13.9.06

செருப்பாலடித்த சமூகம் - - தேவமைந்தன்

பசித் தளர்ச்சியில்
பாதி மயக்கத்தில்
இணையம் உலாவிவிட்டு
திரும்பிக் கொண்டிருந்தேன்,வீட்டுக்கு.
விமானதளச் சாலைஇறக்கத்தில்
தெரு முடுக்கொன்றில்
உள்ளாட்சித் தேர்தலுக்குமுன்புவரை
குப்பைத்தொட்டி ஒன்றிருந்தஇடத்தில்,
நடுத்தர வயதுக்குப்பை பொறுக்கும் பெண்
சொந்தமாய் ரகசியங்கள் எதுவும்
வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாமல்
மல்லாந்து கிடந்தாள்.
மனிதம் உந்த அருகில் சென்றேன்.
“ஏன்’மா - சாராயமா?எ(ழு)ந்திரு எ(ழு)ந்திரு..”என்றேன்.
கொஞ்சம் தற்காலிகமாகவும்
மிச்சம் போனால் போகிறதென்றும்
பாதிக்கண்களின் மீதி திறந்தாள். உளறினாள்.
“மிஸ்’ஸே!* எம் புருஷனுந்தான் ஊத்திக்கிணு
ஊத்திக்கிணு பூட்டான்..அவனெ கேக்காம வுட்டுட்டு
என்னெ வந்து கேக்(கி)றீயே!
நீயும் ஆஞ்சாதி’ங்குறதிமிருதானே?”

பக்கத்தில் நடந்து வந்தவர்சொன்னார்:
“நீங்க பாட்டுக்குபோக வேண்டியதுதானே?
இதுங்களுக்கெல்லாம் நல்லது சொன்னால்
மண்டை’ல ஏறுமா?
சாதாரணமா’வே ஏறாது!இதுல சாராயம் வேற!
போவீங்களா..ம்...ம்”

கேட்டேன் அவரை,நறுக்கென்று:
“நீங்கள்’லாம் பாத்துட்டு மட்டும் போறதுக்கா
அவ’ அப்படி அங்க கிடக்கா?
சொல்லட்டுமே..தப்பாவா சொன்னா?
ஞாயமான கேள்விதானே?
புருஷன் குப்பை பொறுக்கினாரு.
அவரு போனப்புறம்பொண்டாட்டியும்
குப்பை பொறுக்கணுமா?
விபத்துல போனா இத்தனை பணம்-
மனுஷனுங்கனுங்க உண்டாக்குற
அழிம்புலபோனா இத்தன லட்சம்’னு அறிவிக்கிறாங்காளே!
இந்த ஜீவன்களுக்குஎந்த ஞாயமும் இல்லியா?”
கேட்டுவிட்டு விடுவிடுவென நடையைக் கட்டினேன்.
செருப்பால் அடித்த சமூகம்.

(மிஸ்ஸே = ஐயா/'சார்' - புதுச்சேரி பிரஞ்சுத்தமிழ்ச் சொல்)

நன்றி: கீற்று.காம்

No comments: