21.12.08

தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்- தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி)

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன் உருவாக்கக் கூடாது என்று இந்திய அரசின் தந்தித் துறையில் பணியாற்றியவரும் அன்றைய வித்துவான் பட்டம் பெற்றவருமான அ. சிவலிங்கம் 1945இல் சிந்தித்தார். விளைவாக, தமிழ் எழுத்துகளுக்கு உரிய மோர்ஸ் ஒலிக்குறியீடுகளை உருவாக்கினார்.1956ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் நிகழ்ந்த இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டில் செய்தியாளர்கள், தந்திமுறை பற்றி அறிந்தவர்கள், பயனாளர்கள், இது குறித்து அதுவரை எதுவும் அறிந்திராத பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் தந்தி அனுப்ப - தான் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளுக்கான மோர்ஸ் சங்கேதக் குறிகளைக் கொண்டு புலவர் அ. சிவலிங்கம் செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பொழுது புதுக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரசுராமன் என்பவருடைய துணையுடன் தமிழிலேயே தந்தி விடுத்தும் பெற்றும் காட்டினார். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை அவர் செயலாக்கினார் என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் அருமை புரியும். தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் த. நாராயணமூர்த்தி தமிழ்த்தந்தி நடைமுறைக்கு வர ஆற்றிய அரும்பணியையும் தினமணி சுடர் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டது. அ. சிவலிங்கனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் த. நாராயணமூர்த்தி.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடந்த தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினார்.இப்பொழுதும்கூட உலகமுழுதும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு முறையில் ஆங்கில எழுத்துகளின் வழியாகத் தமிழில் தட்டெழுதும் முறை உள்ளது. இதேபோல சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதுதான் தமிழ்த் தந்தி என்று பலரும் நினைத்தார்கள். "அது தவறு; தமிழிலேயே சங்கேதக் குறிகளைப் பயன்படுத்தி தமிழில் தந்தி அனுப்பலாம்!" என்று புலவர் அ. சிவலிங்கம் எண்பித்தார்.முப்பத்து மூன்று ஒலிக்குறியீடுகள் மூலமாக தமிழில் தந்தி அனுப்பவோ, பெறவோ இயலும் என்ற புதிய முறை, புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்தது. எண்களுக்கு மட்டும் ஆங்கிலக் குறியீடுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். வாழ்த்துத் தந்திகளும் எண்களுக்கேற்பத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றன. மோர்ஸ் உருவாக்கிய தந்திமுறையைக் கற்றவர்கள், இவர் அமைத்த முறையைப் பதினைந்து நாள்களுக்குள் கற்றுக்கொள்ள இயன்றது.புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்த தமிழ்த் தந்தி ஒலிக்குறியீடுகள் தற்பொழுது பயன்படுத்தப் பெறுவதில்லை. "என்றாலும் தமிழில் தந்தி அனுப்புவதற்கான முதல் தொழில் நுணுக்க உத்தியை உருவாக்கியவர் அவர்தான். அவரது கனவு இப்பொழுது நனவாகிறது" என்று தினமணி சுடர் 15/01/1994 இதழ்(பக்கம் 22-இல்) தெளிவாகக் குறிப்பிட்டது.தமிழ்த் தந்தி முறை குறித்து அப்பொழுது இந்திய நடுவண் அரசில் தபால் தந்தித் துறை அமைச்சராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் என்ன சொன்னார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.ஆனந்த விகடன் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழில் ஏன் கூடாது?தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் தந்தி அனுப்ப வாய்ப்பும் வசதியும் இருப்பதுபோல் தமிழிலும் தந்தி அனுப்பும் முறை கொண்டு வரப்பட வேண்டுமென்ற யோசனையைத் தபால் மந்திரி டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் 'தேவையற்றது' என்று சொல்லி நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது."இத்தகைய கோரிக்கையினால் நாட்டில் பிளவும் பிரிவினை உணர்ச்சியும்தான் ஏற்படும். இம்மாதிரியான மொழிவெறி சுதந்திரத்துக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறுகிறார்.திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, திரு அப்துல் சலாம், மந்திரி அவர்களைச் சந்தித்து தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மந்திரி முன் அ. சிவலிங்கனாரும் அவருடைய பதினான்கு அகவை மகன் தமிழ்ச்செல்வனும் தமிழ்த்தந்தியைச் செயற்படுத்திக் காட்டினார்கள். ஒரு சிறுவன் அதில் கலந்து கொண்டதைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.அப்போதுதான் மந்திரி சுப்பராயன் அவர்கள் மொழிவெறியின் அபாயத்தைச் சுட்டிக்காட்டி, தமிழில் தந்தி அனுப்பும் முறை தேவையில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் தந்தி அனுப்பும் வசதி வேண்டுமென்று கோருவது எவ்வாறு மொழிவெறியாகும் என்பதுதான் விளங்கவில்லை.தந்தி தபால் போன்ற வசதிகள் படித்துப் பட்டம் பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தான வசதிகள் அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டிய வசதிகள். ஆகவே பெரும்பாலான மக்களுக்கு நன்கு பழக்கமுள்ள மொழியில்தான் தந்தி அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.ஒரு கிராமவாசி ஒரு தந்தி அனுப்புவதற்கோ, வந்த தந்தியைப் படித்துப் புரிந்து கொள்வதற்கோ ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்த பட்டதாரியைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு தடவையும் ஓட வேண்டுமென்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமில்லை............................................ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி ஆட்சி மொழியாகி விட்டது. நிர்வாகம், கல்வி, வர்த்தகம் எல்லாமே தாய்மொழியில் நடக்கும்போது, செய்தியை அனுப்புவதற்கு அந்த மொழி தேவையில்லை என்று சொல்வதுதான் குறுகிய மனப்பான்மையாகும். தந்தி அனுப்ப ஆங்கிலமே போதுமென்றால் இந்தியில் மட்டும் அதற்கான வசதி அளிக்க வேண்டிய அவசியமென்ன? உண்மையில் தபால் தந்தி இலாகாவின் பொறுப்பு, மக்கள் ஒருவருக்கொருவர் செய்தி தெரிவித்துக் கொள்வதை எளிதாக்குவதுதான். தேச ஒற்றுமையை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.தாய்மொழி மீது அளவுகடந்த வெறி கொண்டு யாரோ சிலர் அர்த்தமற்ற கோரிக்கைகளை விடுக்கிறார்கள் என்பதற்காக தாய்மொழி சம்பந்தமான எந்தக் கோரிக்கையையுமே மொழி வெறி என்று சொல்லி நிராகரிப்பது முற்றிலும் நியாயமல்ல."