்ளையும் உன்
கக்கத்துத் தீட்டன்றோ?
உன்னுடைய வெட்கத்தை யாரொடும்
சொல்வேன் பராபரமே!"
"தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?"
-இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி,
".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...."
...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்? என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன்.
பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா?
******
இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புத்தகம்:
அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு
மீனாட்சி புத்தக நிலையம்,
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு,
மதுரை - 625 001. பக்கம்:148. விலை: ரூ.55.00
பேசி: அலுவலகம் - 0452 2345971. வீடு - 2560517.
மின்னஞ்சல்: meenakshiputhakam@hotmail.com

நன்றி: திண்ணை.காம்

24.3.11

பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்

"அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!"(My thoughts ran a wool-gathering. - CERVANTES --Don Quixote. 'கம்பளி சேகரிப்பதுபோல்' என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு 'அடடா! எங்கோ போய் விட்டோமே.." என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள்.

பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். 'வெட்டொன்று துண்டிரண்டாக'ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், 'பாரதி நூல்கள் என்று' தனித்தனியாக - பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன. பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின.

களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் - அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன்.

****

ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி.
**
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!
**
எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது.
**
பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும்.
**
யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார்.
**
பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார்.
**
எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.
**
தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள்.
**
சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள்.
**
இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்:
1. அறிவு
2. செல்வம்
3. தைரியம்
தெய்வம் எல்லாம் செய்யும்.
**
நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும்.
நம்பினார் கெடுவதில்லை - இது
நான்குமறைத் தீர்ப்பு.
**
மனிதனைக் கெடுக்கும் உட்பகை - நம்பிக்கைக் குறைவு.
**
தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும்.
**
நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்.
**
தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது.
**
திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.
**
பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம்.
***
மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி'' என்று பெயர் சொல்வதுண்டு.
**
கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது.
**
நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.

கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
"கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.
இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்' என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை --- எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள்.

ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக.

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.

சிவன் நீ ; சக்தி உன் மனைவி .
விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி .


இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.
இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.
**
இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

**
இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே.

****
நன்றி: திண்ணை.காம்

5.1.11



கனவு மெய்ப்பட வேண்டும்!
- முனைவர் பாவலர் க.தமிழமல்லன்

சாப்பாட்டுக் கனவன்று பாரதியார் பாட்டு!
சாதிசொல்லும் கனவன்று மீசைமுறுக்குப் பாட்டு!
நாப்பிறழ்ந்து துண்டுமாற்றி அடிவருடிச் செல்வர்,
நச்சுபுகழ் பாடுகின்ற தீப்பாட்டும் அன்றே!
தீப்பட்ட விடுதலையைக் கனவுகண்ட பாட்டு!
தீராத மடத்தனங்கள் தீர்த்துவிடும் பாட்டு!
காப்பாகத் தமிழுக்குக் கண்டகனாப் பாட்டு!
கற்றதமிழ் வெற்றிபெறக் கதறுகின்ற பாட்டு!

ஆங்கி லத்தில் தருங்கல்வி,
அடிமைக் கல்வி! அதுஇங்கு,
நீங்கக் கனவை அவன்கண்டான்!
நீண்ட சரக்காய் விற்குதடா!
தீங்காம் பேடிக் கல்வியைநாம்
தீர்க்கக் கனவு மெய்ப்படுக!
ஓங்கும் பிறநாட் டறிவியல்கள்
ஒளிர்க! தமிழாய் மெய்ப்படுக!

தெருவெல்லாம் தமிழ்முழக்கம் மிகச்செழிக்கச் செய்யும் -
தேன்கனவு கிழடாகிப் போனபின்னும் இங்கே,
இருந்ததமிழ் ஒழிந்ததுதான் கிடைத்தமிச்சம்! ஐயோ!
இந்தியிலே விளம்பரங்கள், இங்கிலீசில் பேர்கள்,
உருப்பெருத்துக் காணுதடா தமிழ்க்கடையில் இன்றே!
உயிர்த்தமிழே ஆட்சிசெய்ய எத்தனைப்போர் வேண்டும்?
பெரும்பெயர்தான் புதுச்சேரி, அதைவாழ வைக்கும்
பெருங்கனவு மெய்ப்படுநாள் இனிவருமா சொல்வீர்!

(வெல்லும் தூயதமிழ், 2041, சிலை, 2011, சனவரி. ப.2.)

28.12.10

Kichenamourty's Tamil to French latest Translation

Photo: R. Singaravelou
Professor Dr. Kichenamurty is well-known for his Tamil to French translations. He is former Head of the Department of French, Pondicherry University. He was awarded the French Government's Honour of Chevalier in 2005.
His most recent venture is the French translation of the first Tamil novel of Arvind Appadurai, 'Thiru-Chithra-Sadhir.' This was released by Palam Publications at Pudhuvai Thamizh Sangam on 26th December 2010.
In his speech, he highlighted
'Ecole Supérieure d'interprêtes et de traducteurs (ESIT)' view on translation according to which the translation process consists of three stages:
1. Comprehension(Compréhension)
2. Deverbalization(Déverbalisation)
3. Reexpression(Réexpression).
This is to underline the idea that the translator is not always bound to stick to the word-to-word translation.
********
available at:
Paalam Publications Private Ltd.
9, Solai Nagar St.,
Muthiyalpet,
Puducherry 6050003
mobile: 9943793686

21.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! - தமிழநம்பி


இந்த வலைப்பதிவில் தமிழநம்பி ஐயா [ < ஒளிப்படம்] அவர்களின் "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! " என்னும் புதிய கட்டுரையைப் 'படி ஒட்டு' முறையில் 'பிளாக்கர்' புதிய அஞ்சல் ஏற்காததால், இடுகை முழுமை பெறாமற் போனது. ஆகவே அருள்கனிந்து நண்பர்கள் இக்கட்டுரையை http://kalapathy.blogspot.com/ வலைப்பதிவில் வாசித்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்
மேலும் வயணங்களுக்கும் செயற்பாட்டு வேண்டுகோள் மடலுக்கும் பார்க்க:

15.10.10

சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்


பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார்.
(படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in)

1.8.10

ஆனந்த விகடனுக்கு நன்றி!

ஆனந்த விகடன் மாலை 85 மணி 31, 4.8.10 நாளிட்ட இதழின் பக்கம் 19-இல் ‘விகடன் வரவேற்பறை’யில் kalapathy (http://kalapathy.blogspot.com)வலைப்பதிவைப் படித்துப் பாராட்டியுள்ள விகடன் ஆசிரியர் குழுவார்க்கும், புகைப்படக்காரர் குழுவார்க்கும் வடிவமைப்புக் குழுவார்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை உழைப்பை நடுநிலையில் நின்று வாசகர்க்கு அறிவித்த ஆனந்த விகடனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணிநிறைவு பெற்றும் ஓயாமல், புதிதாகக் கணினி - இணையக் கல்வி பெற்று, பின்னர் இப்பதிவைத் தொடங்கி எளிமையான வடிவமைப்பில் பதிந்து வரும் நான் தெரிவித்துக் கொள்ளும் நன்றியும் உண்மையானதே.
அன்புடன்,
அண்ணன் பசுபதி
(தேவமைந்தன்)

5.5.10



சிங்காரவேலர்

- முனைவர் க.தமிழமல்லன்

தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ?
இமிழ்கடல் சிங்காரர் ஏத்து.

உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர்
தரக்கொள்கை நாடுயர்த்தும் தான்.

புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை
உதவுமெனல் வேலர் உரம்.

சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே
நம்தமிழ் நாட்டுக்குத் தூண்.

பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார்
உரியாரின் மாண்பை உயர்த்து.

கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ,
எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து.

மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர்
குறைதீர்க்க வந்தார் குறி.

அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால்
நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து.

சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம்
பங்காளர் ஆவார் பகர்.

பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய்
எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர்.

மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல்
மானத்தின் வாழ்வாய் மதி.

புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர்
புத்தூழி எண்ணத்தைப் போற்று.

Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org

5.2.10

தங்கப்பாவின் தமிழ்ச் சங்க இலக்கிய ஆங்கிலவாக்கம் - பெங்குவின் ௨0௧0 வெளியீடு

'LOVE STANDS ALONE' தமிழ்ச் சங்க இலக்கியம்: தங்கப்பாவின் மொழியாக்க நூல்
- தேவமைந்தன்

