தேவமைந்தன்

Friday, May 08, 2009

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்
- தேவமைந்தன்

சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது.

நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன் எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார்.

"தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன்.

அதனால்தான் தங்கப்பா, "மரபு வழி முயற்சிகள் மிகக் கடினமானவை. யாப்பிலக்கணம் படைப்பாற்றலுக்குத் தேவையற்றது. அவை பழமையின் அடையாளங்கள் என்று எண்ணும் அவர்கள் தங்கள் எண்ணங்கள் பிழையானவை.. கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் அக்கறை செலுத்தினால் எளிய மரபு வடிவங்களைக் கொண்டே பாட்டுணர்வை நன்கு வெளிப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு இப்பாடல்கள் பயன்படுமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாயிருக்கும்" என்று பனிப்பாறை நுனிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

என் கனவுப் பனிப்பாறை
கடல் மேல் தெரிவது
கழுத்துக்கு மேல்தான்

என்று 'போதாமை'யைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இரவும் பகலும் எள் இடைவிடாமல்
உள்ளிருந்து என்னுள் உயிர்க்கூத்தாடும்
இயற்கைக் காதல் முழுமையும்
உணர்த்திட வெளிச்சம் போதவில்லையே

என்பதுவே அப் 'போதாமை.'

'விட்டு விட்டு எழுந்து வா' என்ற பாடலில் வாழ்க்கையின் பொய்ம்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்:

இன்னும் எத்தனைக் காலம்
மரப்பாச்சியையும் மணல்வீடுகளையும்
வைத்துக்கொண்டிருப்பாய்?
விட்டு விட்டு எழுந்து வா,
திருமண மேடை காத்திருக்கின்றது.
எத்தனைப் பேர்கள்
பிறந்து இறக்கின்றோம்.
வாழ்க்கையை வாழ்பவர்
எங்கோ ஒருவரே.

உண்மையானவருக்கு அடையாளம், 'முகத்துதிக'ள் எனப்படும் பாராட்டுரைகளால் தாக்கப்பெறாமல் எப்பொழுதும்போல் இயல்பாக இருப்பதுதான்.
அதற்கு ஒரு காட்சிப் படிமம் தருகிறார் தங்கப்பா.

உண்மை மெழுகு

அவன்
உண்மை என்னும்
மெழுகு பூசிக் கொண்டிருக்கின்றான்.
பாலும் தேனுமாய்ப்
பாராட்டு உரைகளைத்
தலையில் கொட்டினும்
வழிந்து கீழ்ப் போகுமே அன்றி
ஒருதுளி அவன்மேல் ஒட்டுவதில்லையே.

அறிவின் தோல்வி கண்டு அஞ்சுபவர்கள் பலர். ஆனால் அறிவுதான் படைப்பாற்றல் மிக்க 'பாட்டு வாழ்க்கை'க்குத் தடையாக இருக்கிறது. 'எது வாழ்க்கை?' என்ற தேடல் தோல்வியில் முடிவதற்குக் காரணம் அந்தத் தேடலுக்கும் அறிவே துணையாக வருவதுதான். இதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறார்கள்? அறிய வேண்டியது அதுவே. அறிவு அதற்குத்தான் பயன்படும். வறட்டுத்தனத்தைத் தான் வெறும் அறிவு தரும். படைப்பாற்றலுக்கு அறிவின் வழிப்பட்ட வழிகாட்டி உரைநூல் கிடையாது. படைப்பாற்றல் - "பாட்டு மீன் துள்ளி/ மடியில் விழுந்தது"(ப.பா.நு. பக்.10) என்பதுபோல் மிகவும் தற்செயலாக நிகழ்வது.

வாழ்வியல் அடிப்படைகள் கூட கிடைக்காமல், கணக்கற்ற மக்கள் இலங்கையிலும் சூடான் எத்தியோப்பியா இந்தியா முதலான நாடுகளில் திண்டாடித் தவிக்கும்பொழுது மேலும் மேலும் தம் வாழ்வில் வண்ணம் சேர்த்துக் கொண்டு போகும் தன்னலப் புழுக்களை எங்கெங்கும் காண்கிறோம். தன் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட ஏந்துகளையும் எடுத்து விடலாமா...

என் வாழ்க்கைக்கு
இன்னும் வண்ணம்
தீட்டச் சொல்கிறாய்.

வெற்றிடங்களை
நிரப்பச் சொல்கிறாய்.

இருக்கும் வண்ணத்தையும்
எடுத்து விடலாம்
என்று நினைக்கிறேன்.

வெற்றிடங்களும்
கருத்துணர்த்துமே.

உயிர்ப்பு வெளிப்பட
ஓரிரு கோடுகள், வளைவுகள்
போதும்.
வண்ணம் எதற்கு?

இவ்வாறு சிந்திக்கும் தங்கப்பாவின் பாடல் 'வாழ்க்கை ஓவியம்.' கருப்பு வெள்ளை வண்ணப் படங்களையே காண மறுக்கும் கண்களுக்கு இந்தக் கருத்தாடல் பிடிக்காதுதான். "ம்...வாழ்க்கையில் வளரவே வேண்டாமென்கிறாரா தங்கப்பா? இவர்போல ஒரு மிதிவண்டியில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு நாமும் மிதிக்க வேண்டுமா?.. சிற்றூர் மக்கள்தாம் உயர்ந்தவர்களாம். அவர்களிடம் உள்ள கரவுள்ளம் நகர மாந்தர்க்கு வருமா? ம்..ம்..சிற்றூர்களில் என்ன உள்ளது? 'ஷாப்பிங் ஃபெசிலிட்டீஸ்' கொஞ்சமாவது உண்டா?" என்று முனகும் இன்றைய தமிழருக்கு 'வாழ்க்கை ஓவியம்' பாடல் உறைக்காதுதான். ஆனால் இதோ இந்தப் பாடல் மெத்தவும்தான் சுவைக்கிறது. கனடாவில் தமிழ்ச் சிறார் சிறுமியர் இடை 'ஆடப்படும்' பாடல் - "டாடி மம்மி யாருமில்லே / தடைபோட யாருமில்லே / விளையாடப் போவோமோ வில்லாளா!" என்பதாம். தமிழ்ப்பற்றுள்ள தங்களை டாடி மம்மி என்றழைக்க, புலம்பெயர்ந்தோர் மனங்கள் எவ்வாறு ஒப்புகின்றன? - என்று நொந்து கேட்டிருந்தார் கனடாவைச் சார்ந்த கட்டுரையாளர்.(சான்று: 'யுகமாயினி' எண் 18 மார்ச்சு 2009) அவர்களே இப்படி எனில், தமிழக மக்களிடையே எளிமையை, தமிழுணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆராய்ச்சி மூளையை அறவே சாடுகிறார் தங்கப்பா.

துருவிப் பார்க்கும்
உனது மூளையாம்
நுண்பெருக் காடியைத்
தூக்கி வீசு.

கொசுவும் கூடப்
பூதமாய் வெளிப்படும்;
வேண்டாம்.
வியப்புறும் விழிகள்
விரியட்டும் அன்பால்.
வாழ்க்கை விளங்கும்.

ஏன்? எதையெடுத்தாலும் நோண்டி நோண்டி, தோண்டித் துருவிப்பார்க்கும் மூளைக்கு அன்பு புலப்படாது என்பதால்தான். அது தன்னகந்தையிலே திளைக்கும். அடிவருடிகளை ஒழுங்கு செய்து கொள்ளும். விழா விருதுகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும். தன்னைக் கொண்டவனின் ஒவ்வொரு காலடியும் தன் நலத்தை நோக்கி நடைபோடுகிறதா அல்லவா என்று உளவு பார்க்கும். யாரை வீழ்த்தலாம், எப்படி வீழ்த்தலாம் என்று ஒவ்வொரு கணமும் திட்டமிடும். அது நடத்து விழா பற்றி, 'பனிப்பாறை நுனிகள்' நூலில் அருமையான பகடிப் பாடல் ஒன்றிருக்கிறது. அது இது:

எப்படி?

அரசியல் தலைவர்
பிறந்தநாள் விழாவில்
மேடை மீது
வீற்றிருந்தவர்களின்
கால்களை எண்ணினேன்.
சரியாய் நாற்பது.

வாழ்த்துப் பாட
எழுந்து நிற்கையில்
முகங்களை எண்ணினேன்
அவையும் நாற்பது!
அடடே, எப்படி?

வாசித்தீர்கள் அல்லவா? இந்தக் கணக்கு உங்களுக்குப் பிடிபட்டதா? பிடிபடவில்லையென்றால் தமிழகத்துக்கு வந்து அத்தகையதொரு மேடைமுன் அமர்ந்து எண்ணிப் பாருங்கள். புலப்படும்.

இதுதான் போகிறது! அரசு விழாக்கள் எப்படி? 'தமிழன் என்றோர் இனமுண்டு / தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.. அந்த இனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) அரசுகள் நடத்தும் விழாக்கள் குறித்த தங்கப்பாவின் பாடல்:

அரசு விழாக்கள்

குயில்களாய்ப் பாடக்
கோட்டான் கூட்டமும்,
மயில்கள் போல் நடிக்க
வான் கோழிகளும்
அழைக்கப் பட்டன -
அரசு விழாக்கள்.

மெத்தப் படித்தவர்கள் நடத்தி மகிழும் கருத்தரங்குகளுக்கும் மேனிமினுக்கிகள் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொழுக்கும் ஆடரங்குகளுக்கும் ஒன்றும் பெரிதாக வேறுபாடு இல்லை. அவை அறிவின் கொழுப்புகள். இவை உடலின் கொழுப்புகள். அத்தகையதொரு திரைக்கொழுப்பினால்தானே டானி பாயில் நம் சேரி மக்களை 'சேரிநாய்கள்' என்றான்? வறுமையைக் கண்டு பொங்கி எழ வைக்காமல், பொழுதுபோக வைத்த டானி பாயிலுக்குப் புகழ்.. உடலாலும் உளத்தாலும் ஊனமுற்றவர்கள் யார் யார் என்று இனங்காட்டிய பாலாவுக்குக் கண்டனம்(படம்: 'நான் கடவுள்'). இது இன்றைய உலகம்.

அதனால்தான் 'அறிவுச் செவி'டாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறார் தங்கப்பா.......

அறிவுச் செவிடு

வேண்டாம் என்று
சொல்லச் சொல்ல
என்னை மேடையில்
ஏற்றி வைத்தனர்.
படித்தவர்களின்
பளபளப்புகளில்
கண்கூசிப் போனேன்
என் காதுகளும்
அறிவுச் செவிடு
உலகையே புரட்டும்
உரைகள் நடுவிலும்
உறங்கிப் போகிறேன்.

இலையில் வைத்த
இடியாப்பத்தில்
அடிமுடி காணும்
ஆராய்ச்சி எல்லாம்
என் மூளைக்குள்
எட்டுவதில்லை.

மெத்தப் படித்தவர்கள் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தம் தாய்மொழி வளர்ச்சிக்கும் இனமான வளர்ச்சிக்கும் அன்றாடம் ஆற்றிவரும் அழிம்புகள் எண்ணிலடங்கா. வெய்துயிர்ப்பு மட்டுமே நமக்கு எஞ்சும். ஆனால் தங்கப்பா அவற்றை ஆவணமாக்குகிறார்:

எதைச் செய்யட்டும்?

மேடைகள் மீது நடக்கும் உங்கள்
பொய் வழிபாடுகள் நடுவில்
சட்டையைக் கிழித்துக் கொண்டு
கத்தத் துடிக்கிறேன்.
சட்டியில் பொத்தல் போட்டுக்
கழுத்தில் மாட்டிக் கொள்ளவும், முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு, உங்கள்
ஆய்வரங்குகளில்
கோணங்கித் தனங்கள் செய்யவும் நெஞ்சு
துருதுருக்கின்றது.
விளையாட்டில்லை ஐயா மார்களே,
வினையாகத்தான் சொல்கிறேன், உங்கள்
போலிப் புனிதங்களைத்
திரை கிழித்துக் காட்டுதற்கும்
உங்கள் பண்பாட்டுப் பொய்முகங்களை
உடைப்பதற்கும் எனக்கு
வேறு வழி எதும் தெரியவில்லை.
......................................................
மண்ணின் மக்களைத்
தீயிட்டுக் கொளுத்தி
மனுதருமங்கள்
தத்துவம் பேசுகின்றன.

இனவெறி அரசுகள்
இணைந்து நடத்தும்
மக்கள் படுகொலைகளிலும்,
பட்டாளங்களின் அட்டூழியங்கள்,
காவல்நிலயக் கற்பழிப்புகளிலும்
வாழ்க்கையே மாசு பட்டழிகின்றது.
இங்கே, நீங்கள், சும்மா
அறிவுப் புலியாட்டங்கள் ஆடியும்
இலக்கியப் பொய்க்கால் குதிரை ஏறியும்
விளக்கின் நெய்யைத் திருட்டில் விற்று
வெளிச்சத்தைப் படம் வரைந்து காட்டிப்
புகழ் வாங்குகின்றீர்.
வாழ்க்கை சவமாய் வலித்துப் போகின்றது.
அதற்குப்
பளபளப்புச் சட்டை மாட்டிப்
பண்பாட்டு நறுமணம் பூசுகின்றீர்கள்.
ஒன்று நான்
கொலை வாளைத் தூக்க வேண்டும், அல்லது
கோமாளி ஆகி
வாழ்க்கையை மாசு படுத்தும் உங்கள்
வழிபாடுகளை மாசு படுத்தி
அதிர்ச்சி மருத்துவம் அளிக்க வேண்டும்.
எதைச் செய்யட்டும்?
என்ன இது? அன்பு வழி என்கிறார் தங்கப்பா. அவருக்குள் இவ்வளவு மறவுணர்வா..என்பவர்களுக்கு வள்ளுவர் முன்பே விடையிறுத்து விட்டார்:

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

இந்தக் குறள் உரையாசிரியர்களால் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் 'அன்புடைமை'யே.

மனநலமுடைய வாழ்க்கை குறித்து தங்கப்பா இந்நூலில் நிறைய மொழிந்திருக்கிறார். காட்டுகள் சில:

ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை;
அன்பாய் ஒரு சொல். (ப.37)

மீசை நரைத்துத் தலை வெளுத்தாலும்
விளையாட்டு உள்ளம் வேண்டும் நண்பர்காள்.
ஆசைக் கடலில் தோணி ஓட்டலாம்
அன்புள்ளே இருந்தால் தப்பு வராது.
பாசி பற்றாமல் வாழ்ந்து பாருங்கள்
பளிச்சென்று உள்ளே வெளிச்சம் தெரியுமே.(ப.38)

இயக்குநர் அகிரோ குரோசாவா பாராட்டிய திரை உத்தி - 'கணப்பொழுது இயங்கும் உறைந்த படிமம்.' அது இயற்கைக் காட்சியாகவும் இருக்கலாம். வியர்த்துப்போன உழைப்பாளியின் தோற்றமாகவும் விளங்கலாம். மழலையின் முகமாகவும் திகழலாம். அப்படிப்பட்ட காட்சிகள் பனிப்பாறை நுனிகளாகச் சில உள்ளன. பாருங்கள்:

மரங்களில் சொட்டும்
இம் மழைத் துளிகள்
இலைக் காதுகளில்
என்னதான் அப்படிப்
பேசுகின்றன?
இப்படித் தலை ஆட்டுகின்றனவே
அந்த இலைகள்!

***

நீல நெளிவில் ஓசைச் சுழிப்பு.
நிலையில் பறந்து மடுவில் குதிக்கும்
புள்ளிப் பாய்ச்சல்.
உள்ளான் கழுத்தில் ஒளியின் சுளுக்கு.
முங்கி எழுந்த மூக்கின் முனைக்கீழ்
ஆடி அடங்கும் அலைவட்டங்கள்.
***

பட்ட மரத்தின்
வெட்டுவாய்ப் பொந்தில்
பசுமை தளும்பி
ஒரு நுணாக் கன்று.
குடு குடு கிழவன்
தோளில் தாங்கிய
கொழு கொழு குழந்தை.

***

பன்றி கிளறிய குழியில்
காட்டுக் கோழி இட்ட முட்டை
முகிலிடை முழுநிலா.

********

நன்றி: தமிழ்க்காவல்.நெட்.

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்
- தேவமைந்தன்

புதுச்சேரி நகரத்தின் கடற்கரைப் பக்கம் புன்னை மரங்களும்; கடற்கரைக்கு மேற்கிலுள்ள நகரத் தெருக்களில் வேப்ப மரங்களும் இன்றும் இயற்கை நலம் ஈந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்த ஈரோடை நகர் நண்பர் ஒருவர், என்னிடம் தொல்லையான வினாவொன்றையும் முன்வைத்தார்.

வேப்ப மரத்தின் நெய், பட்டை(மேற்பட்டை, வேர்ப்பட்டை), பிண்ணாக்கு, பூ(பச்சை அல்லது நாட்சென்ற பூ), வித்து, இலை ஆகியவற்றை மருத்துவப் பலன் கொண்டு புகழும் 'மூல வருக்க பொருட்குண' விளக்கத்தார் - வேப்பம்பழங்களை மட்டும் பயன் சுட்டாது விட்டமை ஏன்? - என்பதே அந்த வினா.

நொய்யல் ஆற்றின் அருகில் மதகுப் பக்கத்து வேப்ப மரத்திலிருந்து தாமே உதிரும் அல்லது காக்கைகள் கொத்தும் பொழுது உதிரும் வேப்பம் பழங்களைத் தின்னும் இளமைப் பருவத்தைக் கழித்த நான், அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திகைத்தேன். நான் மருத்துவரல்லவே!

வீட்டுக்கு அவர் வந்த பொழுது, "வேப்பம் பழங்கள் குறித்துக் கேட்டீர்களே! இந்தாருங்கள்.. தமிழர் அகநலங் காக்க நம் தங்கப்பா தந்த 'வேப்பங்கனிகள்'' என்று நூலொன்றைத் தந்தேன். ஆண்டு குறிப்பிடாமல், தோழர் த. கோவேந்தன் வெளியிட்ட தங்கப்பாவின் நூலது. தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் வெளியிட்டிருக்கக் கூடும். அதனுள்ளிருந்து வேப்பம்பழங்கள் சில:

"வாய்பெருத்த
வயிற்றுக் கடவுளின்
கோயில் தோறும்
கொழுமடைப் பள்ளியில்
எரிகழல் உமிழ்வன
எத்தனை அடுப்புகள்!
நாகரிக மகள்
நாட்டிய மேடையில்
உடைகள் விலகலை
ஒளியிட்டுக் காட்ட
எத்தனை ஆயிரம்
மின்விளக்குகள்!
வேட்கை நெஞ்சின்
வெறித்தழல் ஏறிய
பதவிக் கொள்ளைப்
பந்தயக் குதிரையை
இராவழி விரட்ட
என்ன தீவட்டிகள்!
அம்பல நடுவில்தன்
அழகொளி மாளிகை
மறைப்பன என்றே
மற்றவர் குடிசையைக்
கொளுத்திட எத்தனைக்
கொள்ளிக் கட்டைகள்!"