ஐம்பதுகளின் ஆனந்த விகடன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கையில், 15/01/1994 தினமணி சுடர் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழ்த் தந்தி முறை தமிழகத்திற்குப் பயனளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பரிசீலனை செய்யுமாறு அப்போதைய தபால் தந்தி இலாகா அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுவிட்டது."எவ்வளவு காலந் தாழ்த்தப் பட்டிருக்கிறது? முப்பத்தெட்டு ஆண்டுகள்.கடைசியில் தினமணி சுடர் (சனவரி 15, 1994. பக்கம் 22) குறிப்பிட்டது:".......தமிழில் தந்தி தமிழர்களுக்குப் பொங்கல் நாளில் கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது.""தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்த் தொலைவரிமுறை கண்டுபிடிப்பு, பாராட்டுரை" என்ற முடங்கலில் 1998ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பின்வருமாறு மொழிந்திருக்கிறார்:"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கை. தமிழால் முடியாததில்லை என்பதைத் துறைதோறும் அறிஞர் பலர் எண்பித்துக் காட்டியுள்ளனனர். காட்டியும் வருகின்றனர். இவ்வகையில் புலவர் அ. சிவலிங்கனாரின் பணி போற்றத்தக்கதாகும். 1945ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியாற்றிய புலவர் அ. சிவலிங்கனாருக்கு நம் அன்னைத் தமிழில் தொலைவரி அனுப்பும் முறையைக் கண்டுபிடிக்க முடியாதா? எனும் ஏக்கம் பிறந்தது. எப்போதும் இதே சிந்தனை. இரவு பகல் பாராது உழைத்தார். 1955ஆம் ஆண்டு அவர் கனவு நனவாகியது. 13.08.1956 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அஞ்சல் துறைப் பணியாளர் மாநில மாநாட்டிலும், 07.10.1956 அன்று குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் தமிழில் தொலைவரிச்செய்தி அனுப்பும் முறையைச் செயற்படுத்திக் காட்டினார். கொடுத்த தமிழ்ச் செய்திகளை அப்படியே வாங்கி அனுப்பியும் காட்டினார். அனைவரும் வியந்து பாராட்டினர். அயல்நாடுகளின் செய்தித் தாள்களும் அளவின்றிப் புகழ்ந்தன. இச்செயற்பாட்டை நேரிற்கண்டு மகிழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழ்த் தந்திக் கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்திமுறை செயற்படுத்தப்படுமானால் அதனால் வரும் புகழுக்கு அ.சிவலிங்கம் தனியொருவரே உரியவர்.மொழி ஞாயிறு திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கும் அரசியலார் இம்முறையை உடனே கையாள்வதுடன், திருவாளர் அ. சிவலிங்கனார்க்குத் தக்கதொரு பெரும் பரிசும் அளித்தல் வேண்டும். அது அவர் கடன்.இவ்வகையில் தமிழில் தொலைவரிச் செய்தி தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த புலவர் திரு. அ. சிவலிங்கனாரின் அரும்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையையும் இப்பாராட்டுரையையும் தமிழக அரசு வழங்கி மகிழ்கிறது.(ஒப்பம்:........முதலமைச்சர். சென்னை 600 009. நாள் 24.12.1998.)திருவள்ளுவர் ஆண்டு 2029, வெகுதான்ய, ஐப்பசி 28: ஆங்கிலம் 13-11-98 ஆம் நாளிட்ட அரசாணை எண் 114இல், "முதன்முதலில் தமிழில் தந்தி முறைக்கு வித்தூன்றிய புலவர் திரு அ. சிவலிங்கம் அவர்களை அரசு பாராட்டி சிறப்பிக்க வேண்டுமென்றும், பாராட்டி பணமுடிப்பு வழங்க ரு.50,000/-மும், தகுதியுரை, பொன்னாடை போன்றவை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2500/-ம் ஆக மொத்தம் ரூ.52,500/- ஒப்பளிப்புச் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்" என்று கண்டுள்ளது.ஏன் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் என்றால், தமிழ்நாட்டுக்கே உரியதொரு வழக்கத்துக்கேற்ப, 1956-ஆம் ஆண்டு தமிழில் தந்தி முறையை முப்பத்து மூன்று ஒலிக்குறிகளில் இயக்கக் கூடியதாக முதலாவதாக இவர் கண்டுபிடித்து உலகறிய வெளிப்படுத்திய ஒலிக்குறியீடுகளைச் சிறிது திருத்தியும் மாற்றியும் மற்றவர் தமிழில் தந்தி அனுப்பும் முறையை உருவாக்கி நடுவணரசிடம் பெயர் பெற்றதுடன், அதன் அடிப்படையில் தந்தி அனுப்பும் முறை தொடங்கியமையாலேயே இத்தனை வயணங்கள் வேண்டப்பட்டன. இதனால், கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டு மன உளைச்சல் பட்டும் உழைத்து, விடாது முயன்று, சான்றோர் துணையுடனும் எத்துறையிலும் இடம்பெறக்கூடிய நல்லவர்கள் உதவியுடனும் தமிழ்நாட்டரசின் ஆதரவும் பெற்று தாம்தாம் முதன்முதலில் தமிழ்த்தந்தியின் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்தமையை நிறுவ வேண்டிய கடப்பாடும் புலவர் அ. சிவலிங்கனாரைச் சேர்ந்து கொண்டது. இதைக் கேள்விப்பட்டதாலேயே என்னைப் போன்ற பலருக்கு இவர்பால் மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டன.அறிஞர் அண்ணா, சி.ராஜகோபாலாச்சாரியார், காயிதே மில்லத் இஸ்மாயில், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன், கலைஞர் கருணாநிதி, இந்திய அஞ்சல் தொலைவரித் துறை டைரக்டர் ஜெனரல் நஞ்சப்பா, குல்கர்னி முதலானோர் அறிய தமிழ்த் தந்தி முறையை வெற்றியாகச் செயற்படுத்தி பாராட்டுப் பெற்றார்.தமிழ்த் தந்தி முறையை உருவாக்கியது இவர்தம் சாதனை என்றால் தொழிற்சங்கத் தலைவராக விளங்கியது, பல ஊர்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தியது, திருக்குறளை இசையோடு பயின்று மேடைகளில் பாடியது, 'தமிழில் தந்தி' 'உலகக் கவிதைகள்'(இந்த நூலைக் குறித்த தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையை உலகத் தமிழர்கள் ஈடுபாட்டுடன் வாசித்து வரும் திண்ணை.காம் வலையேடு வெளியிட்டது) 'திருக்குறளும் உலகமும்' போன்ற சிறந்த நூல்களை எழுதியது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான்கு நூல்களை என்.சி.பி.எச். சார்பாக மொழியாக்கம் செய்தது, சோவியத் யூனியன் பரிசுகளை வென்றது முதலான பன்முகச் செயற்பாடுகள் இவருடையவை என்று பாராட்டலாம்.புலவர் பட்டத்துடன் ஆங்கில முதுகலைப் பட்டமும் பெற்ற திரு அ. சிவலிங்கனார் திருச்சிக்காரர். 26.05.1924 அன்று கள்ளக்குறிச்சியில் அப்பாஜி - சம்பூர்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1944இல் காரைக்குடியில் அஞ்சல் எழுத்தராகச் சேர்ந்தார். தந்திப் பயிற்சி அரசுப் பள்ளியில் 1945இல் பெற்றார். கரம்பக்குடியில் அஞ்சலகத் தலைவராகப் பணியாற்றியபோது, 1955இல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார்.தற்பொழுது எண்பத்து நான்கு அகவையானாலும் புதிய புத்தகங்களையும் இணையப் படைப்புகளையும் வாசிப்பதில் தளராத ஈடுபாடு கொண்டுள்ள தமிழ்த்தந்தி சிவலிங்கனார் முகவரி:புலவர் அ. சிவலிங்கம், எம்.ஏ.(ஆங்கிலம்)தமிழ்த் தந்தி கண்டுபிடிப்பாளர்,சி-28, தமிழ்த் தந்தி இல்லம்,சேஷசாயி நகர்,க.க.நகர், திருச்சி -21.அ.கு.எண்: 620 0௨௧

********

karuppannan.pasupathy@gmail.com

17.12.08

பாவலர் இலக்கியனின் ‘பாவேந்தர் புரட்சி நூறு’(பாக்கள்)
-பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் உணர்வுமிகுந்த அணிந்துரையும் தமிழுணர்வு மிகுந்த பதிப்பாளர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் பதிப்புரையும் சூழ, முன்னுரையிலேயே ‘பாவேந்தர் புரட்சி நூறு’ என்னும் தன் பாத்தொகை நூலுலகில் நின்று நிலவும் என்பதற்கான கரணியங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நம்முன் வைத்துவிடுகிறார் பாட்டறிஞர் இலக்கியன்.

உலகப் பாவலர்களின் வரிசையில் முகாமை தரப்பெற வேண்டியவர் பாவேந்தர்; அவரே புரட்சியின் வடிவம்; ஒரு வரலாறு; சுவைமிக்க பாவியம்; ஒரு வழிகாட்டி; ஒரு கலங்கரை விளக்கம்.

அவர்தம் படைப்புகள் திருத்தமான வாழ்க்கைக்குத் திருப்புமுனைகளாகும் - இருள்படிந்த வாழ்க்கைக்கு ஒளிவிளக்குகளாகும் - நம்மைக் கரைசேர்க்கும் பாட்டுப் படகுகளாகும்.

பாவேந்தர் புரட்சியே தமிழுக்கு உரிய இடம் அளிப்பதுதான். பாவேந்தர் புரட்சிநூறு என்னும் இந்நூலில் உள்ள கருத்துகள் என்றைக்கும் தேவைப்படுவன.

மாந்தநேயம், பகுத்தறிவு, தமிழுணர்ச்சி என்ற மூன்றும் பாவேந்தரால் மிகுதியாக வலியுறுத்தப்பெற்றவை. இவை மூன்றையும் தமிழர்கள் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்க்கை ஏது?

பாவேந்தருடைய அரிய வாழ்க்கை நிகழ்வுகளும் புரட்சிகளும் இந்நூலில் பாக்களாக்கப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன. அவர் சுட்டிய வாழ்க்கை நெறிகள் பொன்னகையில் மணிகள் பொதிந்துவைத்தாற்போல ஆங்காங்கு சுட்டப்பெறுகின்றன.

அடிப்படையில் மாந்தரை ஆட்டிப்படைப்பது கடவுள் நம்பிக்கை ஆகும். அதிலிருந்து மதம் தோன்றி ஆத்மா மோட்சம் நரகம் முதலானவை கிளைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றை அடிப்படையிலேயே மறுத்தவர் பெரியார். ‘வெங்காயம்’ என்ற ஓர் ஒற்றை இயற்கைப் பொருட்சொல்லால் இவற்றைச் சுழற்றிச் சுருட்டிக் குளிகை உருவமாக எங்கும் பேசி வந்தார் பெரியார். அதுகுறித்த பெரியார் சொற்கள்:

“எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்: மடலம்-2, வே. ஆனைமுத்து பதிப்பு, 1-7-1974; பக்கம் 1063.)

முன்னாள் கடவுளை ஏற்று, பின்னாளில் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதிதாசனார் என்ற பாவேந்தர் குறித்த தரவு பயின்று வரும் ‘புரட்சி மின்விசை’[ப.56] என்னும் 44-ஆம் பாட்டுக்குக் கரணியம், பெரியார்வழியைப் பின்னாளில் பாவேந்தர் போற்றியதேயாகும். இதே தரவானது சற்றும் மாறுபடாமல் ஏற்ற இடங்களில் இப்பாத்தொகையுள் பரந்து கிடக்கிறது. [தலைப்புகள் 5,19,21,44,50,63:பக்.17,19,33,62,75.] “தமிழர்கள் செய்த தவப் பயனாகக் கடந்த 2000 ஆண்டுகட்குப் பின்னர் நமக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார். அவரால்தான், வீழ்ச்சியுற்ற நம் வாழ்வு வளம் பெற முடியும்” என்று அவர் தம் தலைமையுரை ஒன்றில் முழங்கியமை குயில் [2-1;நாள்:9-6-1959] இதழில் பதிவாகியுள்ளது.(பாவலர் இலக்கியன், பாவேந்தர் குயில் ஓர் ஆய்வு, பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை-5. திசம்பர்,1989. ப.143.)
பாவலர் இலக்கியன் வரிகள்:
“கடவுளை ஏற்றவர்! பின்னாள் உணர்ந்து
கடவுளை மறுத்தவர் பாரதி தாசனார்.”
அத்துடன் நிறுத்தினால் பாவேந்தரின் தனித்தன்மை புலப்படாது. மேற்படி கடவுட்கொள்கையில் ‘பிழைக்க’த் தெரிந்த பிறர் செய்தி என்னவாம்?

“கடவுளை மறுத்துப் பின்னாள் பிழைக்கக்
கடவுளை ஏற்று வாழ்ந்த வரும்,பலர்!”
அதனால் எந்தப் பயனும் நாட்டுக்கு விளையவில்லை. அதனால் புரட்சி மின்விசையையே நாட்டுக்குத் தந்தார் பாவேந்தர் - என்பதை,

“வண்ணம் மாறினால் வருமோ புரட்சி?
எண்ண மாற்றமே எழுப்பும் புரட்சியை!
மன்பதை மலர மாபெரும் புரட்சி
மின்விசை தந்தவர் விளங்குபா வேந்தரே!”
என்றவாறு தெரிவிக்கிறார் பாவலர் இலக்கியன்.

[மங்காத் தமிழின்] மாண்புறு பாவலன், எங்களின் ஏந்தல்[ப.57], தனிப்பெரும் பாவலன், தமிழ்த் தொண்டன், தமிழிசைக் காவலன், படத்துறைப் பாவலன், பாட்டுத் தலைவன், மக்கள் பாவலன், [உழைப்பவர் உறுதுயர் தீர்த்திட]அழைப்பு விடுத்தவன், சேவற்குரலோன், எரிகதிர்ப்பாவலன், [தன்னலம் துறந்த] தமிழின் வள்ளல் போலத் தன் இயல்பாலும் செயல்திறத்தாலும் தகுதியாலும் தனித்தன்மையாலும் பணிச்சிறப்பாலும் புரட்சி மனத்தாலும் போர்க்குணத்தாலும் பாவேந்தர் பெற்ற சிறப்புக்களைத் தன் இந்நூலின் தலைப்புகளாக்கியுள்ளார் பாவலர் இலக்கியன்.

மற்றவற்றைக் காட்டிலும் பாவேந்தரைப் புரட்சியின் எழுச்சியதன் இயல்பாகப் படிமநிலை(imagery)யில் காணும் பாவலர் உள்ளம் இதோ:

“தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர் தன்னில்
வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்
ஏந்துகோட் டியானை எழுந்தாற் போல
அழுந்திய பழமைக் களரினை யகற்றிப்
பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்
எழுந்தனன் ஈங்கே! எழுந்தது புரட்சி!
விழுந்தது மடமை! விளங்கிய தறிவே!
தொழத்தகு தமிழொளி தோன்றி
எழுச்சி தந்தது எந்தமி ழோர்க்கே!”

புரட்சியின் எழுச்சி தோன்றுமிடம் - ஊர், எத்தகையதாய் விளங்க வேண்டும்? ‘தீந்தமிழ்ப் புதுவைத் திருநக’ராய் விளங்க வேண்டும். அதன் இயல்புகள் நவிலப்பெறும் பாத்திறம் இதோ:
“அலைகடல் விளங்கும் அழகிய மூதூர்!
கலைபல வலர்க்கும் கவின்மிகு பேரூர்!”
மறுக்க முடியுமா? மறுக்க மனம் வந்தால் அந்த மனம் யாருக்குச் சொந்தம் தெரியுமா? பாவேந்தர் கூற்றின்வழிப் பார்ப்போமா?
“மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழையென
இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த
வாய்ப்பில்லார் தம்மை,அவர் வைப்பாட்டி மக்களை
ஏற்கமாட் டோம்தமிழர் என்று”
(பாரதிதாசன் பன்மணித் திரள், சென்னை, 1-8-1963)
என்று பாவேந்தர் ‘தமிழர்’ என்று ஏற்க மறுத்தவர்க்குச் சொந்தம் அந்த மனம். இன்னும் புதுவையின் இயல்புகள், இயல்பாய் இலக்கியன் பாவரிகளாய் வருகின்றன:
“தொலையா நல்லிசைத் தொல்லோர் மரபினர்
விலையிலாப் பனுவல் விளைக்கும் சீரூர்!”
-உண்மை. பரப்பளவு, மக்கள் தொகைக் கணக்கை வைத்துப்பாருங்கள். சுண்டைக்காய் மாநிலம் என்று பூசுணைக்காய்கள் சொல்லும் இந்தச் சிறிய, இந்திய ஒன்றிய எல்லையில் மட்டும் இந்நூல் உட்பட எத்தனை நூல்கள் தமிழ்க் கழனியில் விளைகின்றன என்ற கணக்கெடுத்துப் பார்த்தால் மலைத்துப் போய்விடுவார்கள் மற்றவர்கள்.

இயற்கை நலம், இனித் தொடர்கிறது:
“நெய்தலும் மருதமும் நெடிது விளங்கும்!
பெய்யும் மழையினாற் பெருவளஞ் சேரும்!
நன்னீர் ஊற்றுகள் நலம்செயும்; எங்கும்
பொன்னிறக் கொன்றை பூத்துக் குலுங்கிடும்!
செம்புலம் ஒருபுறம் சிறந்து தோன்றும்.
வெம்மை தணிக்கும் வியன்பொழில் சூழ்ந்தே!
நேருற விளங்கிடு நெடிய மறுகுடன்
ஏர்பெற நிவந்த எழில்மா ளிகையொடு
மரம்பல செறிந்து மாநிழல் தந்திடும்!”

கழககால ஒளவைசொன்ன “அவ்வழி நல்லை வாழிய!” தொடர்கிறது:
“கரவிலா நெஞ்சினர் கனிவுடன் வந்தவர்க்
கீந்தும் இன்விருந் தோம்பியும் வாழ்ந்திடும்
தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர்”
-இத்தகைய திருநகரில்தானே ‘ஏந்துகோட் டியானை எழுந்தாற் போலே’ ‘வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்’ ‘பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்’ புரட்சியே எழுந்தாற்போல எழுந்திடல் இயலும்?

‘மக்கள் பாவலன்’[ப.33] என்ற - பாவேந்தர் புரட்சி நூறில் இருபத்தொன்றாம் பாட்டு, சமநிலையாகவும் செவ்வியல் முறையிலும் பாவலரின் பாவேந்தர் குறித்த வீறுகளைச் செப்பமாகப் பதிவுசெய்துள்ளது. வேறு சொற்களில் சொல்லப்போனால், ஏனைய பாடல்களில் புரட்சிப் பாவேந்தமாக நவிலப் பெற்றவற்றுக்கெல்லாம் சாரமான போக்கில் சரளமான நடையினில் அமைந்திருக்கிறது. மதுரை முல்லைப் பதிப்பகம் அறுபத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் மூன்றுருவா எட்டணாவுக்கு வெளியிட்ட ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதற் பகுதி நூலின் உள்ளுறைக்கு முந்திய பக்கத்தில் இடம் பெற்றுள்ள பாவலர் வால்ட் விட்மன் கருத்துக்குப் பொருந்தியிருக்கிறது. அது,

“உள்ளத்தை வெளிப்படையாக, சீர்தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும், இலக்கணத்திற்குங்கூட அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு படைப்புத் தலைவன். பாடலைப் பார்ப்போம்.

“தந்தை பெரியார் கொள்கையைத் தலைமேல்
முந்தி ஏற்ற மூதறி வாளன்.
முன்னாள் கடவுள் வழியைக் காணினும்
பின்னாள் அதனைப் பிழையென் றுணர்ந்தவன்!

கண்டதைப் பாடும் கயமை விடுத்துளம்
கொண்டதைப் பாடிய கொள்கை யாளன்,
மூட முட்புதர்க் காட்டினைத் தன்னுயர்
பாடற் கருத்தால் பட்டிடச் செய்தவன்!

எவ்வழி மக்களுக் கேற்புடைத் தென்றுணர்ந்
தவ்வழிப் பாட்டை அளித்த தோன்றல்!”

இதே எளிமை ‘பாட்டுத் தலைவன்’ பாட்டிலும் படிந்து கிடக்கிறது.
“குவலயம் போற்றும் குடும்ப விளக்கும்,
எவர்க்கும் கல்வி வேண்டு மென்றே
இடித்துரைக் கின்ற இருண்ட வீடும்,
வெடிக்கும் புரட்சி விளைக்கும் பாவியம்
பாண்டியன் பரிசும், பழந்தமிழ் உணர்வைத்
தூண்டும் குறிஞ்சித் திட்டும், எங்கள்
பாட்டுத் தலைவன் பாரதி தாசன்
நாட்டுக் களித்த நன்கொடை!”
இதுதான் பாவலர் இலக்கியனின் பாட்டுத்திறம்.

‘கடந்த மூன்று நூற்றாண்டுகளாக’ என்றே தமிழுக்கும் தமிழருக்கும் வேற்றுமொழிப்பகை வந்தமையைக் குறிப்பர் பல்லோர். மெய்யாக, நாவலந்தீவின்மேல் கி.பி.1008ஆமாண்டு இசுலாமியர் படைஎடுத்தபொழுதே நாவலந்தீவின் தென்பகுதியும் மொழி-இனம் என்ற இரு நிலைகளிலும் தாக்குதல்பெறத் தொடங்கிற்று. கி.பி.1674ஆமாண்டு பிரஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டனர். இதற்குப் பதினாறாண்டுகளுக்குப் பின்பே கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றிக் கொண்டனர். கி.பி.1857ஆமாண்டில் படைவீரர் கலகம் (சிப்பாய்க் கலகம்) வெடித்தது. கி.பி.1858ஆமாண்டு தான் நம் நாடு நேரடியாக ஆங்கில முடியாட்சிக்குள் வந்தது. கி.பி.1875ஆமாண்டில் இந்திய தேசியப் பேராயம்
தொடங்கியவுடன் இந்திமொழி ஆதிக்கம் தென்னாட்டில் தொடங்கியது. இவற்றுக்கெல்லாம் இணைகோடாகத் தமிழ்த் தேசியமும்; பெரியார், பேராயக் கட்சியினின்று பிரிந்து விடுதலையாகச் செயல்படத் தொடங்கியபின் நேர்கோடாக இடதுசாரித்தமிழ்த்தேசியமும் செயல்படத் தொடங்கின. இந்நோக்கின் விரிவாழங்களுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களின் ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ (தமிழ் முழக்கம், 345, அண்ணா சாலை,சென்னை-600 006: 2005. பக்கம் 20 முதல்...)ஆய்வுநூலை வாசியுங்கள். இத்தகைய வாசிப்பும் புரிந்து கொள்ளுதலும் இல்லாவிடில் ஆங்கிலப்பகை குறித்தும் இந்திப்பகை குறித்தும் பாவேந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாவலர் இலக்கியனின் உணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியாது. குறுகிய மனப்பான்மை என்றே சொல்லவரும். இதனால்தான் புதுவைத் தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரும் “செத்த காக்கைச் சிறகைப் பறக்கவிடும் உத்தியைத் தம் ‘வெல்லும் தமிழியக்கம்’ என்னும் இனவெழுச்சிப் பாத்தொகையுள் பின்வருமாறு மொழிகிறார்:
“முட்டாள் இனத்திற்கு மோதி உதைத்தால்தான்
எட்டும் சிலஉண்மை! எத்தனைநாள் வாய்நோக
நீட்டி முழக்கி நிலவுக் குளிர்ச்சியினைக்
காட்டும்சொல் கூறிக் கரை(றை)வோம் தமிழினமே!

செத்தஒரு காக்கைச் சிறகைப் பறக்கவிடில்
கொத்தவரும் காக்கைக் குலமே பறந்துவிடும்!
காயவைத்த நெற்களத்தைக் காக்கும் வழிஇதனை
ஏயவகை ஆய்ந்துணர்ந்தே ஏற்பாய் தமிழினமே!”

பாவலர் இலக்கியன் கூறுகிறார்:
“பாரதி தாசன் பிறந்த மண்ணில்
சீரக முனையும் செந்தமிழ் இல்லை:
எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்1
பொங்கி வழிகிறது ஆங்கில மதுவே!
தமிழால் உயர்ந்த தமிழ ராலும்
தமிழ்க்கு நலமிலை; தமிழ்க்கு வாழ்விலை;
மண்ணின் மைந்தர் மருண்டு கிடக்கிறார்.”
“பழஞ்சுவடி விரித்தாற்போல் பரந்த நெற்றி, பார்வையிலே தமிழொளியே பாய்ந்து நிற்கும்” தகவுடைய பாவேந்தர்,
“தமிழர்க்குத் தமிழ்மொழியை வாழவைக்கும்
தனிக்கடமை உண்டென்றே சொல்லிச் சென்றார்.
தமிழர்கள் ஆங்கிலத்தைப் பெரிதாய்க் கொண்டார்.
தமிழ்வாழப் பாவேந்தர் சொல்லைக் கேட்பீர்.”

இந்த முறையில்தான் ‘பாவேந்தர் புரட்சிநூறு’ என்னும் இப்பாத்தொகை பாவேந்தர் குறித்து இதுவரை வெளிவராத தரவு-ஆவண-வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தலைப்புகள் 8,18,56,71,77,79,81,83[பக்கம் 20,30,68,83,89,91,93,95] இப்பொருண்மை உள்ள பாக்களைக் கொண்டுள்ளன. இவற்றுள்ளும் 56-ம் 83-ம் குறிப்பாக வேறுபடுகின்றன.

முதலாவது,
“ஆங்கிலப் பேரா சிரியர் ஒருவர்
ஓங்கு புலமையும் உயர்வும் உள்ள
திரு.வி.க.வின், மறைமலை யடிகளின்
பெருமை மிக்க உரைநடை தன்னைத்
திட்டிப் பேசிய தீங்குறு செயலைத்
தட்டிக் கேட்க ஆளிலை யோவெனச்
சீற்றம் மேலிடப் பாரதி தாசனாம்
ஆற்றல் அரிமா முழங்கிய தாங்கே!”
என்பது.

