16.7.12

சொந்த வேர்கள்


சொந்த வேர்கள்

அன்புமிக்க தோழி!
வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன;
அவரவர் விளக்கம் தவிர்ப்பாய்!
பிறர்சார்ந்து வாழும்வரை
வாழ்க்கைக்குப் பொருளில்லை!

நமக்காகப் பிறர்முடிவை
எடுக்கு மட்டும்
நம்கையில் நம்வாழ்க்கை
இருப்ப தில்லை

கற்றகல்வி நலம்வீசும்
விழிகளினால் உன்வாழ்வை
எதிர்நோக்கு!

இதுவரை இருந்தஉன்
ரமான விழிமாற்று!

நயமுள்ள கவிதைகள்
நயங்காண எவரையும்
எதிர்பார்க்க மாட்டா!

எதிர்வந்து சுழலும்
வெளிச்ச மெய்ம்மைகள்
வழிகாட்டும் உனக்கு.

பொருளியல் விடுதலைதான்
காலூன்றச் செய்யும்!

தன் சொந்த வேர்களால்
இந்தமண் ஊடுருவி
நிற்பதுவே பேரின்பம்!


பாவலர் தேவமைந்தன் (பேரா.அ.பசுபதி)
புதுச்சேரி

Thanks to Poet Raja Thiagarajan who published this poem in his ezine 'pudhucherry.com'(Poems this month)

மைனாக்களின் சண்டை

ஊருக்குப் போயிருந்தேன்;
ஒருநாட் காலையிலே,
தூக்கம் கலையாமல்,
தோப்பும் துரவுமெலாம்
தாண்டிப் போனேனா?
இடிந்த மதகிருக்கும்;
ஒடிந்த கிளையொன்று
வேம்பில் தொங்குகின்ற
அடிமரம் அருகினிலே
ஆடுகள் மேய்ந்திருக்கும்;
படைக்கால் விழுந்தெழுந்தால்
பாறைகள் கனத்திருக்கும்;
பாறைகள் சூழ்ந்திருக்க
படைக்கால் சருகிருந்து
காடைகள் பறந்தேகும்;
இரட்டைக்கால் பனைமரத்தின்
கருத்துச் சொரசொரத்த
உடலை அணைத்திருக்கும்
மரத்தின் பல்லியொன்றோ
ஏறுவெ யில்அஞ்சாமல்
மோனத் தவமிருக்கும்;
ஆடுகள் ஒவ்வொன்றாய்
தைக்கால் தொறும்நிரவி
தோன்றும் அணைப்பெல்லாம்
மேய்ந்தே திரிவதில்தாம்
ஓயாக் காலிடையே
திடுமென மைனாக்கள்
விழுந்தும் துடித்தெழுந்தும்
கட்டிப் புரண்டுவீழ்ந்தும்
அலகுப் பிச்சுவாளின்
கலகம் சிறகுபுய்க்கச்
சண்டை போடுமுன்பே
சுண்ணத் தெளிவதனை
ஒதுக்கிப் பனங்கள்ளுத்
தெளிவை மிகமாந்திக்
களிப்பால் செருக்குறும்காண்!
ஆடுகளோ சற்றுந்தாம்
அலட்ட லின்றிமேயும்.
வாய்கள் பிளந்திருக்க
ஓயா இரைச்சல்தான்!
ஒன்றின் மேலொன்று
குன்றா மல்பாய்ந்தே
கொடிய போர்புரியும்;
அணைப்பை விட்டின்னோர்
அணைப்பில் விரவியின்னும்
மைனாச் சண்டைதான்
கூட்டம் முழுவதும்
பண்டைக் காலம்போல்
ஒன்றும் மற்றொன்றும்
தனித்துப் போர்புரிந்து
மோதச் சளைக்காதே;
மாந்தர் மகிழலாம்"நாம்
மைனாக் கூட்டம்போல்
இருத்தல் இயற்கைதான்.....
சரிதான்!" என்றே.


புதுச்சேரி - மின்னிதழ்