என்ற வினாக்கள் அடுக்கடுக்காய் ஒரு பாவில். 'இராவழி ' என்ற சொல்தரும் ஆழமான பொருள் உன்னத் தக்கது.

பட்டி மண்டபங்கள், அரட்டை அரங்கங்கள் முதலானவற்றை, வயற்காட்டு வாழ்வை உணர்ந்து வாழ்ந்த பாவலன் மதிக்க மாட்டான். தன்னை ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்ற விரும்பும் சொல்வணிகர்களே விழைவார்கள்.

"உங்கள் பட்டி மண்டபங்களையும்
காட்டுக் கத்தல் கருத்தரங்குகளையும்
நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள், போங்கள்!
வெறுஞ் சொல் மினுக்கும் வேடிக்கைவிட்டு
வாழ்க்கையை நேராய் வந்து பாருங்கள்"

இதிலே வரும் வாழ்க்கை என்பது ஒரு தலைமுறைக்குப் பின்[தலைமுறை = 33 1/3 ஆண்டுகள்] ஈழத் தமிழர் வாழ்க்கையைக் குறிப்பதாக மாறிப்போனதை நொந்த நெஞ்சங்கள் உணரும். ஆம். வெறுஞ்சொல் மினுக்கும் வேடிக்கைப் பயல்கள் தமிழகமெங்கும் நிறைந்திருப்பதால்தானே ஈழத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்க் கொல்லப்படுவது கண்டும்; குழந்தைகள் கூட, போர்மாட்சி - படைமாட்சி தெரியாத காடையர்களால் போர் என்னும் பேரில் கொல்லப்படுவது கண்டும் - கட்சி அரசியலுக்கும், பணம் கொல்லும் தேர்தலுக்கும் மனமுவந்து பாடுபட முடிகிறது. தமிழர் நலங்காப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நாளேடுகள் - உட்பக்கமொன்றில் ஈழத்தமிழர் இன்னல் குறித்தும் தலைப்புப் பக்கத்தில் தொகுதி உடன்பாடு குறித்தும் செய்தி வெளியிடுவதைப் பார்க்கவில்லையா?

இன்றைய இலக்கியம் என்று தமிழில் அறிவிக்கப்படுபவை எப்படி இருக்கின்றன? இன்றைய எழுத்தாளர்/படைப்பாளர் என்று தம்மைப் 'பிரகடன'ப் படுத்திக் கொள்பவர்கள், நூல்கள் பலவற்றை நெய்து குவிக்கும் தமிழாசிரியர்கள், ஓயாமல் பாமாலை கட்டி அரங்கம் தேடி வந்து பாடும் பாவலர்கள், இன்றைய ஆய்வாளர்கள்... இவர்களெல்லாரும் எப்படிப் பட்டவர்கள்?

பழைய இலக்கியக் கடைகளில் பொறுக்கிய
தாள்களைச் சேர்த்துத் தைத்த நூல்களில்
தம் பெயர் எழுதும் தமிழாசிரியர்கள்.
பட்டி மண்டபப் பரத்தையின் மடிமேல்
வெட்டிப் புலவர்கள் இளித்திடும் கொஞ்சல்கள்.
காயடித்த 'கவிஞர்கள்' கூடி
வாயடி அடிக்கும் பாட்டரங்குகள்.
.......... ............ ................
அலைகடல் தாண்டி அயல்நாட்டுச் சந்தையில்
ஏட்டுச் சுரைக்காய் கறிசமைத் துண்டு
வீட்டுக்கு வந்தவர் விட்டிடும் ஏப்பங்கள்.
சாய்க்கடை மண்ணைச் சலித்துச் சலித்துப்
பார்க்கையில் வெளிப்படும் பாசியைப் பகுத்தும்,
போக்கில் நெளியும் புழுக்களை எண்ணியும்
அடிக் குறிப்பெழுதி ஆய்வுகள் இயற்றும்
வடித்தெடுத்த உலக்கைக் கொழுந்துகள்.
அரைத்த மாவையே அரைத்துக் கலக்கிய
புளித்த மாத் தோசை போதும் என்பதால்
மதுக்கடை வண்டலைப் பச்சையாய்க் கலக்கிப்
புதுப் பலகாரம் படைக்கும் 'புதிது'கள்!
எத்தனை அழுகல்! என்ன தீ நாற்றம்!
இதுதான், இதுதான் ஐயா,
இற்றைத் தமிழரின் இலக்கிய உலகமே"

வெளிப்படையாக அவரவர் இங்கே தங்கப்பா சுட்டியவற்றை மறுக்கலாம்; அவர்களின் மனச்சான்று, அப்படி ஒன்று இருந்தால், அமைதியாக ஆம் ஆம் என்று ஏற்றுக் கொள்ளும்.

கொடுமையிலும் கொடுமை எது என்னவென்றால் மாந்தர் பலருக்கு அகமும் புறமும் ஒவ்வாதிருக்கும் இரட்டை நிலைதான். 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடினார். அவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடக்கும் பேர்வழிகளைத் தங்கப்பா பட்டியலிட்டே காட்டி விடுகிறார்.

புதையல் பேய்களின்
பூசாரிமார்கள்
புத்தரைப் போலவும்,

கறிக்கடை நடத்தும்
கறுப்ப சாமிகள்
வள்ளுவர் போலவும்
திகழ்கின்றார்கள்.

மல்லிகைப் பூக்களின்
மனத்தைத் திருடிக்
காகிதப் பூக்கள்
கடை நிறைக்கின்றன.

உலகியல் சூளையின்
உலர்ந்த செங்கல்கள்
வெண்ணெயில் மறைந்தே
உணவுத் தட்டில் வந்து
உட்காருகின்றன.

விழா அரங்குகளில்
வெள்ளைச் சட்டையும்
கருப்பு நெஞ்சுமாய்க்
குள்ள நரிகள்
குறுநகை பூத்துத்
தலையை ஆட்டியும்
தழுவியும், வணங்கியும்
தூய்மையே உருவாய்
வாழ்த்துரை வழங்கையில்
அவற்றின் மனங்களோ
மாலை எப்போது
மயங்கும் என்று
'நீலச் சுருள்'களை
நினைந்திருக்கின்றன.

ஆன்மிகம் முழங்கும்
ஆச்சிரமங்களின்
விருந்து மாளிகைகளில்
அரபிய இரவின்
அம்பு மலர்கள்
பதவி நாயகர்களைப்
பாகாய் உருக்கி
நிலுவைக் கணக்கை
நேர் செய்கின்றன.

படிப்புச் சுரைக்காய்ப்
பந்தல்கள் அடியில்
உலக ஒருமையும்
உடன்பிறப்பு அன்பும்
சந்தன மாக
நாக்கில் மணக்கையில்
கழற்றி வைத்த
செருப்பி லிருந்து
சாதிச் சகதியும்
சமயக் கொலைகளும்
நடுத் தெரு வரைக்கும்
நாறு கின்றன..."

'கிண்டற் பித்தன்' என்ற புனைபெயர் தங்கப்பாவுக்கு உண்டு. 'மன்னூர் மாநாடு' என்ற அவருடைய நெடும்பாப்போல அங்கதச் சுவையும் நெருப்புத் திறனாய்வும் கொண்ட மற்றொரு பாவைப் பார்த்தல் அரிது.

சற்று வேறுபாடாக, மிகவும் மென்மையான 'தொனி'யில் மிகவும் முதன்மையானதொரு நிகழ்வை அங்கதப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'வேப்பங் கனிக'ளில் வரும் 'எங்கும் தமிழ்!' என்ற பாவைக் குறிப்பிடலாம்.

"எங்கள் தமிழைப்
பாடமொழியாய் வைத்திட மாட்டோம்.
அறிவியல், தொழிலியல்
மருத்துவம் சட்டம் என்று
எதற்கும் தமிழை எடுக்கவே மாட்டோம்
அலுவல் மொழியாய் ஆக்கவும் மாட்டோம்.
தமிழறிந்தோருக்கு அலுவலில் முதன்மை
அளிக்கவும் மாட்டோம்.
ஆனால்,
உலக அரங்குகளில் எம்
உயர்தமிழ்த் தாயை உலவச் செய்வோம்!
மாண்புமிகு தமிழ் மாநாடுகளின்
உயர்ந்த கோபுரங்களில் அவளை ஏற்றுவோம்.
வேட்டுகள் முழக்கி விழாப் பல எடுப்போம்.
ஆனைமேல் ஏற்றி ஊர்வலம் வருவோம்.
மன்றங்கள் தோறும் படமாய் மாட்டி
வீதிகள் தோறும் சிலையாய் நிறுத்திப்
பூவும் புகையும் தூவிப்
பூசைகள் பலப்பல செய்வோம்!
நாடு முன்னேறும்; நாமும் முன்னேறலாம்."

'Gentle sarcasm' என்று மேலைத்திறனாய்வாளர் போற்றும் மென்மையான நையாண்டியை மேலுள்ள பாவில் காணலாம்.

'மேலிருக்கும் மாடுகள்' என்றொரு பா. நண்பகலொன்றில் தங்கப்பா ஒரு காட்சியைக் கண்டார். நிழல்தரும் சாலை. வேப்ப மரம். அதன் தழையை வளைத்து, தான் ஓட்டி வந்த மாட்டின் வாயில் ஊட்டுகிறான் கிழவன் ஒருவன். பசுமைக்குக்கேடு விளைவிக்கிறானே அவன்! - என்று திட்டுகிறார் அவனை. தலை கவிழ்ந்தவாறே தன் வழியில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகிறான் அவன். இப்பொழுது பாவலரின் மனதுக்குள் ஒரு குரல்:

" பசித்த மாட்டுக்குப் பச்சை காட்டிய
ஏழைக் கிழவனை ஏசி விரட்டினாய்.
ஊரின் பசுமை ஒருதுளிர் விடாமல்
வலைத்து முரித்து வாயில் போட்டுக்
கோடி கோடியாய்க் கொழுக்கின்றனவே
மேலிருக்கும் பெரிய மாடுகள்.
அவற்றைத் தடுக்க உன்னால் முடிந்ததா?
எல்லார் கடுமையும் ஏழைக ளிடமா?
பொல்லாத ஒழுங்கு! போடா மடயனே!"

பொதுவான மாந்தருக்கும் - நிரம்பிய பாவலன் ஒருவனுக்கும் இதுதான் வேறுபாடு.

நம் நாடு விடுதலைக்குப் பின்பு எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைச் சுட்டும் வேப்பங் கனிகள் இரண்டு. அவற்றைப் பார்த்து இக்கட்டுரையை நிறைவு செய்வோம்:

நம்மை நாமே

எப்படிப் பொறுப்போம்?
எப்படிப் பொறுப்போம்?
நமக்கே உரிமையாம்
நம் தாய்நாட்டைப்
பொன்னாய்க் கொழிக்கும் இப்
புனித மண்ணினை
வேற்று நாட்டு
வெள்ளைப் பறங்கிகள்
சுரண்ட விட்டு நாம்
சும்மா இருப்பதா?
எழுங்கள்!
வீறுகொண்டெழுங்கள்!
வெள்ளைப் பறங்கியை
விரட்டி அடிப்போம்!
சொந்த மண்ணை, நம்
தாய்த் திரு நாட்டைப்
பிறர் சுரண்டாமல்
நாமே சுரண்டுவோம்.

இந்தப் பா, தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம். "வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் ஆளவந்தான்" என்ற புதுக்கவிதை வரியொன்று பின்புதான் வந்தது என்பதை நாம் மனத்துட் கொள்ளவேண்டும்.

வெண்கலத் திருவோடு

முன்பு நான்
ஓட்டைச் சட்டியில் பிச்சை எடுத்தேன்.
இப் பொழுது, இவர்கள்
எனக்குப்
புதிதாய்ப், பளபளப்பாக
வெண்கலத் திருவோடு
அன்பளிப்புச் செய்து விட்டார்கள்!
என்ன குறைச்சல்
இனிமேல் எனக்கே?

இந்தப் பாவில் வரும் வெண்கலத் திருவோடு, இலவய வண்ணத் தொலைக்காட்சியை நினைவு படுத்தவில்லையா?

********
நன்றி: தமிழ்க்காவல்.நெட். க, மீனம் 2040 / 14-03-2009.

Friday, February 20, 2009

அறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல்
- தேவமைந்தன்

தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றில் முதன்மையான இடம் வகித்த அறிஞர் அண்ணா அவர்களை முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர்கள் - படைப்பாளர்களில் பெரும்பாலோர் குறைத்து எழுதியும் மதிப்பிட்டும் பேசியும் வருகிறார்கள்.

இது நம் நாட்டு இலக்கியவாதிகளிடம் உள்ள நுண்ணரசியலின் தாக்கம். திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதை அகத்தியமானதொரு காலவரலாற்றுக் கட்டாயம் என்று இணக்கமான முறையில் சரியாகப் புரிந்துகொள்ள 'அறிவுஜீவிகள்' தவறிவிட்டனர்.

அன்னியமான அரசியல் பொருளாதார இலக்கியக் கண்ணோட்டத்தை அவர்கள் வரப்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம்.

அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று -'கலிங்கராணி' என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார்.

குலோத்துங்கன் அரண்மனைக்குளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா. மலர்புரி அரசி மருதவல்லியை எப்படியெல்லாம் ஓர் ஆரியன் ஏமாற்றுகிறான் அதற்குத் தமிழன் ஒருவனையே எப்படி அவன் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறான், மருதவல்லிக்கும் நடனாவிற்கும் உள்ள நட்பை ஆரியப் பெண்மணியான கங்கபாலா எவ்வாறு சதிசெய்து முறிக்கிறாள் என்பதையெல்லாம் வாசகர்கள் சலிப்படையாதபடி திறமையாகச் சொல்லிக் கொண்டு போகிறார் அண்ணா.

மன்னன் குலோத்துங்கன் கூறுகின்றான்: "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய் போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம். இது உறுதி; ஆரியர் தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்த முயன்றால் கனக விசயர் கண்ட கதியே காண்பர்."

இவ்வாறு அறிஞர் அண்ணா தமிழினத்தை விழிப்பூட்டுவதற்கான இயக்கக் கருத்தொன்றைத் தன் கதை சொல்லும் ஆற்றலால் எண்ணற்ற இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தார்.

இதை இனவெறி என்று, நாசிசக் கொள்கை என்பதையே அறியாதவர்கள்தாம் கூறமுடியும். புகழ்மிக்க ஜெர்மன் திரைப்படமான 'Hitlerjunge Salomon'(இயக்கம்: Agnieszka Holland) ஆரியர்களின் இனவெறியை உலகறியச் சொன்னதெனில், அதை இனங்காட்டுவதும் அடையாளப்படுத்துவதும் எப்படி இனவெறி ஆகும்? இந்தப் புலப்பாட்டுக்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் கனல்பறக்கும் இயல்நடையில் அமைந்த கதைசொல்லலே ஆகும்.

இதைத்தான் கலையம்சம் குறைந்தது என்றும் வடவர் எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு ஆகிய பிற இனவெறுப்பின் அடிப்படையில் அமைந்தது என்று அறிஞர் அண்ணா அவர்களின் கதை சொல்லும் ஆற்றலைக் குறித்து எஸ்.தோதாத்ரி போன்றோர் எழுதினர்.(1)

பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அண்ணாவின் ஏழ்மை நிலையை அறிந்து பாடப்புத்தகங்கள் வாங்கித் தருவது முதலான உதவிகள் செய்து, பி.ஏ.ஆனர்ஸ் படிக்க வைத்தார். அரசியல், வரலாறு, பொருளியல் மூன்றையும் சிறப்பாகப் பயின்ற காலத்திலேயே மேடைப்பேச்சுகள் நிகழ்த்தி - தீண்டாமை எதிர்ப்பு, சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்குத் தோதாக, கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் அறிஞர் அண்ணா.

அவர் கதை சொல்லப் பயன்படுத்திய உரைநடை, அந்தக் காலத்துக்கு மிகவும் புதியது. சிந்தனையைக் கிளர்வது. சமூகத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் ஊழல்களை, மற்றவர்களுடன் அவர்களும் வாசிக்கையில் பரிகசிக்கும்படி நாடக உரையாடல் பாணி நடையும் கலந்து எழுதப்பட்டது.

'திருமலை கண்ட திவ்யஜோதி,' 'புலிநகம்,' 'பிடிசாம்பல்,' 'தஞ்சை வீழ்ச்சி' முதலான அண்ணாவின் சிறுகதைகள், கற்பனை இழையோடும் நடையைக் கொண்ட வரலாற்றுச் சிறுகதைகளாக விளங்கின. 'அடைமொழிக்கும் அடுக்குமொழிக்கும் கூறவந்த கருத்தைவிட வலியுற்று நிற்கும் பயனிலையை முன்னிறுத்தி எழுவாயை அதன்பின் அமைந்த மொழிநடைப் பாங்கினை இவர்தம் நடையின் தனிக்கூறு எனலாம்' என்று முனைவர் இ. சுந்தரமூர்த்தி கூறுவார்.(2)

'பார்வதி பி.ஏ.' என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும் 'சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவ'ராக அறிஞர் அண்ணா விளங்கினார்.(3)

'குமரிக் கோட்டம்,' 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்,' அன்னதானம்,' 'பேய் ஓடிப்போச்சு,' தேடியது வக்கீலை,' 'இரு பரம்பரை,' 'ராஜாடி ராஜா,' 'சூதாடி,' கருப்பண்ணசாமி யோசிக்கிறார்,' 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்,' 'செவ்வாழை' ஆகிய சிறுகதைகள், அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலால் எத்தகைய திடமான சமூக நோக்கை வாசகர் நெஞ்சில் விதைத்தன என்பதற்குச் சான்றுகள்.

சனாதன மிகைப்பற்றும் சாதிவெறியும், எளிமையானதும் உறுதியானதுமான பகுத்தறிவுக் கடைப்பிடியின் முன் வெல்ல முடியா என்பதைச் சொல்லும் கதைதான் 'குமரிக் கோட்டம்.' குமார கோட்டம் குமரிக் கோட்டம் ஆவதை, [கதையைச்]சொல்லிச் செல்லும் முறையில் உறுதிப்படுத்தி விடுகிறார் அண்ணா. குமரிக் கோட்டம், எளியோரின் புகலிடம்.

'கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரால் அழைக்கப்பட்ட காலகட்டத்தில், தாம் பெரியாரைப் பிரிந்ததால் எந்த அளவு பாதிப்பிற்குள்ளானார் என்பதை அறிஞர் அண்ணாவை விட எவராலும் இந்த அளவு கதையாகச் சொல்ல முடியாது. அதுதான் 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்.'

இந்த சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு வாழ இயலாமல் போகும்பொழுது வேறு வழிகளில்லாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை எந்த அளவு வன்மத்துடன் இதே சமூகம் தண்டிக்கிறது என்பதை 'ராஜாடி ராஜா' வில் சொன்னார் அண்ணா.

சீட்டாட்டம் சூதாட்டம். பணம் வைத்துச் சூதாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப்படுத்தும் போலிச் சமூகம், பங்குச் சந்தையில் பணவேட்டையாடுபவர்களை என்ன செய்கிறது? - என்று அன்றே கேட்டார் அண்ணா. இன்று பங்குச் சந்தைச் சூதாட்டத்தை எல்லோருக்கும் கற்றுத்தர ஊடகத்துறை முனைந்துள்ளதை நாமறிவோம். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. மரத்துப் போய்விட்டது. 'சூதாடி' கதையில் அறிஞர் அண்ணாவின் சொல்லாடலை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தோமானால் மனம் மீண்டும் உணர்வுபெறும்.

மனிதரின் மூடத்தனத்தை கடவுளர் எள்ளி நகையாடுவதாக அண்ணா சித்திரித்த கதைதான் 'கருப்பண்ணசாமி யோசிக்கிறார்.' 1951இல் லால்குடியருகே புஞ்சைச்சாங்குடி என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியே இந்தக் கதையின் அடித்தளம். இதை அண்ணா தவிர யார் சொன்னாலும் வெறும் செய்தி ஆகிப்போகும்.

வர்க்க சமூக பேதம், வீட்டு விலங்குகளைக்கூட விட்டு வைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா சொன்ன கதை, 'இரு பரம்பரை.'

'தனம்' என்ற தமிழ்த் திரைப்படம் - 'சோதிடந்தனை இகழ்' என்பதை, பொருத்தமான கதை - நடிகர் - இயக்கம் ஆகிய கட்டமைப்போடு சொன்னது. தமிழினம், வழக்கம்போல அதற்குத் தரவேண்டிய ஆதரவு தரவில்லை. தினத்தந்தியே சோதிடம் பரப்பும் காலமல்லவா இது? இதே சேதியை அண்ணா ஐம்பதாண்டுகளுக்குமுன் சிறுகதைகளாகச் சொன்னார். கதைப்பாத்திரங்கள் மட்டும் ஆண்கள்தாம். 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்' என்பவையே அவை.

அண்ணாவின் புதினம் ஒன்றனுக்கு வருவோம்.

'ரங்கோன் ராதா'வில், சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் பெரிய புள்ளிகளின் அசலான இயல்பை, அண்ணா, தன் பாணியில் கதையாகச் சொன்னார். 'இத்தகைய பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை ரசமான கதைப்போக்கில் காண்பிக்கிறார்.(4:1)

தர்மலிங்க முதலியார் என்பவர் பேராசை மிக்கதொரு பெரும்புள்ளி. தன் மனைவி ரங்கத்தின் தங்கையும் 'பகல்வேஷப் பகட்டுக்காரி'யுமான தங்கத்தை இரண்டாம் மனைவியாக தர்மலிங்கம் மணந்து கொள்கிறார். அந்த இருவரும் அடித்த கொட்டத்தில் விரக்தி அடைந்த ரங்கம், தனக்கு சமூகம் இட்டிருந்த வேலியைத் தாண்டுகிறாள். தன் ஆசைநாயகனுக்குப் பிறந்த ராதா என்ற மகளுடன் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து தமிழகம் திரும்புகிறாள். நாகசுந்தரம் என்கிற தர்மலிங்கம் முதலியாரின் மகன் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. ராதா தன்னுடைய தங்கை முறை என்றறிந்த அவன், அவளுக்கு நல்வாழ்வு கொடுக்கப் பெருமுயற்சி எடுக்கிறான். நண்பன் பரந்தாமனுக்கு அவளை
மணம் செய்து வைக்கிறான். அடுக்குச்சொற்கள் நிரம்பிய அணிநடையும் புராண இதிகாச அறிவும் அண்ணாவின் கதை சொல்லலை வலிமைப்படுத்துகின்றன. அதிலுள்ள ''பிரசார தொனி'க்கு அழுத்தம் தருவன அவர் கதை சொல்லும் முறையில் இடம்பெறும் அந்த இரண்டும்தான்.''(4:2)

அண்ணாவின் வரலாற்றுக் கதை சொல்லும் பாணியில் வரலாற்றுண்மைகள் பல வெளியாயின. மிகச் சில சான்றுகள்:

புத்த மார்க்கம் பரவாமல் தடுப்பதற்கு வைதிக சமயவாதிகள் நாலந்தா பல்கலைக் கழகம் தொடர்பாகச் செய்த கொடுஞ்செயலே 'ஒளியூரில்' என்ற கதையில் வெளிப்பட்டது.

இஸ்லாமும் வைதிக சமயமும் முரண்பட்ட நிலையை மாவீரன் சிவாஜியின் வாழ்வு நிகழ்ச்சி ஒன்றைப் பின்னணியாக வைத்து அறிஞர் அண்ணா சொன்ன கதையே 'புலிநகம்' ஆகும்.

கிறிஸ்தவ மதமும் வைதிக மதமும் மோதிக் கொண்டன. திருமலை மன்னன் மறைவுக்கு அவனுடன் கிறித்தவப் பாதிரிமார் கொண்ட நட்பை வெறுத்த வைதிகர்களே காரணம் என்பதை திருமலை மன்னனின் அரசவைப் பணியாளர் லிங்கண்ணாவை வைத்து அண்ணா சொன்ன கதையே 'திருமலை கண்ட திவ்யஜோதி' ஆகும்.

சைவ வைணவப் பகையால் கருணாகரத் தொண்டைமான்(கலிங்கப்போரில் வெற்றிகண்டவன்) அடைந்த பாதிப்பை 'பிடிசாம்பல்' என்ற தலைப்பில் கதையாகச் சொன்னார் அண்ணா. வைணவர்களின் சூழ்ச்சி தாங்காமல்தான் படைத் தலைவனான அவன், சைவத் திருத் தொண்டராக மாறினான் என்பது கதையின் வாதம்.

கிறிஸ்தவம் பரவுவதைக் கண்டு இந்து சமயவாதிகள் கலங்கியதை 'சமயபுரத்து அம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு' என்ற கதையில் அண்ணா சொல்லுகிறார். 'எல்லாச்சமயமும் ஒரே நெறியையே காட்டுகின்றன என்று இந்து சமய நெறியாளர்கள் கூறிய போதிலும், தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலே நாட்டம் கொண்டிருப்பதும், பிற சமயக் கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் இக்கதை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.(5)

'எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர்நலம்
ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை'

என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாவரிகளுக்கேற்ப, நாட்டார் இடையேயும் நகரத்தார் - உலகத்தார் இடையேயும் செல்வாக்கை மிகவும் பெற்ற கதைசொல்லல்(narrative/narration) ஆற்றலிலும் தலைசிறந்து விளங்கினார் அறிஞர் அண்ணா.

********
பார்வை நூல்கள்:

1. எஸ்.தோதாத்ரி, தமிழ் நாவல் - சில அடிப்படைகள். அகரம் வெளியீடு,
சிவகங்கை 1980.

2. 'மொழிநடை,' கட்டுரை. இடம் பெற்ற தொகுப்பு - முற்போக்கு இலக்கியத் திறன் அரைநூற்றாண்டு(1940-1990). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை 1995.

3. முனைவர் மா.இராமலிங்கம், புனைகதை வளம். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். சென்னை 1973.

4. பெ.கோ.சுந்தரராஜன்(சிட்டி) சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977.

5. முனைவர் இரா.சேது, அண்ணாவின் கதை இலக்கியம். பூம்புகார் பிரசுரம். சென்னை, 1983.

********

தெளிவு
-தேவமைந்தன்

ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்;
மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம்.
பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’
புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவை, எவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...”
“நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார்.
என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். சித்தர் என்றும் சொல்வார்கள். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று.
‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’னே கேட்டே..?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார்.
அது ‘திருமந்திரம்.’
“பிரி, அந்த நூத்திமுப்பத்தொன்பதாம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்கார'மிட்டுக் கொண்டிருக்கிறது. இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்த முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் கூ..டாதே.. திருத்தமா, ஒப்புராவா, ஓசை நிரவி, படி!”
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே”
படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.
ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வயசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார்.
“தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன்.
“ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார்.
“பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு.. தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அத்'தெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அவருதாம்’ப்பா..முனிவரு..ஆங்ங்..தத்தாத்திரேயரு... தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து வேசி, குப்பக்கோழி வரெ இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...”
அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் 'உறைத்தது' என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக, வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி?

******************************
நன்றி: திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரையை வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு.

தமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
-தேவமைந்தன்

பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது.

அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார். அதே பொழுது 'விடுகவி' என்பது கவிதை வடிவிலான விடுகதை அன்று; விடுகவி என்பது தனிப்பாட்டு என்பதை மட்டுமே குறிக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார்.

பிசி என்பது விடுகதை வடிவத்துக்கு மூத்தது. உவமிக்கப்படும் பொருளை உவமைப் பொருளால் குறிப்பித்துக் கூறுவதையே பழந்தமிழர் பிசி என்றனர். இப்பொழுது வழங்குகிற விடுகதை, பிசி என்றதன் செறிவும் அழுத்தமும் கொண்டதன்று.

விடுகதையைத் தமிழ் நாட்டுப்புற மக்களே சிறப்பாக வழங்குகின்றனர். பட்டணத்து நாக்குகளை விடுகதைகள் அணிசெய்வதில்லை.

எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர்.

குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.('கொங்கு விடுகதைகள்' நூலில்)

நாட்டுப்புற இலக்கியமான விடுகதை, காலங்காலமாய் ஒருவரின் இயல்பான மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்துகொண்டே உள்ளது. மொழியின் - மக்கள் சார்ந்த ஆற்றல்களுள் ஒன்றாகவும் முதன்மையானதாகவும் புதிர் அல்லது விடுகதையை அறிஞர் நோம் சோம்ஸ்கி அடையாளப் படுத்தினார்.

சான்றாக, தண்டியம் என்றொரு அழகான சொல் கொங்கு நாட்டில் புழங்குகிறது. தூயதமிழ்ச் சொல். வீட்டின் புறக்கூரையைத் தாங்கும் கட்டையை, வாயிற்படியின் மேற்குறுக்குக் கட்டையைத் தண்டியம் என்று சொல்வார்கள்.

'இரண்டு வீட்டுக்கு ஒரு தண்டியம்' என்றொரு விடுகதை. எங்காவது இரண்டு வெவ்வேறு வீட்டுக்காரர்கள் இவ்வமைப்பை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியானால் இதற்கு வேறுபொருள் அல்லது புதிர் விடுவிப்பு இருக்க வேண்டும். அது என்ன?

முகத்திற்கு இரு பகுதிகள். வலம் இடம் என்று இரண்டு. இரு பகுதிகளிலும் காலதர்(வெண்டிலேட்டர்) போல இரு புருவக்கூடுகளின்கீழ் கண்கள் இரண்டு. இரண்டு பகுதிகளையும் சிறப்பாகக் குறுக்குக் கட்டை/தண்டியமாகிய மூக்கு பிரிக்கிறது; அதேபொழுது சேர்த்தும் வைக்கிறது. எனவே அந்த விடுகதைப் புதிருக்கு விடுவிப்பு - 'மூக்கு' என்பதே.

இப்படிப் பல. அவற்றுள் சில:

இரவிலே சுமப்பான். பகலிலோ சுருண்டு போவான்.(பாய்)

இறந்த மாட்டை அலற அலற அடிக்கிறான் பார்.(மத்தளம்)

இருட்டு வீட்டிலே குருட்டுக் குள்ள எருமை மேயுது பார்.
(பெருச்சாளி)

பார்க்க அழகு. பாம்புக்கோ பகை. அவன் யார்?(மயில்)

அடிபட்டவன் உரக்க உரக்க அழுகிறான். அதைப்போய் மங்கலம் என்கிறது ஊர். அது என்ன?(கொட்டுமேளம்)

சடசட மாங்காய். சங்கிலி ரோடு. விழுந்தா கறுப்பு. தின்னா தித்திப்பு. அது என்ன?(நாவல் பழம்)

உழைக்கத் தெரிந்தவனுக்கு உதைக்கவும் தெரியும். அவன் யார்?(கழுதை)

ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுக்கும் ஒரே விளக்கு. ஊருக்கெல்லாம் பொது விளக்கு. அது என்ன?(நிலவு)

கிச்சா பிச்சா ஊதா ரவிக்கை.(கேழ்வரகு)

குண்டப்பன் குழியில் விழுந்தான். எழுந்தான் பார். எல்லார் வாயிலும் விழுந்தான். அவன் யார்?(குழிப் பணியாரம்)

ஆனை போவுது. தாரை தெரியவில்லை.(கரிசல்)

சிவப்பு ஜிப்பாப் பைக்குள்ளே சில்லறை கொட்டிக் கெடக்குது. (காய்ந்த மிளகாய்)

சுட்ட பொணத்தை சுட, செத்த பொணம் வந்திருக்கு. அது என்ன?(கரித் துருத்தி)

சூடுபட்டுச் செவந்தவன்தான் வீடுகட்ட ஒதவுவான். அவன் யார்?(செங்கல்)

சொறி புடிச்சவனெக் கறி சமைச்சு, சோறெல்லாம் கசப்பு. அவன் யார்?(பாகற்காய்)

தங்கச்சி போட்ட சித்திரம் தரையெல்லாம் தவழுது பார்! அது என்ன?(கோலம்)

சற்றுப் பெரிய விடுகதைகள்:

வலதுபுறம் விளையாடி வலையில் பூரும். வாடாது வதங்காது
மண்மேல் போட்டால். (எழுத்தாணி) [நன்றி: அல்லியங்கோதை அம்மாள்]

ஆனை செத்து ஆறு மாசம். ஆனாலும் அதன் தடம் அழியவில்லை. அது என்ன?(நெல்)

அழகான குழந்தைக்கு பலமா மூணாங்கை. அது என்ன?(அழுகை)

கடுகுபோல் வாயிருக்கும். கணக்கற்ற பல்வரிசை. அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப் பல்வரிசை. அது என்ன? (நத்தை)

பறக்காத பூப்பந்து. பகட்டான சிறுபந்து. வாயிலே இட்டால் தேன்பந்து. ஏழுமலையிலோ பெரிய பந்து. அது என்ன?(லட்டு)

அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் வாயில போட்டும் அரைச்சட்டி மிச்சம். அது என்ன?(சுண்ணாம்பு)

மண்ணுக்குள்ள கயிறு. மக்காத(மட்காத) கயிறு.(மண்ணுள்ளிப் பாம்பு)

மாரி இல்லாம ஆமை கெட்டது. ஆமை இல்லாம சீமை கெட்டது. அது என்ன?(வெள்ளாமை/வேளாண்மை)

தம்பிக்கு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?(உதடு)

வெள்ளை வெள்ளைத் தண்ணீலே வேசை ஆடுறா பாருக்கா!(மத்து)

வெள்ளசீல சுத்தியிருப்பாள் சின்ன குண்டக்கா. அது என்ன?(மோதகம்)

பஞ்சே இல்லாம நூல் விப்பான். பலே கைகாரன். அவன் யார்?(சிலந்தி)

கொம்பு ரொம்ப கம்பு. தொட்டுப் பாத்தா வம்பு. அது என்ன?(தேளின் கொடுக்கு)

ஒரு எழுத்து உமிழும். ஒரு எழுத்து கேக்கும். அது என்ன?(தூ. தா)

உத்தியோகம் இல்லே. ஊர் சுத்தி திரிவான். அலைச்சலுக்குப் பஞ்சமில்லே. தெருவுல சோறு. அவன் யார்?(தெரு நாய்)

ஊளை மூக்கன். சந்தைக்குப் போறான். அவன் யார்?(பனைநுங்கு)

கண்ணுண்டு. பார்வையில்லை. ஆனா, கோத்து வாங்குவான். அவன் யார்?(தையல் ஊசி)

மூடி திறந்ததும் மூக்கை வாசனை தொளைக்குது. அது என்ன?(பலாப்பழம்)

ஒரே மரத்துல அஞ்சு விதமான பழம். அது என்ன?பால், தயிர், வெண்ணெய், மோர், நெய்)

ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் புளுக்கூண்டு தூசி கெளம்பாது.(எறும்பு வரிசை)

பல பேருக்கு ஒரே குடுமி. அது என்ன?(பூண்டு)

பூப்போல மவராசி. காயமானாலும் துணைவருவாள். அவள் யார்?(பஞ்சு)

அழகான வீட்டுக்கு அரக்கன் தலை அலங்காரம். அது என்ன? (திருஷ்டி பொம்மை)

கணக்குப்பிள்ளை பொண்டாட்டி தினுக்குப்போட்டு ஆடினாள். அவள் யார்?(ஆவாரங்காய்)


தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள விடுகதைகளுள் சில:

பூத்தா மஞ்சள். காய்ச்சா சிவப்பு. பழுத்தா கறுப்பு. சாப்[பிட்]டா இரும்பு. அது என்ன?(பேரீச்சம்பழம்)

குதிகுதி என்று குதிக்கிறாள். கொட்டைப் பல்லால் சிரிக்கிறாள். அவள் யார்?('பாப் கார்ன்' எனப்படும் சோளப்பொரி)

பல்லைப் பிடிச்சு அழுத்தினா பதறிப் பதறி அழறா. அவள் யார்?(ஆர்மோனியம்)

கல்லுமேலே பூர்ண சந்திரன். வாங்க. புட்டுப்புட்டுத் தின்னலாம். (தோசை)

தலையைச் சீவினால் தாளில் சீராக நடப்பான். அவன் யார்?(பென்சில்)

இதுவரை இல்லாதது. ஆனால் எப்போதும் இருப்பது. எவருமே அறியாதது.(அடுத்த/வரும் நாள்)

ஒருநாடு போ என்கிறது. ஒரு நாடு வா என்கிறது. அவை என்ன?
(போலந்து, வார்சா)

வேட்டை ஆட முடியாது. வேடர் உள்ள தீவு.(அந்தமான்)

கண்ணுக்குக் கரையே தெரியாது. தண்ணியே இல்லாத தடாகம். அதுல தாவிப்பாயுது பார் சீவனுள்ள கப்பல்.(ஒட்டகம்)

வெளி'ல இருப்பவனைத் அழுத்தினா உள்ளே இருக்கிறவன் அலறி வூட்டையே நடுக்கடிக்கிறான். அவன் யார்?(அழைப்பு மணி)

கையைப் புடிச்சார். காசு கேட்டார். தட்டிக் கேட்கவோ ஆரும் வரலை. அவர் யார்?(மருத்துவர்)

முச்சந்திலே மூணு விளக்கு. பாத்து நடந்தீர்'னா பாதகமில்லே. அது என்ன?('சிக்னல்')

வாயில்லாப் பிள்ளை ஊர் ஊராய்ப் பறக்குது. அது என்ன?(விமானம்)

காத்தடிச்சா பறக்கும் காயிதம். பாத்தா எவனும் பொறுக்கி எடுக்குறான். அது என்ன?(ரூபாத் தாள்)

பூமியிலே பிறக்கும். புகையாகப் போகும். அது என்ன?('பெட்ரோல்')

சண்டையில்லே. யுத்தமில்லே. ஆனா உயிரை காத்துக்க இன்னைய வீரனுவோ போடறது. அது எது? ('ஹெல்மட்')

ஓலம் இட்டாலும் சோறாக்குவான். அவன் யார்?('குக்கர்')

நாளுக்கு நாள் இளைக்கிறவனுக்கோ நாள் காட்ற வேலை. அவன் யார்?(தினசரி காலண்டர்)

ரெண்டு பேருக்குமேல ரெண்டு பேர் தொணை. அவங்க யார்?(மூக்குக் கண்ணாடி)

மண்ணுக்குள்ள மயிர்கோதி.(பனங்கிழங்கு)

நாராசமா ஓசை பண்ணி ஒன்ன கூப்புடும். ஒன் காதுல மட்டும் ஊர்க்கதையெல்லாம் சொல்லும். அது என்ன?(தொலைபேசி)

வீடில்லா நகரங்கள். நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?(தேசப்படம்)

சிறகில்லாப் பறவை. நாடெல்லாம் சுத்தும். அது என்ன?(தபால்)

கறுப்பனுவ கொஞ்சம் அசந்துட்டா வெள்ளைக்காரனுவ ஆட்டம். அது என்ன?(நரை)

புடிக்கவே முடியாது. அத்தனெக் கள்ளப்பய.(புகை)

குண்டுமுழி ராசாவுக்கு குடலெல்லாம் பல்லு. அது என்ன?(மாதுளை)

போறப்போ கெழவி. வர்ரப்போ கொமரி.(சால்)
[சால்= ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்/container made of leather]

குள்ளமான கோழிக்கு கொடலுக்குள் சதங்கை.(நிலக்கடலை)

கைக்குள்ள அடங்கிக்கிடுவான். கண்ணத் தொறந்து மின்னுவான். அது என்ன?('டார்ச் லைட்')

போட்டா பொரியும் இங்கிலீசு முட்டை.(கடுகு)

மண்ணுக்குள்ள மயிரு... பயிராகுது.(வெட்டிவேர்)

வளைக்க முடியும். ஒடிக்க முடியாது. அது என்ன?(தலைமயிர்)

வெள்ளிப் பணம் துள்ளி விழும். அது என்ன?(மீன்)

குளிர் இல்லே. கூதல் இல்லே. குளிர் காயறாங்க. யார்?(கொல்லர்)

சண்டை போடலை. சச்சரவில்லை. குடுமியைப் பிடிக்கிறார். அவர் யார்?(முடிதிருத்தம் செய்பவர்)

சிலுசிலுத்த தண்ணியில செம்மறி ஆடுக மேயுது. அது என்ன?(எண்ணெய்ப் பலகாரம்)

‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட் டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்டித் தொகுக்க ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் வேதமுத்து ஐயா [1971,1975], பி.சி.எஸ். மணியன்[1974] எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி ('சிந்தனையூட்டும் விடுகதைகள்.' ஆண்டு குறிக்கப்படவில்லை) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் 1975ஆம் ஆண்டில் தொகுத்துப் பதித்து வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்தார்.

புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.

முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளுள் பாலியல் சார்பு வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னன்னானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அதை வெளியிட்டது.

பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.

முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்துப் பல்வேறு வகைகளில் ஆராய்ந்தனர்.

குழந்தையைக் குறித்து சொல்லப்படும் மிகச் சிறந்த விடுகதைகளாகக் கருதப்பெறுபவை:

தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?"**** என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.

கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?"*** என்று கேட்டால் அதே விடை கிடைக்கும்.

புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.(**)

இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்''*** என்ற கொச்சை வழக்கு, பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.

புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட்டு லேலோ - அது என்ன?"**
என்று புதுவைக் கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சொல்லப்படுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
"உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"***
என்ற வழக்குக்கு உரியதாகிறது.

தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
"சின்னச் சிறுக்கியும்
சின்னப் பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச்
சென்னப் பட்டணம் பாதி - அது என்ன?"**
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக் கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது.

சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.**
********
பார்வை:

தமிழ் விடுகதைகள்
தேவமைந்தன் திண்ணை.காம் 06-7-6.

எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி(தொகுப்பாசிரியர்), சிந்தனையூட்டும் விடுகதைகள். சிவகாசி.

**முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல். புதுச்சேரி.

*** முனைவர் தி. பெரியசாமி, கொங்கு நாட்டுப்புற விடுகதைகள். சென்னை.

**** முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள். சென்னை.

****
நன்றி: திண்ணை.காம்

ஐயை

கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர்.

மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர்.

குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர்.

மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான்.

தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான்.

கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர்.

திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள்.

அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது.

சிந்தனையைச் செயலாக்கினாள்.

மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள்.

அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான்.

கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை.

பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள்.

பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள்.

பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?

Sunday, December 21, 2008

தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்- தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி)

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன் உருவாக்கக் கூடாது என்று இந்திய அரசின் தந்தித் துறையில் பணியாற்றியவரும் அன்றைய வித்துவான் பட்டம் பெற்றவருமான அ. சிவலிங்கம் 1945இல் சிந்தித்தார். விளைவாக, தமிழ் எழுத்துகளுக்கு உரிய மோர்ஸ் ஒலிக்குறியீடுகளை உருவாக்கினார்.1956ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் நிகழ்ந்த இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டில் செய்தியாளர்கள், தந்திமுறை பற்றி அறிந்தவர்கள், பயனாளர்கள், இது குறித்து அதுவரை எதுவும் அறிந்திராத பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் தந்தி அனுப்ப - தான் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளுக்கான மோர்ஸ் சங்கேதக் குறிகளைக் கொண்டு புலவர் அ. சிவலிங்கம் செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பொழுது புதுக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரசுராமன் என்பவருடைய துணையுடன் தமிழிலேயே தந்தி விடுத்தும் பெற்றும் காட்டினார். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை அவர் செயலாக்கினார் என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் அருமை புரியும். தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் த. நாராயணமூர்த்தி தமிழ்த்தந்தி நடைமுறைக்கு வர ஆற்றிய அரும்பணியையும் தினமணி சுடர் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டது. அ. சிவலிங்கனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் த. நாராயணமூர்த்தி.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடந்த தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினார்.இப்பொழுதும்கூட உலகமுழுதும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு முறையில் ஆங்கில எழுத்துகளின் வழியாகத் தமிழில் தட்டெழுதும் முறை உள்ளது. இதேபோல சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதுதான் தமிழ்த் தந்தி என்று பலரும் நினைத்தார்கள். "அது தவறு; தமிழிலேயே சங்கேதக் குறிகளைப் பயன்படுத்தி தமிழில் தந்தி அனுப்பலாம்!" என்று புலவர் அ. சிவலிங்கம் எண்பித்தார்.முப்பத்து மூன்று ஒலிக்குறியீடுகள் மூலமாக தமிழில் தந்தி அனுப்பவோ, பெறவோ இயலும் என்ற புதிய முறை, புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்தது. எண்களுக்கு மட்டும் ஆங்கிலக் குறியீடுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். வாழ்த்துத் தந்திகளும் எண்களுக்கேற்பத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றன. மோர்ஸ் உருவாக்கிய தந்திமுறையைக் கற்றவர்கள், இவர் அமைத்த முறையைப் பதினைந்து நாள்களுக்குள் கற்றுக்கொள்ள இயன்றது.புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்த தமிழ்த் தந்தி ஒலிக்குறியீடுகள் தற்பொழுது பயன்படுத்தப் பெறுவதில்லை. "என்றாலும் தமிழில் தந்தி அனுப்புவதற்கான முதல் தொழில் நுணுக்க உத்தியை உருவாக்கியவர் அவர்தான். அவரது கனவு இப்பொழுது நனவாகிறது" என்று தினமணி சுடர் 15/01/1994 இதழ்(பக்கம் 22-இல்) தெளிவாகக் குறிப்பிட்டது.தமிழ்த் தந்தி முறை குறித்து அப்பொழுது இந்திய நடுவண் அரசில் தபால் தந்தித் துறை அமைச்சராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் என்ன சொன்னார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.ஆனந்த விகடன் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழில் ஏன் கூடாது?தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் தந்தி அனுப்ப வாய்ப்பும் வசதியும் இருப்பதுபோல் தமிழிலும் தந்தி அனுப்பும் முறை கொண்டு வரப்பட வேண்டுமென்ற யோசனையைத் தபால் மந்திரி டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் 'தேவையற்றது' என்று சொல்லி நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது."இத்தகைய கோரிக்கையினால் நாட்டில் பிளவும் பிரிவினை உணர்ச்சியும்தான் ஏற்படும். இம்மாதிரியான மொழிவெறி சுதந்திரத்துக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறுகிறார்.திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, திரு அப்துல் சலாம், மந்திரி அவர்களைச் சந்தித்து தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மந்திரி முன் அ. சிவலிங்கனாரும் அவருடைய பதினான்கு அகவை மகன் தமிழ்ச்செல்வனும் தமிழ்த்தந்தியைச் செயற்படுத்திக் காட்டினார்கள். ஒரு சிறுவன் அதில் கலந்து கொண்டதைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.அப்போதுதான் மந்திரி சுப்பராயன் அவர்கள் மொழிவெறியின் அபாயத்தைச் சுட்டிக்காட்டி, தமிழில் தந்தி அனுப்பும் முறை தேவையில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் தந்தி அனுப்பும் வசதி வேண்டுமென்று கோருவது எவ்வாறு மொழிவெறியாகும் என்பதுதான் விளங்கவில்லை.தந்தி தபால் போன்ற வசதிகள் படித்துப் பட்டம் பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தான வசதிகள் அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டிய வசதிகள். ஆகவே பெரும்பாலான மக்களுக்கு நன்கு பழக்கமுள்ள மொழியில்தான் தந்தி அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.ஒரு கிராமவாசி ஒரு தந்தி அனுப்புவதற்கோ, வந்த தந்தியைப் படித்துப் புரிந்து கொள்வதற்கோ ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்த பட்டதாரியைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு தடவையும் ஓட வேண்டுமென்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமில்லை............................................ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி ஆட்சி மொழியாகி விட்டது. நிர்வாகம், கல்வி, வர்த்தகம் எல்லாமே தாய்மொழியில் நடக்கும்போது, செய்தியை அனுப்புவதற்கு அந்த மொழி தேவையில்லை என்று சொல்வதுதான் குறுகிய மனப்பான்மையாகும். தந்தி அனுப்ப ஆங்கிலமே போதுமென்றால் இந்தியில் மட்டும் அதற்கான வசதி அளிக்க வேண்டிய அவசியமென்ன? உண்மையில் தபால் தந்தி இலாகாவின் பொறுப்பு, மக்கள் ஒருவருக்கொருவர் செய்தி தெரிவித்துக் கொள்வதை எளிதாக்குவதுதான். தேச ஒற்றுமையை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.தாய்மொழி மீது அளவுகடந்த வெறி கொண்டு யாரோ சிலர் அர்த்தமற்ற கோரிக்கைகளை விடுக்கிறார்கள் என்பதற்காக தாய்மொழி சம்பந்தமான எந்தக் கோரிக்கையையுமே மொழி வெறி என்று சொல்லி நிராகரிப்பது முற்றிலும் நியாயமல்ல."ஐம்பதுகளின் ஆனந்த விகடன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கையில், 15/01/1994 தினமணி சுடர் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழ்த் தந்தி முறை தமிழகத்திற்குப் பயனளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பரிசீலனை செய்யுமாறு அப்போதைய தபால் தந்தி இலாகா அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுவிட்டது."எவ்வளவு காலந் தாழ்த்தப் பட்டிருக்கிறது? முப்பத்தெட்டு ஆண்டுகள்.கடைசியில் தினமணி சுடர் (சனவரி 15, 1994. பக்கம் 22) குறிப்பிட்டது:".......தமிழில் தந்தி தமிழர்களுக்குப் பொங்கல் நாளில் கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது.""தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்த் தொலைவரிமுறை கண்டுபிடிப்பு, பாராட்டுரை" என்ற முடங்கலில் 1998ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பின்வருமாறு மொழிந்திருக்கிறார்:"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கை. தமிழால் முடியாததில்லை என்பதைத் துறைதோறும் அறிஞர் பலர் எண்பித்துக் காட்டியுள்ளனனர். காட்டியும் வருகின்றனர். இவ்வகையில் புலவர் அ. சிவலிங்கனாரின் பணி போற்றத்தக்கதாகும். 1945ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியாற்றிய புலவர் அ. சிவலிங்கனாருக்கு நம் அன்னைத் தமிழில் தொலைவரி அனுப்பும் முறையைக் கண்டுபிடிக்க முடியாதா? எனும் ஏக்கம் பிறந்தது. எப்போதும் இதே சிந்தனை. இரவு பகல் பாராது உழைத்தார். 1955ஆம் ஆண்டு அவர் கனவு நனவாகியது. 13.08.1956 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அஞ்சல் துறைப் பணியாளர் மாநில மாநாட்டிலும், 07.10.1956 அன்று குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் தமிழில் தொலைவரிச்செய்தி அனுப்பும் முறையைச் செயற்படுத்திக் காட்டினார். கொடுத்த தமிழ்ச் செய்திகளை அப்படியே வாங்கி அனுப்பியும் காட்டினார். அனைவரும் வியந்து பாராட்டினர். அயல்நாடுகளின் செய்தித் தாள்களும் அளவின்றிப் புகழ்ந்தன. இச்செயற்பாட்டை நேரிற்கண்டு மகிழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழ்த் தந்திக் கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்திமுறை செயற்படுத்தப்படுமானால் அதனால் வரும் புகழுக்கு அ.சிவலிங்கம் தனியொருவரே உரியவர்.மொழி ஞாயிறு திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கும் அரசியலார் இம்முறையை உடனே கையாள்வதுடன், திருவாளர் அ. சிவலிங்கனார்க்குத் தக்கதொரு பெரும் பரிசும் அளித்தல் வேண்டும். அது அவர் கடன்.இவ்வகையில் தமிழில் தொலைவரிச் செய்தி தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த புலவர் திரு. அ. சிவலிங்கனாரின் அரும்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையையும் இப்பாராட்டுரையையும் தமிழக அரசு வழங்கி மகிழ்கிறது.(ஒப்பம்:........முதலமைச்சர். சென்னை 600 009. நாள் 24.12.1998.)திருவள்ளுவர் ஆண்டு 2029, வெகுதான்ய, ஐப்பசி 28: ஆங்கிலம் 13-11-98 ஆம் நாளிட்ட அரசாணை எண் 114இல், "முதன்முதலில் தமிழில் தந்தி முறைக்கு வித்தூன்றிய புலவர் திரு அ. சிவலிங்கம் அவர்களை அரசு பாராட்டி சிறப்பிக்க வேண்டுமென்றும், பாராட்டி பணமுடிப்பு வழங்க ரு.50,000/-மும், தகுதியுரை, பொன்னாடை போன்றவை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2500/-ம் ஆக மொத்தம் ரூ.52,500/- ஒப்பளிப்புச் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்" என்று கண்டுள்ளது.ஏன் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் என்றால், தமிழ்நாட்டுக்கே உரியதொரு வழக்கத்துக்கேற்ப, 1956-ஆம் ஆண்டு தமிழில் தந்தி முறையை முப்பத்து மூன்று ஒலிக்குறிகளில் இயக்கக் கூடியதாக முதலாவதாக இவர் கண்டுபிடித்து உலகறிய வெளிப்படுத்திய ஒலிக்குறியீடுகளைச் சிறிது திருத்தியும் மாற்றியும் மற்றவர் தமிழில் தந்தி அனுப்பும் முறையை உருவாக்கி நடுவணரசிடம் பெயர் பெற்றதுடன், அதன் அடிப்படையில் தந்தி அனுப்பும் முறை தொடங்கியமையாலேயே இத்தனை வயணங்கள் வேண்டப்பட்டன. இதனால், கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டு மன உளைச்சல் பட்டும் உழைத்து, விடாது முயன்று, சான்றோர் துணையுடனும் எத்துறையிலும் இடம்பெறக்கூடிய நல்லவர்கள் உதவியுடனும் தமிழ்நாட்டரசின் ஆதரவும் பெற்று தாம்தாம் முதன்முதலில் தமிழ்த்தந்தியின் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்தமையை நிறுவ வேண்டிய கடப்பாடும் புலவர் அ. சிவலிங்கனாரைச் சேர்ந்து கொண்டது. இதைக் கேள்விப்பட்டதாலேயே என்னைப் போன்ற பலருக்கு இவர்பால் மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டன.அறிஞர் அண்ணா, சி.ராஜகோபாலாச்சாரியார், காயிதே மில்லத் இஸ்மாயில், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன், கலைஞர் கருணாநிதி, இந்திய அஞ்சல் தொலைவரித் துறை டைரக்டர் ஜெனரல் நஞ்சப்பா, குல்கர்னி முதலானோர் அறிய தமிழ்த் தந்தி முறையை வெற்றியாகச் செயற்படுத்தி பாராட்டுப் பெற்றார்.தமிழ்த் தந்தி முறையை உருவாக்கியது இவர்தம் சாதனை என்றால் தொழிற்சங்கத் தலைவராக விளங்கியது, பல ஊர்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தியது, திருக்குறளை இசையோடு பயின்று மேடைகளில் பாடியது, 'தமிழில் தந்தி' 'உலகக் கவிதைகள்'(இந்த நூலைக் குறித்த தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையை உலகத் தமிழர்கள் ஈடுபாட்டுடன் வாசித்து வரும் திண்ணை.காம் வலையேடு வெளியிட்டது) 'திருக்குறளும் உலகமும்' போன்ற சிறந்த நூல்களை எழுதியது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான்கு நூல்களை என்.சி.பி.எச். சார்பாக மொழியாக்கம் செய்தது, சோவியத் யூனியன் பரிசுகளை வென்றது முதலான பன்முகச் செயற்பாடுகள் இவருடையவை என்று பாராட்டலாம்.புலவர் பட்டத்துடன் ஆங்கில முதுகலைப் பட்டமும் பெற்ற திரு அ. சிவலிங்கனார் திருச்சிக்காரர். 26.05.1924 அன்று கள்ளக்குறிச்சியில் அப்பாஜி - சம்பூர்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1944இல் காரைக்குடியில் அஞ்சல் எழுத்தராகச் சேர்ந்தார். தந்திப் பயிற்சி அரசுப் பள்ளியில் 1945இல் பெற்றார். கரம்பக்குடியில் அஞ்சலகத் தலைவராகப் பணியாற்றியபோது, 1955இல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார்.தற்பொழுது எண்பத்து நான்கு அகவையானாலும் புதிய புத்தகங்களையும் இணையப் படைப்புகளையும் வாசிப்பதில் தளராத ஈடுபாடு கொண்டுள்ள தமிழ்த்தந்தி சிவலிங்கனார் முகவரி:புலவர் அ. சிவலிங்கம், எம்.ஏ.(ஆங்கிலம்)தமிழ்த் தந்தி கண்டுபிடிப்பாளர்,சி-28, தமிழ்த் தந்தி இல்லம்,சேஷசாயி நகர்,க.க.நகர், திருச்சி -21.அ.கு.எண்: 620 0௨௧

********

karuppannan.pasupathy@gmail.com

Wednesday, December 17, 2008

பாவலர் இலக்கியனின் ‘பாவேந்தர் புரட்சி நூறு’(பாக்கள்)
-பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் உணர்வுமிகுந்த அணிந்துரையும் தமிழுணர்வு மிகுந்த பதிப்பாளர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் பதிப்புரையும் சூழ, முன்னுரையிலேயே ‘பாவேந்தர் புரட்சி நூறு’ என்னும் தன் பாத்தொகை நூலுலகில் நின்று நிலவும் என்பதற்கான கரணியங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நம்முன் வைத்துவிடுகிறார் பாட்டறிஞர் இலக்கியன்.