அடுத்தது, பாரதிமேல் பாவேந்தர் கொண்டிருந்த பற்றையும் பாரதி ஆங்கிலத்தின் எதிப்பை மேற்கொண்டவர் என்பது குறித்தும் மொழிவது:

“பாரதி வாழ்வினில் படிந்த பாவலன்.
பாரதி யாரொடு பழகிய பாவலன்.
பாரதி தாசனாய் மலர்ந்த பாவலன்.
பாரதி பெயரைப் பாரதி தாசன்
தாங்கியதாலே தமிழ்ப்பகை என்று
தாங்கா மனத்தினர் தாக்கிப் பேசினர்.
தூங்கிய தமிழினம் துடித்தெழப் பாரதி
ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனன்.
வேங்கை பாரதி வேற்று மொழியின்
தீங்கினை உணர்த்திய திறல்மிகு பாவலன்.
அத்தகு பாரதியின் அரிய புகழினை
இத்தரை வைத்தவன் எம்பா வேந்தனே!”

பாவேந்தர் உணர்த்திய அன்பு வாழ்க்கை, காதல் உயர்வு, முதியோர் காதல் ஆகியவற்றை பாக்களால் எடுத்துச் சொல்லும் பாவலர் இலக்கியன், குழந்தை மணத்தின் கொடுமையைப் பாவேந்தர் தம் பாக்களால் களைய முற்பட்ட சிறப்பைக் “கன்றுகள் காத்தவன்” என்ற தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது புதுமை.

“மணக்கொடை வாங்கும் வழக்கினைத் தணலில் இட்டான் தமிழ்ப்பா வேந்தனே!”(பா.29), “மெல்லிய ரெல்லாம் மேன்மை மிக்க கல்விக் கண்களைப் பெறுதல் வேண்டும் என்று பாடிய எழுச்சிக்குன்றமே! குன்றாப் புதுவைப் புரட்சிக் குன்றம்!(பா.31), “வேரிற் பழுத்த பலாக்க ளுக்குக் கோரினான் விடுதலை, கொள்கைத் தேரினில் வந்த பாட்டுப் பாரியே!(பா.33), “பதுமையாய் வாழும் பாவை மார்க்குப் புதுமை உலகைக் காட்டப் புதுவைப் பாவலன் புறப்பட் டானே!”(பா.37) முதலானவற்றுள் மகளிர்க்காகப் பாவேந்தர் ஆற்றிய புரட்சி வெளிப்படும்.

வாணிதாசனார்க்கும் பாவேந்தருக்கும் நிலவிய உறவின் சிறப்பை “எழுதத் தூண்டினார்!” என்ற பாடல் புலப்படுத்துகிறது. கோவை முத்தமிழ் மாநாட்டிற்கு இருவரும் சென்றுதிரும்பியபொழுது வாணிதாசனார்க்குப் பாவேந்தரால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அது நீங்கிய வயணமும் அருமையாகச் சொல்லப்பெற்றுள்ளன. அதேபோல் “பறந்தது பகைமை!” என்ற பாடல், துரைசாமிப் புலவர் - பாவேந்தர் - வாணிதாசனார் இடையில் நிகழ்ந்த ஓர் நிகழ்வுத்தொடரைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 73ஆம் பாடலான “எரிகதிர்ப் பாவல”னுடன் இதை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால் மேலும் சிறப்பு வெளிப்படும்.

“அழைப்பு விடுத்தவன்,” “விண்கோள்,” என்பவை முறையே புரட்சிப் பாவேந்தரின் பொதுமை உணர்வையும் மொழிஉணர்வையும் ஒளி+ஒலிக் காட்சிகளாய் வெளிப்படுத்துவன.

“இலக்கணத்திற் புலியாகத் திகழ்ந்து வந்த குமாரசாமிப் புலவருக்கு, அவர் துரைசாமிப் புலவரின் மாணாக்கராயிற்றே என்றும் பகை பாராமல், பாராட்டு விழா எடுத்து காமராசர் கைகளால் பொன்னாடை அணிவித்த பாவேந்தரின் சிறப்பை “ மலையருவி” எனும் பாடலில்(48)இனிதாய்க் காணலாம். இதையும் “எரிகதிர்ப்பாவல”னுடன்(73) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பாவேந்தர் பாசறைப் பாவலர்களையும் இவண் பாவலர் சுட்டியிருப்பது பெருந்தன்மையைக் காட்டும்.

மேலும், “தமிழிசைக் காவலன்” பாவேந்தர் - “வள்ளல் அண்ணா மலையரும் போற்றும் இசைத் தமிழ்க் கழகம் இனிது நிறுவி இசைத்தமிழ் வளர்த்ததை”யும்; “நல்ல கொள்கை,” பாவேந்தர் இலக்கியம் குறித்துக் கி.ஆ.பெ. புகழ்ந்து செப்பியதையும்; “படத்துறைப் பாவலன்,” வளையாபதி படத்தில் தானெழுதிய சில வரிகளை மாற்றி எழுதிய வன்செயலுக்காக நாற்பதாயிரம் உருவா ஒப்பந்தத் தொகையை வீசி எறிந்த பாவேந்தர் செய்கையையும்; “கைம்மாறு கருதாதவர்,” தனக்கு எல்லையில்லாத் தொல்லைகள் தந்த கல்வி அதிகாரியின் மகனுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடமும் விடுதியும் பெற்றுத் தந்த அன்னாரது சிறப்பையும்; “அடிமைக் கல்வி,”பிரஞ்சியர் ஆட்சியில் கெஞ்சிக் கிடந்த பல்லோர்க்கிடையிலும் துணிவோடு நின்ற பாவேந்தரின் பெருமையையும்; ‘வெங்கண் வேழம்,” பாரதி பற்றிய படமும் பாண்டியன் பரிசு படமும் எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகத்தால் பாவேந்தர் முடங்கிப்போக நேர்ந்ததையும்; “வென்றது தமிழே,” நாகர்கோவில் நிகழ்ச்சியில் பாவேந்தர்க்கு உருவான கலைவாணர் அரணையும் கவிமணி முரணையும் அருமையாகச் சித்திரிக்கின்றன.