திண்ணை.காம் வலையேட்டில் 'மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா' என்ற விரிவான கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பெற்ற 'Hues and Harmonies from an Ancient Literature' என்ற மொழியாக்கத்துக்கு மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பாவின் ஆங்கிலவாக்கத்தில் குறுந்தொகையில் ஐம்பத்தொன்பது பாடல்கள்; ஐங்கூறுநூற்றில் பத்துப் பாடல்கள்; நற்றிணையில் பதினொரு பாடல்கள்; அகநானூற்றில் ஆறு பாடல்கள்; கலித்தொகையில் மூன்று பாடல்கள்; ஐந்திணை ஐம்பதில் ஐந்து பாடல்கள்; ஐந்திணை எழுபதில் இரண்டு பாடல்கள்; திணைமாலை நூற்றைம்பதில் ஒரு பாடல் - என்று அகப்பாடல்கள் தொண்ணூற்றேழும்: புறப்பாடல்கள்(புறநானூறு) எழுபத்தொன்றும் ஆக நூற்று அறுபத்தெட்டு பாடல்கள், தெளிவான ஆங்கில ஆக்கம் பெற்று பெங்குவின்(இந்தியா)நிறுவனத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. தலைப்பு, 'LOVE STANDS ALONE.' அருமையானதொரு பாடலின் ஆங்கிலவாக்கத் தலைப்பு. மற்றவர்களாயிருந்தால் 'Love Alone Stands' என்று பொருளே மாறிவிடும்படி பெயர்த்திருப்பார்கள்.

தங்கப்பாவின் மொழியாக்கத்தைக் கூர்மையாகக் கண்காணித்து, அவ்வப்பொழுது கலந்துரையாடி செம்மையாகப் பதிப்பித்திருப்பவர் அறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி. 'சலபதி' என்று நண்பர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பெறும் கடின உழைப்பாளி. இந்தப் பெங்குவின் வெளியீட்டில் ஆழமானதோர் அறிமுகமும் எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம், சென்னையிலும் புதுச்சேரியிலும் சிறப்பான வெளியீட்டு விழா காணப்பெற உள்ளது. புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், வரும் இருபத்தேழாம் நாள் மாலை வெளியீடு காணப்போவதாக திருவாட்டி தடங்கண்ணி தங்கப்பா கூறினார்.

ஏலவே, அறிஞர் ஏ.கே.இராமானுஜன் முதலானவர்களின் சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கங்களை வாசித்தவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஆக்கம் இது. சென்ற மாத(2010 சனவரி) இறுதியிலிருந்து புது தில்லியிலுள்ள பெங்குவின் பதிப்பகத்திலும் பிற இக்கின்பாதம்ஸ், ஆடிசி போன்ற நூல் விற்பனையகங்களிலும் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்தை மிகுந்த அக்கறையுடன் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருப்பதைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்பொழுதே அறியலாம். அதற்கு முன் பிற மொழியாக்கப் புத்தகங்கள் சிலவற்றையேனும் அவ்வாறு பார்த்திருந்தால் இந்த உணர்வு கட்டாயம் வரும்.

புத்தகம் பற்றிய குறிப்புகள்:

LOVE STANDS ALONE
(Selections from Tamil Sangam Poetry)
translated by M.L. Thangappa.
edited by A.R. Venkatachalapathy.
translation copyright M.L. Thangappa 2010.
introduction copyright A.R. Venkatachalapathy 2010.

Penguin/Viking, India.
pages: 248. priced: Rs. 399.

பதிப்பகத்தின் இணையதள முகவரி: www.penguinbooksindia.com

ISBN 9780670084197


********
karuppannan.pasupathy@gmail.com

26.10.09

‘திருக்குறளும் உலகமும்’ - தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்

-தேவமைந்தன்

‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை திசம்பர் 8, 2008) இடுகை பெற்று மலேசிய நண்பர் சுப.நற்குணன் முதலானவர்களால் பாராட்டப்பெற்ற கட்டுரைக்கும் நாயகரே அ.சிவலிங்கம்.

தன் முதுமை - நோய் எதையும் பொருட்படுத்தாது இவர் எழுதியுள்ள நூல்களே ‘திருக்குறளும் உலகமும்’ இரண்டு பகுதிகள். முதலாவது 262 பக்கங்கள். இரண்டாவது 425 பக்கங்கள்.

உழைப்பிற்காகவும் புதிய அணுகுமுறைக்காகவும் மனமுவந்து பாராட்டத்தக்க புத்தகங்கள் இவை. திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் நோக்குகளைத் தாண்டி உலகச் சிந்தனையாளர்கள் பலர் கருத்துகளையும் ஒப்புநோக்கித் தன் கருத்தாடலை அ.சிவலிங்கம் நிகழ்த்தியுள்ளார். ஆங்கிலத்தில் பெற்ற அறிவும், தன் எழுபத்திரண்டாம் வயதில் அம்மொழியிலக்கியத்தில் பெற்ற முதுநிலைப்பட்டமும், தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் வெளியான நூல்களைத் தேடிப்பிடித்து அவாவிப் படித்த அனுபவமும் இந்தப் புத்தகங்களின் அடித்தளங்கள். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’(மாயூரம் வேதநாயகம் பிள்ளை), ‘அருட்குறள்’ (வீ.ப.கா. சுந்தரம்), ‘திருக்குறள் சர்வக்ஞ’(‘குறள் வழி’ திங்களேடு), ‘மாணிக்கக்குறள்’ (வ.சுப. மாணிக்கம்), Albert Schwitzer’s Biography, ‘An Anthology of Sanskrit Literature,’ ‘Dhammapada,’ ‘Tales from Italy,’ ‘Upanishad’(by Rajaji) ‘Sweet Vietnam’(American Publishing House), ‘Freedom from Necessity’(Bernal, London) போன்ற பன்முகங்கொண்ட இருநூற்று நாற்பத்து நான்கு நூல்கள் முதல் பகுதியிலும்; ரோசலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்,’ ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’(திரு.வி.க.), ‘துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்’(லெவ். ஷெய் னின்), ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’(கார்த்திகேசு சிவத்தம்பி), ‘பிளேட்டோவின் அரசியல்’ (வெ.சாமி நாத சர்மா), ‘ஜோதிராவ் பூலே’(ஜி.பிதேஷ்பாண்டே), ‘Flowers - Fairy Tales’(Anna Sakse), ‘Not Safe To Be Free’(Newyork Press), ‘The Essential Nehru’(Narasimhaiah), ‘Jawaharlal Nehru(Maretyshin, Moscow), ‘Recovery of Faith’(S.Radhakrishnan), ‘Greek Historical Thought’ (Toynbee, New york), ‘The East and the West’(Swami Vivekananda) போன்று பன்முகங்கொண்ட ஐந்நூற்று இரண்டு நூல்கள் இரண்டாவது பகுதியிலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

இந்தப் புத்தகங்களின் திருக்குறள் ஒப்பீட்டு அணுகுமுறைக்குச் சான்று ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்:

“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”
என்ற 430-ஆம் திருக்குறளுக்குப் பின்வரும் ஒப்பீடுகள்:

“ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய நாற்பதாவது வயதில் Euclid வடிவியல் சார்ந்த கணிதம் படிக்க ஆரம்பித்தார். அதைப் படித்தது கணிதத்திற்காக அல்ல; பகுத்தறிவில் பயிற்சி பெறுவதற்காக அதைப் படித்தார்.” (‘Giants of Science’ by Philip Cane)

“தன்னைத் தெரியும் தனக்குத் தெரியும் எனத் தெரியும் அவன் புத்திசாலி. அவனைப் பின்பற்று.”(‘பொன்மொழிகளும் பழமொழிகளும்’ - ரெங்கராஜன் பி.ஈ.)

“மனத்தின் இருளே அறியாமை.”
(ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - ஜெயந்தி மதன், கவிதா பாலு)

“அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால்
ஆண்டவன்கூட அஞ்சிடுவான்
அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண்பெறுவான்.”
(‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்,’
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) [‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் ‘உண்மை ஒருநாள் வெளியாகும்’ என்று தொடங்கும் பாட்டில் வரும் வரிகள்]

“ஒரு முக்கியமான ஆவணம். அவசரமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக ஒரு ஆளையும், குதிரையையும் அதிகாரி அமர்த்தினான். பிறகு அந்த மனிதன் குதிரையை தனக்கு முன்னே ஓடும்படி விரட்டினான். இதைப் பார்த்து ஒருவன் அடக்கமாகச் சொன்னான். அவசரமான காரியத்திற்கு நீ ஏன் குதிரையை சவாரி செய்யக் கூடாது என்று கேட்டான். அதிகாரி சொன்னான்: “நான்கு கால்களை விட ஆறு கால்கள் வேகமாகச் செல்லுமல்லவா?”(Wit and Humour from Old Cathay. Chinese Literature. N.C.B.H. Chennai)

“லியனார்டோ-டா-வின்ஸி தாவரவியல் அறிஞருங்கூட. சில தாவரங்கள் கதிரவனை நோக்கியும் சில கதிரவனின்று விலகியும் வளர்கின்றன. சில தங்கள் வேர்களை நிலத்துக்குள் செலுத்தியும், மற்றவை வெளிப்புறத்தில் வளர்ந்தும் காணப்படுகின்றன. அவர் மரங்களில் கண்ட கணுக்கள் மரத்தினுடைய வயதோடு தொடர்புள்ளவை. மலர்களின் ஓவியங்கள் மூலம் தாவர வாழ்க்கையில் நிலவுகின்ற ஆண், பெண் இனங்களை அறிந்தார்.