உலகப் பாவலர்களின் வரிசையில் முகாமை தரப்பெற வேண்டியவர் பாவேந்தர்; அவரே புரட்சியின் வடிவம்; ஒரு வரலாறு; சுவைமிக்க பாவியம்; ஒரு வழிகாட்டி; ஒரு கலங்கரை விளக்கம்.

அவர்தம் படைப்புகள் திருத்தமான வாழ்க்கைக்குத் திருப்புமுனைகளாகும் - இருள்படிந்த வாழ்க்கைக்கு ஒளிவிளக்குகளாகும் - நம்மைக் கரைசேர்க்கும் பாட்டுப் படகுகளாகும்.

பாவேந்தர் புரட்சியே தமிழுக்கு உரிய இடம் அளிப்பதுதான். பாவேந்தர் புரட்சிநூறு என்னும் இந்நூலில் உள்ள கருத்துகள் என்றைக்கும் தேவைப்படுவன.

மாந்தநேயம், பகுத்தறிவு, தமிழுணர்ச்சி என்ற மூன்றும் பாவேந்தரால் மிகுதியாக வலியுறுத்தப்பெற்றவை. இவை மூன்றையும் தமிழர்கள் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்க்கை ஏது?

பாவேந்தருடைய அரிய வாழ்க்கை நிகழ்வுகளும் புரட்சிகளும் இந்நூலில் பாக்களாக்கப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன. அவர் சுட்டிய வாழ்க்கை நெறிகள் பொன்னகையில் மணிகள் பொதிந்துவைத்தாற்போல ஆங்காங்கு சுட்டப்பெறுகின்றன.

அடிப்படையில் மாந்தரை ஆட்டிப்படைப்பது கடவுள் நம்பிக்கை ஆகும். அதிலிருந்து மதம் தோன்றி ஆத்மா மோட்சம் நரகம் முதலானவை கிளைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றை அடிப்படையிலேயே மறுத்தவர் பெரியார். ‘வெங்காயம்’ என்ற ஓர் ஒற்றை இயற்கைப் பொருட்சொல்லால் இவற்றைச் சுழற்றிச் சுருட்டிக் குளிகை உருவமாக எங்கும் பேசி வந்தார் பெரியார். அதுகுறித்த பெரியார் சொற்கள்:

“எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்: மடலம்-2, வே. ஆனைமுத்து பதிப்பு, 1-7-1974; பக்கம் 1063.)

முன்னாள் கடவுளை ஏற்று, பின்னாளில் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதிதாசனார் என்ற பாவேந்தர் குறித்த தரவு பயின்று வரும் ‘புரட்சி மின்விசை’[ப.56] என்னும் 44-ஆம் பாட்டுக்குக் கரணியம், பெரியார்வழியைப் பின்னாளில் பாவேந்தர் போற்றியதேயாகும். இதே தரவானது சற்றும் மாறுபடாமல் ஏற்ற இடங்களில் இப்பாத்தொகையுள் பரந்து கிடக்கிறது. [தலைப்புகள் 5,19,21,44,50,63:பக்.17,19,33,62,75.] “தமிழர்கள் செய்த தவப் பயனாகக் கடந்த 2000 ஆண்டுகட்குப் பின்னர் நமக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார். அவரால்தான், வீழ்ச்சியுற்ற நம் வாழ்வு வளம் பெற முடியும்” என்று அவர் தம் தலைமையுரை ஒன்றில் முழங்கியமை குயில் [2-1;நாள்:9-6-1959] இதழில் பதிவாகியுள்ளது.(பாவலர் இலக்கியன், பாவேந்தர் குயில் ஓர் ஆய்வு, பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை-5. திசம்பர்,1989. ப.143.)
பாவலர் இலக்கியன் வரிகள்:
“கடவுளை ஏற்றவர்! பின்னாள் உணர்ந்து
கடவுளை மறுத்தவர் பாரதி தாசனார்.”
அத்துடன் நிறுத்தினால் பாவேந்தரின் தனித்தன்மை புலப்படாது. மேற்படி கடவுட்கொள்கையில் ‘பிழைக்க’த் தெரிந்த பிறர் செய்தி என்னவாம்?

“கடவுளை மறுத்துப் பின்னாள் பிழைக்கக்
கடவுளை ஏற்று வாழ்ந்த வரும்,பலர்!”
அதனால் எந்தப் பயனும் நாட்டுக்கு விளையவில்லை. அதனால் புரட்சி மின்விசையையே நாட்டுக்குத் தந்தார் பாவேந்தர் - என்பதை,

“வண்ணம் மாறினால் வருமோ புரட்சி?
எண்ண மாற்றமே எழுப்பும் புரட்சியை!
மன்பதை மலர மாபெரும் புரட்சி
மின்விசை தந்தவர் விளங்குபா வேந்தரே!”
என்றவாறு தெரிவிக்கிறார் பாவலர் இலக்கியன்.

[மங்காத் தமிழின்] மாண்புறு பாவலன், எங்களின் ஏந்தல்[ப.57], தனிப்பெரும் பாவலன், தமிழ்த் தொண்டன், தமிழிசைக் காவலன், படத்துறைப் பாவலன், பாட்டுத் தலைவன், மக்கள் பாவலன், [உழைப்பவர் உறுதுயர் தீர்த்திட]அழைப்பு விடுத்தவன், சேவற்குரலோன், எரிகதிர்ப்பாவலன், [தன்னலம் துறந்த] தமிழின் வள்ளல் போலத் தன் இயல்பாலும் செயல்திறத்தாலும் தகுதியாலும் தனித்தன்மையாலும் பணிச்சிறப்பாலும் புரட்சி மனத்தாலும் போர்க்குணத்தாலும் பாவேந்தர் பெற்ற சிறப்புக்களைத் தன் இந்நூலின் தலைப்புகளாக்கியுள்ளார் பாவலர் இலக்கியன்.

மற்றவற்றைக் காட்டிலும் பாவேந்தரைப் புரட்சியின் எழுச்சியதன் இயல்பாகப் படிமநிலை(imagery)யில் காணும் பாவலர் உள்ளம் இதோ:

“தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர் தன்னில்
வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்
ஏந்துகோட் டியானை எழுந்தாற் போல
அழுந்திய பழமைக் களரினை யகற்றிப்
பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்
எழுந்தனன் ஈங்கே! எழுந்தது புரட்சி!
விழுந்தது மடமை! விளங்கிய தறிவே!
தொழத்தகு தமிழொளி தோன்றி
எழுச்சி தந்தது எந்தமி ழோர்க்கே!”

புரட்சியின் எழுச்சி தோன்றுமிடம் - ஊர், எத்தகையதாய் விளங்க வேண்டும்? ‘தீந்தமிழ்ப் புதுவைத் திருநக’ராய் விளங்க வேண்டும். அதன் இயல்புகள் நவிலப்பெறும் பாத்திறம் இதோ:
“அலைகடல் விளங்கும் அழகிய மூதூர்!
கலைபல வலர்க்கும் கவின்மிகு பேரூர்!”
மறுக்க முடியுமா? மறுக்க மனம் வந்தால் அந்த மனம் யாருக்குச் சொந்தம் தெரியுமா? பாவேந்தர் கூற்றின்வழிப் பார்ப்போமா?
“மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழையென
இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த
வாய்ப்பில்லார் தம்மை,அவர் வைப்பாட்டி மக்களை
ஏற்கமாட் டோம்தமிழர் என்று”
(பாரதிதாசன் பன்மணித் திரள், சென்னை, 1-8-1963)
என்று பாவேந்தர் ‘தமிழர்’ என்று ஏற்க மறுத்தவர்க்குச் சொந்தம் அந்த மனம். இன்னும் புதுவையின் இயல்புகள், இயல்பாய் இலக்கியன் பாவரிகளாய் வருகின்றன:
“தொலையா நல்லிசைத் தொல்லோர் மரபினர்
விலையிலாப் பனுவல் விளைக்கும் சீரூர்!”
-உண்மை. பரப்பளவு, மக்கள் தொகைக் கணக்கை வைத்துப்பாருங்கள். சுண்டைக்காய் மாநிலம் என்று பூசுணைக்காய்கள் சொல்லும் இந்தச் சிறிய, இந்திய ஒன்றிய எல்லையில் மட்டும் இந்நூல் உட்பட எத்தனை நூல்கள் தமிழ்க் கழனியில் விளைகின்றன என்ற கணக்கெடுத்துப் பார்த்தால் மலைத்துப் போய்விடுவார்கள் மற்றவர்கள்.

இயற்கை நலம், இனித் தொடர்கிறது:
“நெய்தலும் மருதமும் நெடிது விளங்கும்!
பெய்யும் மழையினாற் பெருவளஞ் சேரும்!
நன்னீர் ஊற்றுகள் நலம்செயும்; எங்கும்
பொன்னிறக் கொன்றை பூத்துக் குலுங்கிடும்!
செம்புலம் ஒருபுறம் சிறந்து தோன்றும்.
வெம்மை தணிக்கும் வியன்பொழில் சூழ்ந்தே!
நேருற விளங்கிடு நெடிய மறுகுடன்
ஏர்பெற நிவந்த எழில்மா ளிகையொடு
மரம்பல செறிந்து மாநிழல் தந்திடும்!”

கழககால ஒளவைசொன்ன “அவ்வழி நல்லை வாழிய!” தொடர்கிறது:
“கரவிலா நெஞ்சினர் கனிவுடன் வந்தவர்க்
கீந்தும் இன்விருந் தோம்பியும் வாழ்ந்திடும்
தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர்”
-இத்தகைய திருநகரில்தானே ‘ஏந்துகோட் டியானை எழுந்தாற் போலே’ ‘வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்’ ‘பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்’ புரட்சியே எழுந்தாற்போல எழுந்திடல் இயலும்?

‘மக்கள் பாவலன்’[ப.33] என்ற - பாவேந்தர் புரட்சி நூறில் இருபத்தொன்றாம் பாட்டு, சமநிலையாகவும் செவ்வியல் முறையிலும் பாவலரின் பாவேந்தர் குறித்த வீறுகளைச் செப்பமாகப் பதிவுசெய்துள்ளது. வேறு சொற்களில் சொல்லப்போனால், ஏனைய பாடல்களில் புரட்சிப் பாவேந்தமாக நவிலப் பெற்றவற்றுக்கெல்லாம் சாரமான போக்கில் சரளமான நடையினில் அமைந்திருக்கிறது. மதுரை முல்லைப் பதிப்பகம் அறுபத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் மூன்றுருவா எட்டணாவுக்கு வெளியிட்ட ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதற் பகுதி நூலின் உள்ளுறைக்கு முந்திய பக்கத்தில் இடம் பெற்றுள்ள பாவலர் வால்ட் விட்மன் கருத்துக்குப் பொருந்தியிருக்கிறது. அது,

“உள்ளத்தை வெளிப்படையாக, சீர்தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும், இலக்கணத்திற்குங்கூட அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு படைப்புத் தலைவன். பாடலைப் பார்ப்போம்.

“தந்தை பெரியார் கொள்கையைத் தலைமேல்
முந்தி ஏற்ற மூதறி வாளன்.
முன்னாள் கடவுள் வழியைக் காணினும்
பின்னாள் அதனைப் பிழையென் றுணர்ந்தவன்!

கண்டதைப் பாடும் கயமை விடுத்துளம்
கொண்டதைப் பாடிய கொள்கை யாளன்,
மூட முட்புதர்க் காட்டினைத் தன்னுயர்
பாடற் கருத்தால் பட்டிடச் செய்தவன்!

எவ்வழி மக்களுக் கேற்புடைத் தென்றுணர்ந்
தவ்வழிப் பாட்டை அளித்த தோன்றல்!”

இதே எளிமை ‘பாட்டுத் தலைவன்’ பாட்டிலும் படிந்து கிடக்கிறது.
“குவலயம் போற்றும் குடும்ப விளக்கும்,
எவர்க்கும் கல்வி வேண்டு மென்றே
இடித்துரைக் கின்ற இருண்ட வீடும்,
வெடிக்கும் புரட்சி விளைக்கும் பாவியம்
பாண்டியன் பரிசும், பழந்தமிழ் உணர்வைத்
தூண்டும் குறிஞ்சித் திட்டும், எங்கள்
பாட்டுத் தலைவன் பாரதி தாசன்
நாட்டுக் களித்த நன்கொடை!”
இதுதான் பாவலர் இலக்கியனின் பாட்டுத்திறம்.

‘கடந்த மூன்று நூற்றாண்டுகளாக’ என்றே தமிழுக்கும் தமிழருக்கும் வேற்றுமொழிப்பகை வந்தமையைக் குறிப்பர் பல்லோர். மெய்யாக, நாவலந்தீவின்மேல் கி.பி.1008ஆமாண்டு இசுலாமியர் படைஎடுத்தபொழுதே நாவலந்தீவின் தென்பகுதியும் மொழி-இனம் என்ற இரு நிலைகளிலும் தாக்குதல்பெறத் தொடங்கிற்று. கி.பி.1674ஆமாண்டு பிரஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டனர். இதற்குப் பதினாறாண்டுகளுக்குப் பின்பே கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றிக் கொண்டனர். கி.பி.1857ஆமாண்டில் படைவீரர் கலகம் (சிப்பாய்க் கலகம்) வெடித்தது. கி.பி.1858ஆமாண்டு தான் நம் நாடு நேரடியாக ஆங்கில முடியாட்சிக்குள் வந்தது. கி.பி.1875ஆமாண்டில் இந்திய தேசியப் பேராயம்
தொடங்கியவுடன் இந்திமொழி ஆதிக்கம் தென்னாட்டில் தொடங்கியது. இவற்றுக்கெல்லாம் இணைகோடாகத் தமிழ்த் தேசியமும்; பெரியார், பேராயக் கட்சியினின்று பிரிந்து விடுதலையாகச் செயல்படத் தொடங்கியபின் நேர்கோடாக இடதுசாரித்தமிழ்த்தேசியமும் செயல்படத் தொடங்கின. இந்நோக்கின் விரிவாழங்களுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களின் ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ (தமிழ் முழக்கம், 345, அண்ணா சாலை,சென்னை-600 006: 2005. பக்கம் 20 முதல்...)ஆய்வுநூலை வாசியுங்கள். இத்தகைய வாசிப்பும் புரிந்து கொள்ளுதலும் இல்லாவிடில் ஆங்கிலப்பகை குறித்தும் இந்திப்பகை குறித்தும் பாவேந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாவலர் இலக்கியனின் உணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியாது. குறுகிய மனப்பான்மை என்றே சொல்லவரும். இதனால்தான் புதுவைத் தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரும் “செத்த காக்கைச் சிறகைப் பறக்கவிடும் உத்தியைத் தம் ‘வெல்லும் தமிழியக்கம்’ என்னும் இனவெழுச்சிப் பாத்தொகையுள் பின்வருமாறு மொழிகிறார்:
“முட்டாள் இனத்திற்கு மோதி உதைத்தால்தான்
எட்டும் சிலஉண்மை! எத்தனைநாள் வாய்நோக
நீட்டி முழக்கி நிலவுக் குளிர்ச்சியினைக்
காட்டும்சொல் கூறிக் கரை(றை)வோம் தமிழினமே!

செத்தஒரு காக்கைச் சிறகைப் பறக்கவிடில்
கொத்தவரும் காக்கைக் குலமே பறந்துவிடும்!
காயவைத்த நெற்களத்தைக் காக்கும் வழிஇதனை
ஏயவகை ஆய்ந்துணர்ந்தே ஏற்பாய் தமிழினமே!”