“சேவற் குரலோன்” என்னும் தலைப்பும் புதுமை. “கன்றுகள் காத்தவன்” தலைப்பைப் போலவே இதிலும், பழைமை - புதுமையில் பாய்ந்திருக்கிறது.
“உழைப்பின் வறியவர் ஓடாய்த் திரிவதும்
உழைக்காச் செல்வர் உயர்வை அடைவதும்
உலகம் ஒப்பிய வொன்றாய் இருந்திடில்
நலமார் புரட்சி நாட்டில் எழுந்திட
சேவற் குரலால் செவிப்பறை கிழிந்திட
பாவின் வேந்தன் பரப்பினன் ஈங்கே!”
என்பதிலிருந்து இதனை உணரலாம்.

அருமைப் புதுவை அந்நாளில் எவ்வாறிருந்தது? இந்நாளில் எவ்வாறு இழிந்தது என்பதைப் பாவேந்தம் என்னும் பகைப்புலனில்(contrast) பாவலர் இலக்கியன் “நலமே நாடி!” என்ற பாடலில்(71)படம்பிடித்திருப்பது, உணரத் தக்கதாம். சுந்தர சண்முகனாரின் கரவற்ற உள்ளமும் பாவேந்தரின் பரந்த உள்ளமும் ஒன்றை ஒன்று மதித்த திறத்தை “எழுவோம் யாமே!” எடுத்துச் சொல்லுகிறது.

இன்னும் “முத்திரை பெற்றவர்,” “புரட்சி வெடிக்கும்(இரவலாய்ப் புத்தகம் வாங்குதல் இழிவே என்னும் பாவேந்தர் முழக்கம்),” “தமிழ் வள்ளல்,” “ஆய்வுகள்(பித்தர்தம் ஆய்வுகள் குறித்த பாவேந்தர் சினம்),” “சிறுத்தை வந்தது,” “நடைமுறைப் படுத்துக,” “புகழே பெறு,” “வரிப்புலியாய்ச் செயல்படு,” “வெஞ்சின வேங்கை,” “புறாக்களாய் மகிழ்ந்தார்!(பிரஞ்சுக் குடியரசுத் தலைவராயிருந்த ழுயில்பெரி அவர்களைப் பாவேந்தர் பெருமைப்படுத்தியபொழுது நிகழ்ந்தது),” “தமிழர் நிமிர்ந்தார்!(குழித்தலை மாநாடு), “புரட்சிக் குடியரசு(பாவேந்தரின் -‘குடியரசு” இதழ்த் தோய்வு),” “தமிழ் வீரம்(பாவேந்தருக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அமரவே மாட்டார் - போலும் தறுகண்மைச் செய்திகள்),” “புத்துரை வழங்கியவன்(திருக்குறளுக்குப் புத்துரை),” “குழந்தை உள்ளம்,” “மானக் களிறு(பள்ளியில் பேசிய நிகழ்ச்சி)” ஆகியவை பன்முறை வாசித்துச் சுவைக்கத் தக்கவை. அவற்றுள்ளும் “மானக் களிறு” பாடலில் வரும் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது. தன்னால் தலைமையாசிரியர் ஒருவருக்குப் பணியிடமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பாவேந்தர் கூறிய உத்தி, வியப்பானது.

நூறாம் பாடலான “ஒண்டமிழ்ப் போர்வாள்!” என்பதில் பின்வருமாறு பாவேந்தர்தம் சிறந்த நூல்கள் நிரல்படுத்தப் பெறுகின்றன:

“அவரது நூல்கள் அமர்க்கள வேல்கள்!
எவரையும் எதிர்த்திட ஏந்தும் துமுக்கி!
குடும்ப விளக்கோ வாழ்க்கை விளக்கு!
இடும்பை தீர்க்கும் இருண்ட வீடு!
தமிழை இயக்கும் தமிழ்இயக் கம்தான்!
அமிழ்தைச் சுரக்கும் அழகின் சிரிப்பு!

தேனின் அருவி தெளிவை ஊட்டும்!
கூனல் நிமிர்த்தும் குறிஞ்சித் திட்டு!
பழச்சுளைப் பாவியம் பாண்டியன் பரிசோ
பழகுநல் லினிமையும் புதுமை அறிவும்
இழைந்தே ஒளிர்ந்திடும் ஒண்டமிழ்ப் போர்வாள்!
விழைவுச் செம்பயிர் விளைக்கும் நிலமே.”

நூறு பாடல்கள்; நூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள். ஆனால், பாவலர் இலக்கியன் படைத்துள்ள இந்தப் “பாவேந்தர் புரட்சி நூறு” நூல் விளைவிப்பதுவோ எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்!

*******************************************************************************
ஆசிரியர் முகவரி:
கலைமாமணி இலக்கியன்,
16, பதினைந்தாவது குறுக்குத் தெரு,
அண்ணா நகர்,
புதுச்சேரி - 605 005.
பேசி: 0413 2201786

வெளியீட்டாளர் முகவரி:
வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
சேகர் பதிப்பகம்,66/1, பெரியார் தெரு,
எம்.ஜி.ஆர். நகர்,
சென்னை-600 078.
பக்கம்: 12+100=112.

விலை:உரூ.35-00.

******