சரியான காலத்தைக் காட்டும் கடிகாரத்தை அவர் உருவாக்கினார். இன்னும் தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டு பிடித்தார்.”( ‘Giants of Science’ by Philip Cane) [டான் பிரவுனின் ‘Angels and Demons’ நாவலின் பக்கம் 44-இல், டாவின்சி கத்தோலிக்கப் பாதிரியாராகவும் இயற்பியலறிஞராகவும் குறிப்பாக ‘Theo-physicist’ ஆகவும் விளங்கினார் என்ற குறிப்பை நண்பர்கள் படித்திருப்பீர்கள். - தேவமைந்தன்]

“நம்முடைய அறியாமைதான் கடவுள். நாம் அறிந்து கொள்வது அறிவியலே.

மனிதன் பெரிய மிருகங்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். மெல்ல மெல்ல பயத்தினின்றும் எழுந்தான். ஆற்றலில் எல்லா மிருகங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தான். இந்த நிலைமையை மனிதன் உடல் வலிமையினால் அடையவில்லை. யானை அவனை விட பன்மடங்கு வலிமை உள்ளது. தன் அறிவினாலும், பகுத்தறிவினாலுமே மனிதன் இந்த உயர்ந்த நிலைமையைப் பெற்றான்.”(ஜவஹர்லால் நேரு)

“புலன்களின் உணர்ச்சியே அறிவின் தோற்றுவாயாகும். இந்த உணர்ச்சி மூளை அல்லது அதைப்போன்ற உட்பொருளின் இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல. மூளையில் அல்லது அதைப் போன்று தலைக்குள் இருக்கும் வேறு ஒரு பொருளின் இயக்கத்தையே நாம் மனம் என்கிறோம். எண்ணங்களும், பிரதிபிம்பங்களும், மூளை, இதயம் ஆகியவற்றின் இயக்கங்களேயாகும். அதாவது, பெளதீகப் பொருள்களின் இயக்கங்களே ஆகும். பெளதீகப் பொருள்களும், இயக்கமும் அடிப்படைச் சக்திகளாகும். அவை உலகத்தின் ஒவ்வொரு பொருளையும் - உயிரற்றவைகளையும், உயிர் உள்ளவைகளையும் - விளக்கிக் கூறப் போதுமானவையாகும்.” (ராகுல சாங்கிருத்தியாயன், [ஐரோப்பிய தத்துவயியல்])

“பலர் தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி அந்தச் சிறையின் திறவுகோலை கையில் வைத்துக் கொண்டு தமக்கு அப்பாற்பட்ட கடவுளை கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் திறவுகோல் இருப்பதை உணராது மயங்கிப் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.”(‘புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை.’ நா.திருவள்ளுவர். திருச்சி-5)

“அறிவு வேண்டுகிறேன். எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்து கொள்ளும் நல்லறிவு வேண்டுகிறேன்.”
(‘பாரதியின் இலக்கியப் பார்வை.’ இளஞ்சேரன், கலைக்குடில், நாகை.)

“கடுங்குற்றங்கள் புரிவோர் மந்தபுத்தி உள்ளவர்கள்.”(D.N.Pritt)

“இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறிது அறிவாளியாக நான் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அறிவு என்பது நழுவும் தன்மையது. அதைக் கொள்வது எளிதில் முடியாது. எனினும் சில சமயங்களில் திடீரென்று நமக்குத் தெரியாமலேயே வரும். நான் அதனுடைய உண்மையான பின்பற்றுபவன். அதனுடைய நல்லெண்ணத்தைப் பெற முயல்பவன் என்று நேரு கூறினார். (கிருஷ்ணா ஹதீசிங். ‘Indian Autobiographies’)

“எங்கெல்ஸ் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற இயற்பியலாளரை விட மிகவும் சரியாக ஒரு பொருளினின்றும் ஆற்றலைப் பிரிக்க முடியாதெனக் கண்டார். இந்தக் கொள்கை நீண்ட காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீனுடைய சார்பு நிலைக் கொள்கைக்குக் கொண்டு சென்றது. எங்கெல்ஸின் இச்செயல் அறிவியலுலகத்திற்கு முன்னரே தெரிந்திருந்தால் பல சிக்கல்களைக் களைந்திருக்க லாம்.”(‘Freedom from Necessity’)