பாவலர் இலக்கியன் கூறுகிறார்:
“பாரதி தாசன் பிறந்த மண்ணில்
சீரக முனையும் செந்தமிழ் இல்லை:
எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்1
பொங்கி வழிகிறது ஆங்கில மதுவே!
தமிழால் உயர்ந்த தமிழ ராலும்
தமிழ்க்கு நலமிலை; தமிழ்க்கு வாழ்விலை;
மண்ணின் மைந்தர் மருண்டு கிடக்கிறார்.”
“பழஞ்சுவடி விரித்தாற்போல் பரந்த நெற்றி, பார்வையிலே தமிழொளியே பாய்ந்து நிற்கும்” தகவுடைய பாவேந்தர்,
“தமிழர்க்குத் தமிழ்மொழியை வாழவைக்கும்
தனிக்கடமை உண்டென்றே சொல்லிச் சென்றார்.
தமிழர்கள் ஆங்கிலத்தைப் பெரிதாய்க் கொண்டார்.
தமிழ்வாழப் பாவேந்தர் சொல்லைக் கேட்பீர்.”

இந்த முறையில்தான் ‘பாவேந்தர் புரட்சிநூறு’ என்னும் இப்பாத்தொகை பாவேந்தர் குறித்து இதுவரை வெளிவராத தரவு-ஆவண-வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தலைப்புகள் 8,18,56,71,77,79,81,83[பக்கம் 20,30,68,83,89,91,93,95] இப்பொருண்மை உள்ள பாக்களைக் கொண்டுள்ளன. இவற்றுள்ளும் 56-ம் 83-ம் குறிப்பாக வேறுபடுகின்றன.

முதலாவது,
“ஆங்கிலப் பேரா சிரியர் ஒருவர்
ஓங்கு புலமையும் உயர்வும் உள்ள
திரு.வி.க.வின், மறைமலை யடிகளின்
பெருமை மிக்க உரைநடை தன்னைத்
திட்டிப் பேசிய தீங்குறு செயலைத்
தட்டிக் கேட்க ஆளிலை யோவெனச்
சீற்றம் மேலிடப் பாரதி தாசனாம்
ஆற்றல் அரிமா முழங்கிய தாங்கே!”
என்பது.

அடுத்தது, பாரதிமேல் பாவேந்தர் கொண்டிருந்த பற்றையும் பாரதி ஆங்கிலத்தின் எதிப்பை மேற்கொண்டவர் என்பது குறித்தும் மொழிவது:

“பாரதி வாழ்வினில் படிந்த பாவலன்.
பாரதி யாரொடு பழகிய பாவலன்.
பாரதி தாசனாய் மலர்ந்த பாவலன்.
பாரதி பெயரைப் பாரதி தாசன்
தாங்கியதாலே தமிழ்ப்பகை என்று
தாங்கா மனத்தினர் தாக்கிப் பேசினர்.
தூங்கிய தமிழினம் துடித்தெழப் பாரதி
ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனன்.
வேங்கை பாரதி வேற்று மொழியின்
தீங்கினை உணர்த்திய திறல்மிகு பாவலன்.
அத்தகு பாரதியின் அரிய புகழினை
இத்தரை வைத்தவன் எம்பா வேந்தனே!”

பாவேந்தர் உணர்த்திய அன்பு வாழ்க்கை, காதல் உயர்வு, முதியோர் காதல் ஆகியவற்றை பாக்களால் எடுத்துச் சொல்லும் பாவலர் இலக்கியன், குழந்தை மணத்தின் கொடுமையைப் பாவேந்தர் தம் பாக்களால் களைய முற்பட்ட சிறப்பைக் “கன்றுகள் காத்தவன்” என்ற தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது புதுமை.

“மணக்கொடை வாங்கும் வழக்கினைத் தணலில் இட்டான் தமிழ்ப்பா வேந்தனே!”(பா.29), “மெல்லிய ரெல்லாம் மேன்மை மிக்க கல்விக் கண்களைப் பெறுதல் வேண்டும் என்று பாடிய எழுச்சிக்குன்றமே! குன்றாப் புதுவைப் புரட்சிக் குன்றம்!(பா.31), “வேரிற் பழுத்த பலாக்க ளுக்குக் கோரினான் விடுதலை, கொள்கைத் தேரினில் வந்த பாட்டுப் பாரியே!(பா.33), “பதுமையாய் வாழும் பாவை மார்க்குப் புதுமை உலகைக் காட்டப் புதுவைப் பாவலன் புறப்பட் டானே!”(பா.37) முதலானவற்றுள் மகளிர்க்காகப் பாவேந்தர் ஆற்றிய புரட்சி வெளிப்படும்.

வாணிதாசனார்க்கும் பாவேந்தருக்கும் நிலவிய உறவின் சிறப்பை “எழுதத் தூண்டினார்!” என்ற பாடல் புலப்படுத்துகிறது. கோவை முத்தமிழ் மாநாட்டிற்கு இருவரும் சென்றுதிரும்பியபொழுது வாணிதாசனார்க்குப் பாவேந்தரால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அது நீங்கிய வயணமும் அருமையாகச் சொல்லப்பெற்றுள்ளன. அதேபோல் “பறந்தது பகைமை!” என்ற பாடல், துரைசாமிப் புலவர் - பாவேந்தர் - வாணிதாசனார் இடையில் நிகழ்ந்த ஓர் நிகழ்வுத்தொடரைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 73ஆம் பாடலான “எரிகதிர்ப் பாவல”னுடன் இதை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால் மேலும் சிறப்பு வெளிப்படும்.

“அழைப்பு விடுத்தவன்,” “விண்கோள்,” என்பவை முறையே புரட்சிப் பாவேந்தரின் பொதுமை உணர்வையும் மொழிஉணர்வையும் ஒளி+ஒலிக் காட்சிகளாய் வெளிப்படுத்துவன.

“இலக்கணத்திற் புலியாகத் திகழ்ந்து வந்த குமாரசாமிப் புலவருக்கு, அவர் துரைசாமிப் புலவரின் மாணாக்கராயிற்றே என்றும் பகை பாராமல், பாராட்டு விழா எடுத்து காமராசர் கைகளால் பொன்னாடை அணிவித்த பாவேந்தரின் சிறப்பை “ மலையருவி” எனும் பாடலில்(48)இனிதாய்க் காணலாம். இதையும் “எரிகதிர்ப்பாவல”னுடன்(73) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பாவேந்தர் பாசறைப் பாவலர்களையும் இவண் பாவலர் சுட்டியிருப்பது பெருந்தன்மையைக் காட்டும்.

மேலும், “தமிழிசைக் காவலன்” பாவேந்தர் - “வள்ளல் அண்ணா மலையரும் போற்றும் இசைத் தமிழ்க் கழகம் இனிது நிறுவி இசைத்தமிழ் வளர்த்ததை”யும்; “நல்ல கொள்கை,” பாவேந்தர் இலக்கியம் குறித்துக் கி.ஆ.பெ. புகழ்ந்து செப்பியதையும்; “படத்துறைப் பாவலன்,” வளையாபதி படத்தில் தானெழுதிய சில வரிகளை மாற்றி எழுதிய வன்செயலுக்காக நாற்பதாயிரம் உருவா ஒப்பந்தத் தொகையை வீசி எறிந்த பாவேந்தர் செய்கையையும்; “கைம்மாறு கருதாதவர்,” தனக்கு எல்லையில்லாத் தொல்லைகள் தந்த கல்வி அதிகாரியின் மகனுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடமும் விடுதியும் பெற்றுத் தந்த அன்னாரது சிறப்பையும்; “அடிமைக் கல்வி,”பிரஞ்சியர் ஆட்சியில் கெஞ்சிக் கிடந்த பல்லோர்க்கிடையிலும் துணிவோடு நின்ற பாவேந்தரின் பெருமையையும்; ‘வெங்கண் வேழம்,” பாரதி பற்றிய படமும் பாண்டியன் பரிசு படமும் எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகத்தால் பாவேந்தர் முடங்கிப்போக நேர்ந்ததையும்; “வென்றது தமிழே,” நாகர்கோவில் நிகழ்ச்சியில் பாவேந்தர்க்கு உருவான கலைவாணர் அரணையும் கவிமணி முரணையும் அருமையாகச் சித்திரிக்கின்றன.

“சேவற் குரலோன்” என்னும் தலைப்பும் புதுமை. “கன்றுகள் காத்தவன்” தலைப்பைப் போலவே இதிலும், பழைமை - புதுமையில் பாய்ந்திருக்கிறது.
“உழைப்பின் வறியவர் ஓடாய்த் திரிவதும்
உழைக்காச் செல்வர் உயர்வை அடைவதும்
உலகம் ஒப்பிய வொன்றாய் இருந்திடில்
நலமார் புரட்சி நாட்டில் எழுந்திட
சேவற் குரலால் செவிப்பறை கிழிந்திட
பாவின் வேந்தன் பரப்பினன் ஈங்கே!”
என்பதிலிருந்து இதனை உணரலாம்.

அருமைப் புதுவை அந்நாளில் எவ்வாறிருந்தது? இந்நாளில் எவ்வாறு இழிந்தது என்பதைப் பாவேந்தம் என்னும் பகைப்புலனில்(contrast) பாவலர் இலக்கியன் “நலமே நாடி!” என்ற பாடலில்(71)படம்பிடித்திருப்பது, உணரத் தக்கதாம். சுந்தர சண்முகனாரின் கரவற்ற உள்ளமும் பாவேந்தரின் பரந்த உள்ளமும் ஒன்றை ஒன்று மதித்த திறத்தை “எழுவோம் யாமே!” எடுத்துச் சொல்லுகிறது.

இன்னும் “முத்திரை பெற்றவர்,” “புரட்சி வெடிக்கும்(இரவலாய்ப் புத்தகம் வாங்குதல் இழிவே என்னும் பாவேந்தர் முழக்கம்),” “தமிழ் வள்ளல்,” “ஆய்வுகள்(பித்தர்தம் ஆய்வுகள் குறித்த பாவேந்தர் சினம்),” “சிறுத்தை வந்தது,” “நடைமுறைப் படுத்துக,” “புகழே பெறு,” “வரிப்புலியாய்ச் செயல்படு,” “வெஞ்சின வேங்கை,” “புறாக்களாய் மகிழ்ந்தார்!(பிரஞ்சுக் குடியரசுத் தலைவராயிருந்த ழுயில்பெரி அவர்களைப் பாவேந்தர் பெருமைப்படுத்தியபொழுது நிகழ்ந்தது),” “தமிழர் நிமிர்ந்தார்!(குழித்தலை மாநாடு), “புரட்சிக் குடியரசு(பாவேந்தரின் -‘குடியரசு” இதழ்த் தோய்வு),” “தமிழ் வீரம்(பாவேந்தருக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அமரவே மாட்டார் - போலும் தறுகண்மைச் செய்திகள்),” “புத்துரை வழங்கியவன்(திருக்குறளுக்குப் புத்துரை),” “குழந்தை உள்ளம்,” “மானக் களிறு(பள்ளியில் பேசிய நிகழ்ச்சி)” ஆகியவை பன்முறை வாசித்துச் சுவைக்கத் தக்கவை. அவற்றுள்ளும் “மானக் களிறு” பாடலில் வரும் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது. தன்னால் தலைமையாசிரியர் ஒருவருக்குப் பணியிடமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பாவேந்தர் கூறிய உத்தி, வியப்பானது.

நூறாம் பாடலான “ஒண்டமிழ்ப் போர்வாள்!” என்பதில் பின்வருமாறு பாவேந்தர்தம் சிறந்த நூல்கள் நிரல்படுத்தப் பெறுகின்றன:

“அவரது நூல்கள் அமர்க்கள வேல்கள்!
எவரையும் எதிர்த்திட ஏந்தும் துமுக்கி!
குடும்ப விளக்கோ வாழ்க்கை விளக்கு!
இடும்பை தீர்க்கும் இருண்ட வீடு!
தமிழை இயக்கும் தமிழ்இயக் கம்தான்!
அமிழ்தைச் சுரக்கும் அழகின் சிரிப்பு!

தேனின் அருவி தெளிவை ஊட்டும்!
கூனல் நிமிர்த்தும் குறிஞ்சித் திட்டு!
பழச்சுளைப் பாவியம் பாண்டியன் பரிசோ
பழகுநல் லினிமையும் புதுமை அறிவும்
இழைந்தே ஒளிர்ந்திடும் ஒண்டமிழ்ப் போர்வாள்!
விழைவுச் செம்பயிர் விளைக்கும் நிலமே.”

நூறு பாடல்கள்; நூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள். ஆனால், பாவலர் இலக்கியன் படைத்துள்ள இந்தப் “பாவேந்தர் புரட்சி நூறு” நூல் விளைவிப்பதுவோ எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்!

*******************************************************************************
ஆசிரியர் முகவரி:
கலைமாமணி இலக்கியன்,
16, பதினைந்தாவது குறுக்குத் தெரு,
அண்ணா நகர்,
புதுச்சேரி - 605 005.
பேசி: 0413 2201786

வெளியீட்டாளர் முகவரி:
வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
சேகர் பதிப்பகம்,66/1, பெரியார் தெரு,
எம்.ஜி.ஆர். நகர்,
சென்னை-600 078.
பக்கம்: 12+100=112.

விலை:உரூ.35-00.

******

Friday, November 14, 2008

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பது எவ்வாறு? -
ஊடகங்களும் மின்வெளியும்
- தேவமைந்தன்

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" என்னும் வள்ளலாரின் விண்ணப்பத்திலுள்ள 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுதல்' என்னும் தீமையை முழுவதுமாகக் கடைப்பிடித்தலையே தம் உயிர்க் கோட்பாடாகக் கொண்டு செயல்படுபவை இன்றைய தமிழ் ஊடகங்கள். இல்லையென்றால், ஓராண்டுக்கு ஓராயிரம் கோடி உரூபாக்களைக் குறிப்பிட்டதோர் அலைவரிசைக் கட்டமைப்பினால் அள்ள முடியுமா?

தமிழர்களில் பலர் மொழி-இன உணர்வில்லாதவர்கள் என்ற குற்றச்சாற்றைத் தமிழ்ப்பணியாளர்கள் மக்கள்முன் வைப்பது சிலருக்கு வழக்கமாக உள்ளது. 'ஆனந்த விகடன்' கிழமையிதழ் அண்மையில் மேற்கொண்டதொரு கருத்துக் கணிப்பின்படி, அக்குற்றச்சாற்று தவறானது என்பது உறுதியாகியுள்ளது. காசுசேர்க்கும் நோக்கம் மட்டுமே கொண்ட வழிகளில், பெரிய - சிறிய திரைப்படங்கள்/தொடர்கள், அவற்றுள் நடித்துக் காசுதிரட்டும் நடிகையர்/நடிகர் குறித்தே நாள்முழுவதும் பார்வையாளர்களின் மூளைகளில் கருத்தியல்/படிமத் திணிப்பைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் ('மக்கள் தொலைக்காட்சி' நீங்கலாக) இன்றைய தமிழ் ஊடகங்களின் தாக்கத்தையும் மீறி, அறுபது விழுக்காட்டுத் தமிழர்கள், தங்களுக்கு இன-மொழி உணர்வு இருக்கிறதென்று புலப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், இவர்கள் அனைவரும் இளைய தலைமுறையினர் அல்லர்; நெடுங்காலமாய் நிலவி வந்த திரைப்பட/திரைநடிகர் கவர்ச்சி/தலைமை மிகை ஈடுபாடு முதலான கொடுமைகளுக்கும் மேற்பட்டு, இன்றைய இளைய தலைமுறையினருள் பெரும்பான்மையினர், [முன்பெல்லாம் ஏந்துமிக்கவர்களும் செல்வம் மிகுந்தவர்களும் மட்டுமே பங்கேற்று வந்த] 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' 'மானாட மயிலாட' முதலான பண்பாட்டுச் சீரழிவுகளில் உள்ளமிழந்து ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கமொன்றே இன்றைய தொ.கா. அலைவரிசைகளில் பலவற்றுக்கு இருப்பதைக் காண்கிறோம்.

ஒருபக்கம் விளம்பர வருமானம்; மறுபக்கம் எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளை நாள்முழுவதும் பார்க்கும் ஈடுபாடு கொண்டவர்களுமான நடுத்தரக் குடும்ப இளையவர்களின் மன அலைச்சல்களுக்கு வடிகால் வகுப்பதன் வழி பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்குதல் என்ற இரண்டு செயல்பாடுகளில் இவை முனைந்திருப்பதை உணர்கிறோம். அதாவது, இந்த அலைவரிசைக் குழுமங்களின் முதலாளியர், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் வளவாழ்வையும் மன-இன-மொழி நலங்களையுமே தம் சொந்த நலன்களுக்காக இரையாக்கி வருகின்றனர்.

1927ஆம் ஆண்டு தொலைக்காட்சியை அமெரிக்க அறிவியலார் பார்ன்சுவொர்த்(Farnsworth,P.T.) கண்டுபிடித்து, அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய ஐம்பது ஆண்டுகளிலேயே அதை வெறுத்த அமெரிக்கர், 'முட்டாள் பெட்டி'(Idiot Box) என்று அதற்குப் பகடிப்பெயரிட்டு அழைத்தனர். பார்வையாளர்கள், தொ.கா. நிகழ்ச்சிகளுக்கு மெல்ல மெல்ல அடிமையாகி விடுவதால் அதற்கு அந்தப் பெயர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென்மார்க் பிரான்சு நாடுகளின் திரைப்படங்களின் எழுத்துப்படி(script)களில், தொலைக்காட்சி பார்ப்பவர்களை நையாண்டி செய்யும் உரையாடல்களைத் திறமையாக அமைத்து அவர்களைத் திருத்தினர். தென்மார்க்குப் படமொன்றில், கதைத்தலைவியானவள், தலைவனிடம் தங்கள் இருவருக்குள் போதுமான அளவு திருமணப் பொருத்தம் உள்ளதா என்று கலந்துரையாடி அறிய முற்படுவாள். அவ்வாறு அவள் அவனை உசாவும் உசாவுதல்களுள் ஒன்று, "இயற்கைக் காட்சிகளில் ஈடுபடாமல், வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா?" என்பதாகும்.

உலகமயமாதலின் உச்சக்கட்டம் - 'நுகர்வோர் பண்பாடு' என்ற ஒன்றை உருவாக்கி, அதை மேன்மேலும் வளர்ப்பது என்பதை இத்தொடரின் முந்திய கட்டுரைகளில் கண்டோம். ஊடகங்களில், குறிப்பாகத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, அதன் அலைவரிசை முதலாளியர்க்குப் பொருள்குவிப்பதில் முதன்மையாகப் பணிபுரியும் விளம்பரங்கள்(commercials), உலகில் உயிர்வாழும் மாந்தர் இனத்தில் ஆற்றல் மிக்க சரிபாதியாக விளங்கும் பெண்களை நுகர்வோராக(consumer) மட்டுமே மாற்றி ஆக்கும் கயமையைக் காண்கிறோம். விலைமிகுந்த - அழகுப்பொருள்களையும் வண்ணவண்ணத் துணிகளையும் பயன்படுத்தி ஓர் ஆடவனைக் கவர்வதையே தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்கள் பெண்கள் என்னும் மாயத்தோற்றத்தையும்; மாமியார்களின் மனங்கவரும் அளவுக்கு, புதிய புதிய பொருள்களையும் கருவிகளையும் விலைக்கு வாங்கித் துவைப்பதையும் சமைப்பதையுமே தங்களின் 'ஆன்ம ஈடேற்ற'மாகக் கொள்ளவேண்டியவர்கள் அவர்கள் என்ற கட்டாயத்தையும்; தங்கள் கணவன்மார்களின் ஏந்துகளைப் பார்த்துக்கொள்ள மட்டுமே உயிர்த்திருப்பவர்கள் என்ற 'தெளி'வையும்; தங்களின் குழந்தைகள் எவ்வளவு அழுக்குப் பண்ணினாலும் இன்முகத்துடன் 'மாயமந்திரம்'போல் குறிப்பிட்டதொரு வணிக நிறுவனம் உருவாக்கும் வழலைத் தூளை/கட்டியைப் பயன்படுத்தி 'வெள்ளைவெளே'ரென அவர்களின் துணிகளைத் துவைத்துப் போடுவதற்காகப் பிறந்தவர்கள் தாங்கள் என்ற 'மெய்ஞ்ஞான'த்தையும் - மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்படும் அவர்களுக்கே உண்டாக்குபவை.

ஆனால், பலதரப்பட்டவர்களும் பெரும்பான்மையானவர்களுமான உழைக்கும் மகளிர் குறித்தும் அவர்களின் பன்முகப்பட்ட இன்னல்கள் இடுக்கண்கள் பற்றியும் எவ்வகைக் கவலையும் படாதவை தொ.கா. விளம்பரங்கள். இந்தக் கருத்தை, இந்தியாவில் தொலைக்காட்சி பரவத் தொடங்கிய காலத்திலேயே(1976-1986) மக்கள் தொடர்பியல் ஆய்வாளர்களான சிபான் முகர்சியும் சுபத்ரா பானர்சியும் பதிவு செய்திருக்கிறார்கள்.(மேலும் அறிய: Jiban Mukherjee, Advertising in India. Subrata Banerjee, Advertising and Small Newspapers.)

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் நடுவண் அரசின் தில்லித் தொலைக்காட்சியும் 1975ஆம் ஆண்டு சென்னைத் தொலைக்காட்சியும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின. 01-01-1976 முதல், அரசின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வணிக விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. அதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிகழ்வில், வணிக விளம்பரங்கள், தனியார் தொ.கா. அலைவரிசைகள் பலவற்றை ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கி வருவதற்குக் கரணியம் 'கம்பிவடத் தொ.கா. முறை'யே ஆகும். இதனால் ஆதிக்கவாதிகளும் செல்வந்தருமான சிலரின் கைப்பிடியிலுள்ள 'கார்ப்பரேட்' என்று சொல்லப்படும் கூட்டுக் வணிகக் குழுமம்சார் நிறுவனங்களிடம் தொலைக்காட்சி என்றதொரு மக்கள் தொடர்புக் கருவியே முடங்கிப் போயிருப்பதை ஊடக ஆய்வாளர்கள் உணர்வர்.

இப்பொழுது தமிழ்நாட்டு அரசு, அதை ஒழுங்கமைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றது. ஏனெனில், தேர்தல்களின் போக்கையும் நேரிவைப்பக(வாக்குவங்கி)இருப்பையும் மாற்றும் வல்லமை அந்தக் குழுமங்களுக்கு இருப்பதையும், அந்த வல்லமை தனக்காதரவாக இல்லாமையும் நிகழ் அரசுக்கு உறைத்திருக்கிறது. மற்றபடி, மக்கள் நலன்குறித்த கவலை எதுவும் இல்லை.

இக்கட்டுரையில் பிறிதோரிடத்தில் சொல்லியிருப்பதுபோல், தென்மார்க்கு பிரான்சு போன்ற நாடுகளில் மக்களிடையே தொ.கா. தொடர்பாக நிலவி வரும் விழிப்புணர்வு நம்மவர்களுக்கும் வந்தால்தான், இந்த ஆற்றல்மிக்க ஊடகத்தின் தாக்குதலால் தம் சொந்த இயல்புகளை இழக்காமல், தமிழினம் முன்னேற முடியும். 'மக்கள் தொலைக்காட்சி' அலைவரிசையில், 'கற்போம் கணினி' போன்ற பயன்மிக்க தொடர்களைக் குறித்து - அறிந்து கொள்ளும் ஆர்வம்கூட இல்லாத தமிழர்களுக்கு இதை எப்படியாவது புரிய வைக்க வேண்டும்.

சாரமற்ற தொ.கா. நிகழ்ச்சிகளில் தமிழர்கள் தம் பொன்னான பொழுதைப் போக்காமல், அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்தரும் பணிகளில் ஈடுபாடு கொள்ள ஊடகங்கள் வழியாகவே பயிற்றுவித்தல் வேண்டும். தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும்(குறிப்பாக முதியவர்கள்) மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிவரும் 'கற்போம் கணினி' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து, முதற்கட்டமாகத் தமக்கென்று ஒரு மின்னஞ்சலையாவது திறந்துகொண்டு, அந்நிகழ்ச்சியின் பயிற்றாசிரியர் கபிலன் ஐயா மொழிவதுபோல் இன்றைய மின்வெளி(Cyberspace) உலகில் தங்களுக்கான முகவரியொன்றைப் பெற முயல வேண்டும். 'தமிழ்க்காவல்' போன்ற வலைத்தளங்களைக் கணினியில் திறந்து பார்க்கக் கற்றுக் கொள்வதுடன், மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவும் கற்பிக்கவும் முன்வர வேண்டும்.

தவிர, கணினி - இணைய உலகில் இன்று மிகவும் பயன்தரும் 'தேடல்'(Search) ஏந்தைப் பயன்படுத்தி, வீட்டில் பழைய புத்தகக் குவியல்களையும் அவற்றால் விளையும் அடுக்குத் தும்மல்களையும் தவிர்த்து, அதே பொழுதில் உலகெங்கும் நிரம்பியுள்ள நூலறிவையும் தமிழ் - தமிழர் பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் பெற்றுப் பயன் பெறவும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். நாளேடுகளிலும் தொ.கா. அலைவரிசைகளிலும் [வேறுவழியில்லாமல், அவர்கள் வெளியிட்டு வரும்] இணையம், கணினி பற்றிய பல்வேறு புதிய செய்திகளையும் படித்து, இல்லக் கணினியில் அந்த மென்பொருள்களைச் சேர்த்துப் பயன்பெற வேண்டும்.

தமிழுக்குப் பாடாற்றும் வலைப்பதிவுகள் பற்பல இன்றுள்ளன. தமக்கு வேண்டியவர்களின் வலைப்பதிவுகளை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு, மற்றவர்களின் வலைப்பதிவுகளையும் கண்டு-கற்கும் பழக்கத்தை வலைப்பதிவர்களும் வாசிப்பாளர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் பதிவுகளுக்குத் தங்கள் கருத்தைப் பின்னூட்டம் செய்யும் பண்பாட்டையும் தங்களுக்குள் உருவாக்கி வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழறிஞர்களும் புலவர்களும் தங்களுக்கென்று வலைப்பதிவொன்றை உருவாக்கிக்கொண்டு, தங்கள் கருத்தைப் பரந்த அளவில் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள முயலவேண்டும். இதற்கெனப் புதுச்சேரி போன்ற நகரம் ஒவ்வொன்றிலும் நிகழ்த்தப்பெறும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளில் தன்முனைப்பின்றிப் பங்கு பெற்றுப் பயில வேண்டும். மரபிலக்கணம் பயின்ற புலவர்களும் பேராசிரியர்களும், 'சந்தவசந்தம்' போன்ற இணையக் குழுமங்களில் பங்கேற்று, பரிமாறப்பெறும் மரபிலக்கணக் கருத்துகளுடன் தங்கள் கருத்துகளையும் முன்வைத்துப் பயன் தரவும் பெறவும் வேண்டும். இங்கு நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் - காசு செலவழிக்கத் தேவையில்லாத, முற்றிலும் இலவயமான முயற்சிகளே.

இரண்டு விரல்களால் பழைய மைத்தூவலைப் பயன்படுத்தி எழுதுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. கூடவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள்போல் பல்வகை உடைமைகள்/ஏந்துகளோடு இனிமையுற்று வாழாமல், சொந்த மண்ணில் இயல்பாக வாழும் வாய்ப்பைக் கூடப் பெறாமல் ஏதிலிகளாகி வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - பற்பல பாடாற்றிப் பல்வேறு அரிய முயற்சிகள் செய்து, இலவயமாகத் தமிழ் உலகுக்கு அளித்து வரும் தமிழ் மென்பொருள்களைப் பயன்படுத்தியாவது "பத்து விரல்களால்" தமிழைக் கணினிவழி எழுதப் பழகுங்கள்.

இதுவே, இன்றைய நிலையில் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'(திருக்குறள் 140) மட்டுமல்லாமல், உலகமயமாதல் நம்மை வென்று எங்கோ மூலையில் ஒதுக்கிவைத்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியும் ஆகும்.

*****************
நன்றி: தமிழ்க்காவல்.நெட், தி.ஆ.2039 - துலை 1 (17/10/2008)

Monday, October 20, 2008

தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- தேவமைந்தன்


சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் - மனம்(conscious), புத்தி(subconscious), சித்தம்(unconscious), அகங்காரம்(ego) என்ற நான்கு. சித்தம் என்பது மனத்தின் நான்கு வடிவங்களுள் மூன்றாவது. சித்தத்துக்கு, 'முடிவான மனக்கொள்கை,' 'மூலப்பகுதி' என்றும் பொருள் உண்டு. சிவாகமத்துள் ஒன்றனுக்கும் மரங்களுள் முருங்கைமரத்துக்கும் சித்தம் என்று பெயர். அணியமாக/திண்ணமாக/ஆயத்தமாக உள்ளதற்கும் 'சித்தம்' என்பார்கள்.

'சித்தன்' என்ற சொல் முருகக் கடவுளையும் அருக தேவனையும் சிவபெருமானையும் வைரவனையும் வியாழனையும் குறிக்கும். மரங்களுள் இலவமரத்தைச் 'சித்தன்' என்பார்கள். காந்தக் கல்லுக்கும் அதே பெயருண்டு. 'சித்தாதிகள்' என்ற சொல்தான், இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவரப்பெற்ற யோகிகளைச் சுட்டும்.

திருமூலர் 'முக்கரணம்' பற்றிக் கூறிய பாடல்களுக்கான உரைகளை வைத்துக்கொண்டு 'சித்தர்' என்பவர் யார் என்பதைக் குறித்துத் திருமூலர் விளக்குவதாகக் கூறி, தாங்களே விளக்கினர் சிலர். சட்டைமுனி நாயனாரின் ஞானப்பாடல்களில் சித்தர் குறித்த விளக்கம் உண்டு. இன்னும் அகத்தியர், கருவூரார் இராமதேவர்,வால்மீகர்,காகபுசுண்டர் முதலானோர் சித்தரை அடையாளப்படுத்தியுள்ளார்கள். சித்தமெனும் சிந்தையில் தெளிவு கொண்டவனே சித்தன்('சூத்திரஞானம்' தொடக்கப் பாடல்கள்) என்ற வால்மீகர் கருத்து இவற்றுள் தெளிவாக நாம் அறியுமாறு உள்ளது.

'கைகூடுகை' என்னும் அறிவின் தெளிவு என்பதில் அறிவில் விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்ச்சி என்ற ஐந்து தன்மைகள் உள்ளன. 'சித்து' என்ற சொல்லுக்கு "அறிவுடையது" என்ற பொருளையும் 'அசித்து' என்பதற்கு "அறிவில்லாதது" என்ற பொருளையும் சிவஞானசித்தியார் சுபக்கம்(பாடல் எண் 159இல் வரும் 'சித்தசித்து' என்ற சொல்லால்) சுட்டுகிறது. ("சித்தினை அசித்துடன் இணைத்தாய்!" - பாரதி, தோத்திரப் பாடல்கள்; எண்:36) 'சித்தி' என்ற சொல்லுக்கு, கைகூடுகை, வீடுபேறு முதலான பதினைந்து பொருள்கள் உள்ளன.(Madras University Tamil Lexicon III:I. ப.1412) ஒன்றை நினைக்கிறோம். அது கைகூடுவதில்லை. அழுந்த நினைப்பது கைகூடினால் அது 'சித்தி' எனப்படும். "ஸித்' என்ற வடமொழி வேர்ச்சொல்லே 'ஸிது' என்றாகி 'ஸித்த' என்னும் சொல்லாகியது" என்பது(முனைவர் க. இளமதி சானகிராமன், சித்தர்களும் சமூகப் பார்வையும், புதுச்சேரி, 1990. ப.1) இதற்குப் பொருந்தாது. ஆனால் "தாங்கள் ஆணையிடுங்கள்; நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன்" என்பதற்கும் "தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்பதற்கும் பொருந்தும். 'சித்தித்தல்' என்ற சொல்லுக்கு 'கைவரப்பெறுகை/ கைவரப்பெறுதல்' என்று பொருள். இது எப்படியென்றால், 'அன்னம்' என்ற சொல் பறவையை உணர்த்தும்பொழுது தமிழாகவும் உணவை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் ஆவது போலவும்; 'நாகம்' என்ற சொல் மலையை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் பாம்பை உணர்த்தும்பொழுது தமிழாகவும் இருப்பது போலவும் ஆகும். மரங்களுள் எட்டிமரத்துக்கும் மூலிகைச் செடிகளுள் 'நிலப்பனை'க்கும் கீரைகளுள் பொன்னாங்காணிக்கும் தூய்மையாக்கும் மருந்துகளுள் சவர்க்காரம்/சலவைக்கட்டி என்று பொருள்படுகின்ற வழலைக்கும் 'சித்தி' என்ற பெயர் உண்டு.(புண்ணிலிருந்து வடியும் நீர், பாம்பு வகையில் ஒன்று, உப்பு வகையில் ஒன்று, கோழை/சிலேத்துமம் - என்பவை 'வழலை'க்கு ஏனைய பொருள்கள்)

சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முஸ்லிம் மெய்ப்பொருளியலும் ஆன்மிக மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் பீருமுகம்மது வாவா என்று நெல்லை மக்களால் அன்புடன் அழைக்கப்பெறும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.) "பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே [தமிழ் சூபித்துவ] ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் தன் ஆய்வில் கூறியுள்ளார்.

'அட்டமாசித்தி' எனப்படும் சித்திகள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. 'அட்டமாசித்தி'யைத் தூயதமிழில் 'எண்மாப் பேறுகள்' என்றும் அவற்றை நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை, விரும்பியதெய்தல், தன்வயமாக்கல், நிறைவுண்மை, ஆட்சியனாதல் எனவும் மொழிவர். அணிமாவுக்கு பிருகி முனிவர் வண்டு வடிவம் எடுத்ததையும்; மகிமாவுக்குத் திருமால் வாமனராக வந்து நெடிய தோற்றம் கொண்டதையும்; இலகிமாவுக்கு அப்பர் என்ற திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபொழுது கல் மிதந்ததையும்; கரிமாவுக்குச் சிபி, புறாவின் எடைக்குத் தானே அமர்ந்ததையும்; பிராத்திக்கு இராவணன், சூரபதுமன் ஆகியோர் எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்ததையும்; பிராகாமியத்துக்கு மூலன் உடம்பில் நுழைந்து திருமூலராய் எழுந்த யோகியையும்; ஈசத்துவத்துக்கு ஞானசம்பந்தர், சுந்தரர், வள்ளலார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளயும்; வசித்துவத்துக்கு, சுந்தரருக்காக இறைவன் தூது சென்றதையும் சான்று காட்டினார் முனைவர் இரா.மாணிக்கவாசகம்.(சித்தர்கள் பரிபாஷை அகராதி, 1982.பக்:188-189.)


'கைகூடுகை' என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், யாகோபு வைத்தியவாத சூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988.]

சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.]

தமிழ்நாட்டுச் சித்தர்களை மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் என்றும் அவர்கள் அல்லாமல் கரூர் சித்தர் என்ற கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் வரிசைப் படுத்துவார்கள்.

தமிழ்நாட்டுச் சூஃபியர்களுள் முகமையானவர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.

வேதத்தையும் மதத்தையும் எதிர்த்தவர்களாகிய சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். நிகழ்சமூகம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராத காலத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்கு மிகுந்திருந்தது. அவர் அவ்வாறு ஆற்றிய சீர்திருத்தங்கள்:-
1. நாட்டிலும் சமூகத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார்.
2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் பாடுபட்டார்.
3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற பிரச்சாரத்தை வன்மையாகச் சாடினார்.
4. அறிவுக் கல்வியும் ஆன்மிகக் கல்வியும் முறையாகப் பெறுவதற்கு மகளிர்க்கு முழு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார்.
5. கோயிலுக்குள் புகலாகாது என்று பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய சன்மார்க்க சுத்த சத்திய சங்கத்தை உருவாக்கினார்.
6. கிழக்கிந்தியக் கம்பெனியின் வழி பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவுக்குள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற விடுதலை முழக்கத்தை முன்வைத்தார்.
7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தார்.
8. தனிமனிதர்கள் தம் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் 'உடம்பா'ரையும் 'உயிரா'ரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தார்.
9. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தமிழ்மொழியின் உரைநடையை வளர்க்கும் படைப்புகளைத் உருவாக்கினார்.
10. ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில், இறைவனைப் புகழ்ந்தேத்தத் தமிழே உகந்தது என்பதை, “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்" என்ற சேக்கிழார்தம் கருத்தை வலிமைப்படுத்தினார்.
12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதி என்னும் ஊழ்வினைக் கோட்பாட்டை(fatalism) அறிவுக் கோட்பாட்டால்(epistemology) வென்று காட்டினார்.

வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்கத்தின் முதன்மை நோக்கம், பேரின்ப சித்தி பெறுதலேயாகும். பேரின்ப சித்தி என்றால் சிற்றின்ப சித்தி உள்ளதா என்ற வினா எழும். ஆன்ம சாதகன் இறைநிலையை முழுமையாக அடையாத காலத்தில் அவனை வந்தடையும் சித்திகளே அவை. பேரின்ப சித்திபெற என்ன வழி? சாதி மதங்களை விடுத்துப் பொது நோக்கம் பெற்றுச் சீவகாருண்யம் வளர்ந்து கடவுள் அருளைப் பெறும்பொழுதே அதனைப் பெறலாம்.(இது குறித்து மேலும் அறிய: முனைவர் அ.செகதீசன், தமிழ் இலக்கியத்தில் யோகம், லில்லி பதிப்பகம், பத்மாவதி நகர், திருப்பதி-2. 1987. பக்.254-314)

தவிர, இன்று ஊடகங்களால் பெரிதும் பரப்பப்படும் யோகாசனங்கள் குறித்து, அன்று வள்ளலார் எதுவும் கூறாமல் விட்டதற்கு இல்லறவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஹடயோகமும் அதன் பகுதியான ஆசனங்களும் சிறப்பாகப் பயன்படாது என்ற காரணம் இருக்கலாம். ஆனால், வள்ளலார் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வடலூரிலும் மற்ற இடங்களிலும் தாமே உருவாக்கிய ஆசனப் பயிற்சிகளைக் கற்பிக்கும் சுவாமிகள் சிலர் உருவாகியிருப்பதற்கு என்ன சொல்வது?

வள்ளலார் என்னும் வடலூர் இராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவின் ஆறாம் திருமுறை மேலும் அவர் காட்டிய 'மரணமிலாப் பெருவாழ்வு' மீதும் அளவிறந்த ஈடுபாடு கொண்டிருந்தார் பாரதி. வள்ளலார் மட்டுமல்லர்; சித்தர்கள்மேல் பொதுவாகவே பாரதியாருக்கு ஈடுபாடு அதிகம். இதே கட்டுரையில் புதுச்சேரிச் சித்தர்களுள் ஒருவராகக் குறிப்பிடப் பெற்றிருக்கும் யாழ்ப்பாணத்துச் சாமிகளைத் தன் வீட்டுக்குக் குரு குவளைக் கண்ணன் அழைத்துவந்ததை பாரதியார்,
"ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை இவனென்றன் மனைக் கொணர்ந்தான்.
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
'அன்றேயப் போதேவீ டதுவே வீடு"
(சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, ப.43)
என்று கூறியதுடன் நில்லாது யாழ்ப்பாணத்துச் சாமிகளைப் பற்றி,
"குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்"
என்பதோடு நில்லாமல்,
"தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி"
(சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, பக்.40-41)
என்றும் தெரிவித்துள்ளார். பாரதி பற்றிக் கட்டுரை எழுதுபவர்களும் படமெடுப்பவர்களும் குருகுள்ளச்சாமி குறித்து வெளிப்படுத்தும் அளவு புதுச்சேரியின் புகழ்மிக்க சித்தர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்து சாமிகளைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை. ஹடயோகியும் ஞானியுமான குரு கோவிந்தசாமி என்றவராலும் புதுச்சேரியில் விந்தையான இரண்டு அனுபவங்களை அடைந்தார் பாரதி.(பார்க்க: மேற்படிப் பதிப்பு, ப.275)

என்றாலும், பாரதியை அவருடைய வேதாந்தப் பாடல்கள்தாம் அடையாளங் காட்டுகின்றன என்றார் ப.கோதண்டராமன் அவர்கள்.(புதுவையில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், 1980, பக்.55-56) இவர்(ப.கோதண்டராமன்) தமிழ்நாட்டை விட்டு நீங்கிப் புதுவையில் அரவிந்தாசிரமத்திலேயே தங்கிப் பணி செய்தவர். 'புதுவையில் பாரதி' என்ற இந்த அரிய புத்தகத்தில் பாரதியாரின் 'சித்தக் கடல்' என்ற சிறிய நூலின் 1/7/1915, 2/7/1915 தேதிகளிட்ட குறிப்புகள்(பக்கம் 41 முதல் 47 வரை) பாரதியின் உண்மையான அன்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படுவன. நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, குடிக்கூலிக்காக வீட்டுக்காரன் கொடுக்கும் தொல்லை முதலாக, தமக்கேற்பட்ட புகையிலைப் பழக்கம் உட்படப் பலவற்றை அவற்றில் புலப்படுத்தியிருக்கிறார் பாரதி. [புதுவையில் பாரதியார் வாழ்ந்தபொழுது அரவிந்தர், பாரதியின் துணைக்கொண்டு செய்த திருவள்ளுவர், ஆண்டாள், நம்மாழ்வார் குலசேகராழ்வார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து முதன்முதலாகச் சிந்திக்க வைத்ததும் 1980இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ப.கோதண்டராமனின் புத்தகமே. பார்க்க: பக்.88-117]

சித்தர்கள் தொகை முதலில் பதினெட்டாகவும் பிறகு இருபதாகவும் ஆனதற்கு, அவ்வப்பொழுது வெளிவந்த சித்தர் பாடல்களின் பதிப்புகளே காரணம். உண்மையில் சித்தர்கள் தொகையை எண்ணி மாளாது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் மட்டும் கழுவெளிச் சித்தர், சிவஞானபால சித்தர், தொள்ளைக்காது சித்தர், மௌலா சாஹிப் மெய்ஞ்ஞானி, நாகலிங்க சாமிகள், அழகர் சாமிகள், சித்தானந்த சாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சாமிகள், இராம பரதேசி சாமிகள், அப்பா பைத்திய சாமிகள், அக்கா சாமிகள், மகான் படே சாயபு, கம்பளி சாமிகள், யாழ்ப்பாணம் கதிர்வேல் சாமிகள், ஞானகுரு குள்ளச் சாமிகள், சட்டி சாமிகள், சீமான் சாமிகள், சடைத்தாயாரம்மாள், திருக்காஞ்சி சாமிகள் முதலான சித்தர்கள், தோராயமாக முப்பதின்மர் வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் கரூர், திருவண்ணாமலை முதலான ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒற்றைவேட்டிச் சாமிகள், அருணாசல சாமிகள், ஆற்றுச் சாமிகள், இராமேசுவரம் சாமிகள், பேயன்பழத் தாத்தா சித்தர் முதலான சித்தர்கள் பற்பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

உண்மையான சித்தர்கள் இரசவாதம் முதலானவற்றை நாடிவந்த மக்களை ஊக்குவித்ததில்லை. மூலிகைகள் பலவற்றின் முதன்மைக் குணங்களை அறிந்து வைத்திருந்த சித்தர்கள் அவற்றின் இனங்கள் பல அழியாமல் காத்தார்கள். மாழை எனப்படும் உலோகங்களின் நுட்பங்களையும் முப்பூ போன்ற சஞ்சீவினி/குருமருந்து(panacea)களின் செய்முறையையும் சித்தர்களுள் பலர் தெரிந்து வைத்திருந்ததோடு மக்களின் தீராத நோய்கள் சிலவற்றைத் தீர்த்துவைக்கவும் முயன்றார்கள்.

சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,

“வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!”
(பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19)

என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.[“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுகின்றனர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றது]

சித்தர்களுக்கு இயல்பு மீறிய(abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!”
(மேலது, பா.35)
என்ற பட்டினத்தார் பாடல் சித்தரிக்கிறது.

சித்தர் பாடல்களின் பல்வேறு பதிப்புகளிலும் அவற்றுக்கு முந்திய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப்பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவுகளும் கடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று:
“மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்”
என்றும்,
“ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்?
ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!”
என்றும் வருபவை இரண்டுமே அவர் பாடியவை என்பது.

மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார், உலகோர்முன் வைக்கும் அளவையியல்(logic) நியாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு நியாயம் போல ‘நெற்றியடி’ கொடுப்பது. கொங்குப்புலவர் நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள அளவையியல் நியாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ:

“மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே”

கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல்களுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு?

தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் தமிழகத்தில் நிலவுகிறது. 'சித்தர்' என்பதற்கும் 'சித்த மருத்துவர்' என்பதற்கும் இடையில் அது நிலவுகிறது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த சமூகத்தின் குடும்ப மனிதர்களுக்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் அப்படியல்லாத தொழில்முறை மருத்துவர்கள். அவர்களையும் சித்தர் என்று ஏற்றுக்கொள்வது சரியா?

புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’(form) என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த காலத்தில் அச்சிடப்பெற்றது. அந்நூலுக்கான மதிப்புரை, ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் டி.வி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி:
“கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...”

மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ யோகமுறைகளும் ஆசனமுறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[யோகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலே ஐந்தாம் பக்கத்தில்தான் தொடங்குகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் ரோமன் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் யோகம் பற்றியும் மருத்துவம் பற்றியும்தான்...

இத்தோடு போய்விடவில்லை. சித்தர் பாடல்களுள் கலப்படமும் இடைச்செருகல்களும் ஏராளமாய் நடந்தேறியுள்ளன. அண்மையில் வாழ்ந்தவரும் வாழ்ந்துகொண்டிருப்பவரும் கூட,சித்தர் பாடல்களைப்போல் தாமே எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். உலோகாயதச் சித்தர், தடங்கண் சித்தர் போன்ற பெயர்களில் சித்தர் பாடல்கள் தொகுப்பில் அவர்களின் பாடல்கள் உள்ளதுடன், மிகச் சிறந்த ஆய்வாளர்களும் அவற்றை நம்பி மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

சித்தர்களின் பின்புலமோ கருத்தியலோ அறிய அவர்களின் பதிவுகளை நேர்மையுடன் தொகுத்துப் பதிப்பித்தல் வேண்டும். தவிர, திரு த. கோவேந்தன் இரா.இளங்குமரன் போன்ற பதிப்பாசிரியர்களும் சித்தர் பாடல்களின் எழுத்துப் பிழைகள் நீக்கி யாப்பைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனரே தவிர பாடல் தொகுப்பை வரிசைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியதாகவோ முயன்றதாகவோ தெரியவில்லை...ஒருவர் பதிப்பில் பாடல் எண்ணிக்கை கூடியுள்ளதற்கும் மற்றவர் பதிப்பில் குறைந்துள்ளதற்கும் யாரும் காரணம் காட்டவில்லை.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.63)

தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு 'வகைமாதிரி'க் கவிதைகள், 'இறைவனும் பிரபஞ்சமும்' நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.)

பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும் -

1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். "..இலங்கை இந்திய கலாசாரப் பின்னணியின் மூலம் சூஃபி ஞான வளர்ச்சியில் இன்னொரு திருப்பத்தையும் காண்கிறோம். பற்பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம். இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மாணிக்கப்பூர் தந்த மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய சகோதரர்களனைவரும், அங்கு சென்று, அன்னாரை நினைவு கூர்வதைக் காண்கிறோம்."(தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு, 1995. ப.97)
2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.
3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.67)
4. குறிப்பாக, எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.
5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய - தெளிவான - நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை/சொத்துக் குவிப்பவர்களின் 'வேக'த்தை மட்டுப்படுத்தினர்.
"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய்
ஒன்றா யிரண்டு மாகி
உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி
ஊருடன் பேருமா கிக்
கானாகி மலையாகிவளைகடலு மாகியலை
கானக விலங்கு மாகிக்
கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி
கண்டபொரு ளெவையு மாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி
நாதமொடு பூத மாகி
நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
நன்மைசெய் தாளு தற்கே
வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வரு கவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே"
என்ற பாடல் குணங்குடி மஸ்தான் ஸாஹிபு அவர்கள் பாடியது.

சித்தர் திருமூலர் பாடியவை பின்வருமாறு:

"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே

உடலாய் உயிராய் உலகமே தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

திருமூலரின் பாடற்பொருளை மஸ்தான் சாஹிபு அவர்களின் பாடற்பொருளோடு ஒப்பு நோக்கினால்(இறைவனும் பிரபஞ்சமும், ப.147) தமிழ்நாட்டுச் சித்தர்களும் சூஃபியர்களும் எத்தகைய புரிந்துணர்வுடன் தாங்களும் வாழ்ந்து மக்களையும் நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

********
karuppannan.pasupathy@gmail.com
திண்ணை.காம் வலையேட்டில் அக்டோபர் 09, 2008 வியாழக் கிழமையன்று 'அரசியலும் சமூகமும்' என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பெற்றது.

Saturday, August 30, 2008

எப்பொழுதுமே தமிழராக இருக்கக் கூடாதா? - தேவமைந்தன்

உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர்.
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.
என் பெயர்ப்பலகையைக் கண்டு இளைஞர் இருவர் உரக்கச் சொன்னார்கள்: "சார் தமிழ் வாத்தியார். அதுதான் தமிழ் போர்டு மாட்டியிருக்கிறார்!" ஆக, தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் தமிழாசிரியர்; தமிழெண் உந்தில் இருந்தால், தமிழ் தொடர்பானவர்; தமிழைக் குறித்து அக்கறையாகப் பேசினால் தமிழால் பிழைப்பவர்; தூயதமிழ் குறித்து வலியுறுத்தினால் பா.ம.க. அல்லது 'மக்கள் தொலைக்காட்சி ' தொடர்பானவர்.....
அறுபதாண்டுகளுக்கு முன் எவராவது 'வணக்கம்' என்று சொன்னால், "என்னடா! நீ தீனா மூனா கானா'வா?" என்று கேட்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
காலம் இங்குமட்டும் உறைந்து போனதா?
தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பங்குச் சந்தை குறித்து இல்லத்தரசிகளும் அறிந்து கொள்ள 'ஹலோ சந்தை.' 'பரஸ்பர நிதியம்' குறித்து ஓர் ஐயத்தை வல்லுநர் விளக்குகிறார். பக்கத்தில் இருந்த விருந்தாளி கேட்கிறார்: "பரஸ்பர நிதியம் என்று தமிழில் சொல்லுகிறாரே.. அது 'ம்யூச்சுவல் ஃபண்ட்' தானே?" அது தமிழ் அன்று என்று சொல்லுவதைக் கவனிக்காமல், தொ.கா. பெட்டியையே பார்க்கிறார். "அப்ப வரட்டுமா?".. 'சட்'டென்று புறப்பட்டுப் போய்விடுகிறார்.
"கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ஒரு கொடுமை வந்து தலைவிரித்தாடுகிறதாம்!" என்று மக்கள் சொல்வார்கள்.
கோவிலொன்றில் சிறுவன், தன் தங்கையைக் குறித்து தாயிடம் முறையிடுகிறான். "மம்மீ! இங்க பாருங்க! இந்தக் 'கேட்'டை செளம்யா புடிச்சி புடிச்சி இழுக்கிறா!" நான் தலையிடுகிறேன். "தம்பீ! அது 'கேட்' இல்லே.. பூனை.." அவன் சொல்கிறான்: "அங்கிள்! எங்க மிஸ் அதைக் 'கேட்'டுன்னுதான் சொல்லச் சொல்லியிருக்காங்க.. அவங்க 'ஃபர்ஸ்ட் தெளசண்ட் வொர்ட்ஸ்'ன்னு 'புக்' வச்சுக் காட்டிருக்காங்களே.."
அவனாவது பேசினான். அவன் தாயோ என்னைப் பார்த்து முறைத்தார். அவர்களிருவரையும் பிடித்து இழுத்தவாறு அவ்விடத்தை விட்டே அகன்றார்.
இப்பொழுது சீனத்தில் நிகழும் உலக விளையாட்டுப் போட்டி குறித்து அங்குள்ள மூத்த மொழியியல் அறிஞர்(#) மொழிகிறார்: "எங்கள் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்; எங்கள் வீரர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவது பற்றிப் பெருமிதம்தான்; ஆனால் இதைச் சாக்கிட்டு விளையாட்டு வகைப் பெயர்கள், உணவு வகைப்பெயர்கள் முதலியவை பல்லாயிரக்கணக்காக எங்கள் மொழியில் புகுகின்றனவே! இதை நினைத்தால் எனக்குக் கவலையே மேலிடுகிறது!"
"நாம் தமிழர்!" என்னும் உணர்வு, எப்பொழுது நம்மவர்களுக்கு வரும்? அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஊதியத்தில், அதன் உயர்வில், பணியிடம் தொடர்பான மாற்றங்களில், அடைந்துவரும் ஏந்துகளில், ஊதிய உயர்வுப் பரிந்துரைகளில் வேற்று மொழிக்காரர்கள் கைவைத்தால் மட்டுமே வரும். எல்லாம் சரியானதும், வந்த விரைவில் போய்விடும்.
தன் பிள்ளை வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டிய நிலைக்கு வருந்தாமல், படிக்கும் பள்ளிகளில் தமிழ்ச் சொற்களைப் பேசினால் தண்டம் கட்ட வேண்டி வருவதற்கும் அருவருப்படையாமல், அந்தப் பள்ளிகளுக்கு அளவுக்கு மிகுதியாகக் கல்விக்கட்டணத்தையும் - கட்டடங் கட்ட நன்கொடையையும் கடன்வாங்கியாவது தரவும் கவலைப்படாத பெற்றோர்களும்; இவைகுறித்து இரட்டை நடிப்பை இயல்பாகப் போட்டு அன்றாடம் நடிக்கும் அரசியல்வாணர்களும் இருக்கும் நாட்டில், நச்சுமரம் பழுத்ததுபோல் உலகமயமாதலும் முதிர்ந்து வரும்பொழுது, "நாம் தமிழர்!" என்ற உணர்வு தமிழர்க்கு ஒவ்வொரு நிமையமும் நீடிக்கப் பாடாற்ற வேண்டிய பங்களிப்பைச் சிறு - பெரு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் ஊடகம் நடத்துவோரும் தர முன்வந்தால்தான் தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கும்.
அடிக்குறிப்பு:
இத்தனைக்கும் சீனத்தின் வடக்கு - நடுவண் -மேலைச் சீனப்பகுதிகளில் பேசப்படும் 'மண்டாரின்' என்ற கிளைமொழியே சீன அரசின் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஒலிப்புமுறை இடத்துக்கு இடம் மாறுபடாதிருக்க, பீஜிங் மக்களின் ஒலிப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு 1956ஆம் ஆண்டில் 'பின்-யின்' என்ற ஒலிப்புமுறை உருவாக்கப்பெற்றது. நடைமுறை ஆய்வுகளின் பின்னர், இரண்டாண்டுகளுக்குப்பின் அது செயல்முறைக்கு வந்தது. இந்தப் பின்-யின் ஒலிப்புமுறையைக் கொண்ட சீனமொழி, உரோமன் எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. இதுவே இன்றைய சீனத்தின் கல்விமொழி; பன்னாட்டுத் தொடர்பு மொழியும் இதுவே.
இம்மொழியையே - மூத்த அறிஞர் சுட்டுகிறார்.
நன்றி: தமிழ்க்காவல்.நெட் 17-8-2008.