“செய்யுள் இயலில் உள்ள ‘மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று’ [எண் 1337] என்ற சூத்திரத்திற்கு பேராசிரியர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார். அவர் கூறுவதாவது: ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலும் உடையதாகலின் அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்து உளவாகி இக்காலத்து இலவாகின! செய்யுள் மரபென்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகையான சொற்களைக் கொண்டு செய்யுளை அமைப்பது.”(‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ A.V. சுப்பிரமணிய ஐயர், சென்னை - 14)

“குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாய் உணர்வுகள் கீழ்நோக்கிச் செல்வதும் கீழே இறங்கிக் கீழேயே தங்கி விடுவதும்தான். தொப்புளுக்குக் கீழே உள்ள இடம் பிங்கலை நாடியால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. இதனால் மன அமைதியும் மனத் தெளிவும் குறைகிறது. இதுவே குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாயாக அமைகிறது.”(‘புதிய மனிதன், புதிய உலகம்.’ ஆசாரிய மகாபிரகய, சென்னை - 79)

இதுவரையிலும் நாம் பார்த்தவை அனைத்தும் ஒரே ஒரு திருக்குறளுக்கு(குறள் எண்: 430) அ.சிவலிங்கம் தந்துள்ள ஒப்பீடுகளும் விளக்கங்களும் ஆகும்.(திருக்குறளும் உலகமும்-2. பக்கங்கள்: 151-153)

எண்பத்தைந்து வயதில், உடல்நலங்குன்றிய நிலையில், உளநலங் குறையாமல் தொடர்ந்து பல துறைகளைச் சார்ந்த பன்முகங்கொண்ட புத்தக வாசிப்பை விடாமல் செய்பவர் அ.சிவலிங்கம். படித்தவற்றுள் முகமையானவற்றை ஏட்டில் குறித்து வைத்துக் கொள்பவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவற்றை ஏற்ற வகையில், வாசிப்பவர் பயன் பெறுமாறு நூல்கள் ஆக்குபவர். எளிய பணியாளராக அஞ்சல் துறையில் பணியேற்று, தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1955இல் கண்டு பிடித்து இராஜாஜி முதலிய தலைவர் பலரின் பாராட்டைப் பெற்றவர். முதலில் புலவர் பட்டமும் எழுபத்திரண்டாம் வயதில் ஆங்கில முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

‘திருக்குறளும் உலகமும்’ என்ற இந்தப் புத்தகத்தின் இரண்டு பகுதிகளும் கிடைக்குமிடம்:

திருமதி சு. மனோன்மணி,
தமிழ்த்தந்தி இல்லம்,
3, அன்னை தெரசா தெரு,
சேஷசாயி நகர்,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி - 21.

விலை:
முதற் பகுதி: ரூ.75.
இரண்டாம் பகுதி: ரூ.175.

********
நன்றி:திண்ணை.காம்

21.10.09

'தான்' என்ற வடிவில் கொடுமையின் வித்து

தான் பெரியவனாகக் காட்சியளிக்க வேண்டும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன் வாகுதோதுகள் முன்னிற்க வேண்டும். குமுகாய நிலயில் தாழ்ந்தவராகத தான் கருதுபவர்கள் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; அவர்கட்கென்று தனிக் கருத்துத் தனிச் செயல்முறை இருத்தல் கூடாது. தான் சொன்னபடி அவர்கள் ஆடவேண்டும். இந்த உணர்வுதான் மறைமுகமாகப் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் முற்றிய நிலைதானே வலியவன் மெலியவனை ஒடுக்கக் காரணமாக இருக்கின்றது? சிங்களனைப் போன்ற பேரின வெறியன் வலிமை பெற்ற காரணத்தால் வலிமையற்ற தமிழர்களை அழித்தொழிக்கக் காரணமாக நிற்கின்றது.

குமுகாயம் இப்படியே போய்க் கொண்டிருக்குமானால் எத்தனைப் பெருங்கொடுமைகளை, எத்தனைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்! இணக்கமின்மையின் வித்து, கொடுமையின் வித்து, இனப்படுகொலையின் வித்து, தனிமாந்தன் ஒவ்வொருவனுக்குள்ளும் 'தான்' என்ற வடிவில் புதைந்து கிடக்கின்றது. அது வலிதாக வளர்ந்து முள் மரமாகி விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

- பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
ஆசிரியவுரை,
'தெளிதமிழ்,' 17.09.2009(தி.ஆ.2040, கன்னி, க)