8.5.09

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்
- தேவமைந்தன்

சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது.

நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன் எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார்.

"தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன்.

அதனால்தான் தங்கப்பா, "மரபு வழி முயற்சிகள் மிகக் கடினமானவை. யாப்பிலக்கணம் படைப்பாற்றலுக்குத் தேவையற்றது. அவை பழமையின் அடையாளங்கள் என்று எண்ணும் அவர்கள் தங்கள் எண்ணங்கள் பிழையானவை.. கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் அக்கறை செலுத்தினால் எளிய மரபு வடிவங்களைக் கொண்டே பாட்டுணர்வை நன்கு வெளிப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு இப்பாடல்கள் பயன்படுமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாயிருக்கும்" என்று பனிப்பாறை நுனிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

என் கனவுப் பனிப்பாறை
கடல் மேல் தெரிவது
கழுத்துக்கு மேல்தான்

என்று 'போதாமை'யைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இரவும் பகலும் எள் இடைவிடாமல்
உள்ளிருந்து என்னுள் உயிர்க்கூத்தாடும்
இயற்கைக் காதல் முழுமையும்
உணர்த்திட வெளிச்சம் போதவில்லையே

என்பதுவே அப் 'போதாமை.'

'விட்டு விட்டு எழுந்து வா' என்ற பாடலில் வாழ்க்கையின் பொய்ம்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்:

இன்னும் எத்தனைக் காலம்
மரப்பாச்சியையும் மணல்வீடுகளையும்
வைத்துக்கொண்டிருப்பாய்?
விட்டு விட்டு எழுந்து வா,
திருமண மேடை காத்திருக்கின்றது.
எத்தனைப் பேர்கள்
பிறந்து இறக்கின்றோம்.
வாழ்க்கையை வாழ்பவர்
எங்கோ ஒருவரே.

உண்மையானவருக்கு அடையாளம், 'முகத்துதிக'ள் எனப்படும் பாராட்டுரைகளால் தாக்கப்பெறாமல் எப்பொழுதும்போல் இயல்பாக இருப்பதுதான்.
அதற்கு ஒரு காட்சிப் படிமம் தருகிறார் தங்கப்பா.

உண்மை மெழுகு

அவன்
உண்மை என்னும்
மெழுகு பூசிக் கொண்டிருக்கின்றான்.
பாலும் தேனுமாய்ப்
பாராட்டு உரைகளைத்
தலையில் கொட்டினும்
வழிந்து கீழ்ப் போகுமே அன்றி
ஒருதுளி அவன்மேல் ஒட்டுவதில்லையே.

அறிவின் தோல்வி கண்டு அஞ்சுபவர்கள் பலர். ஆனால் அறிவுதான் படைப்பாற்றல் மிக்க 'பாட்டு வாழ்க்கை'க்குத் தடையாக இருக்கிறது. 'எது வாழ்க்கை?' என்ற தேடல் தோல்வியில் முடிவதற்குக் காரணம் அந்தத் தேடலுக்கும் அறிவே துணையாக வருவதுதான். இதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறார்கள்? அறிய வேண்டியது அதுவே. அறிவு அதற்குத்தான் பயன்படும். வறட்டுத்தனத்தைத் தான் வெறும் அறிவு தரும். படைப்பாற்றலுக்கு அறிவின் வழிப்பட்ட வழிகாட்டி உரைநூல் கிடையாது. படைப்பாற்றல் - "பாட்டு மீன் துள்ளி/ மடியில் விழுந்தது"(ப.பா.நு. பக்.10) என்பதுபோல் மிகவும் தற்செயலாக நிகழ்வது.

வாழ்வியல் அடிப்படைகள் கூட கிடைக்காமல், கணக்கற்ற மக்கள் இலங்கையிலும் சூடான் எத்தியோப்பியா இந்தியா முதலான நாடுகளில் திண்டாடித் தவிக்கும்பொழுது மேலும் மேலும் தம் வாழ்வில் வண்ணம் சேர்த்துக் கொண்டு போகும் தன்னலப் புழுக்களை எங்கெங்கும் காண்கிறோம். தன் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட ஏந்துகளையும் எடுத்து விடலாமா...

என் வாழ்க்கைக்கு
இன்னும் வண்ணம்
தீட்டச் சொல்கிறாய்.

வெற்றிடங்களை
நிரப்பச் சொல்கிறாய்.

இருக்கும் வண்ணத்தையும்
எடுத்து விடலாம்
என்று நினைக்கிறேன்.

வெற்றிடங்களும்
கருத்துணர்த்துமே.

உயிர்ப்பு வெளிப்பட
ஓரிரு கோடுகள், வளைவுகள்
போதும்.
வண்ணம் எதற்கு?

இவ்வாறு சிந்திக்கும் தங்கப்பாவின் பாடல் 'வாழ்க்கை ஓவியம்.' கருப்பு வெள்ளை வண்ணப் படங்களையே காண மறுக்கும் கண்களுக்கு இந்தக் கருத்தாடல் பிடிக்காதுதான். "ம்...வாழ்க்கையில் வளரவே வேண்டாமென்கிறாரா தங்கப்பா? இவர்போல ஒரு மிதிவண்டியில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு நாமும் மிதிக்க வேண்டுமா?.. சிற்றூர் மக்கள்தாம் உயர்ந்தவர்களாம். அவர்களிடம் உள்ள கரவுள்ளம் நகர மாந்தர்க்கு வருமா? ம்..ம்..சிற்றூர்களில் என்ன உள்ளது? 'ஷாப்பிங் ஃபெசிலிட்டீஸ்' கொஞ்சமாவது உண்டா?" என்று முனகும் இன்றைய தமிழருக்கு 'வாழ்க்கை ஓவியம்' பாடல் உறைக்காதுதான். ஆனால் இதோ இந்தப் பாடல் மெத்தவும்தான் சுவைக்கிறது. கனடாவில் தமிழ்ச் சிறார் சிறுமியர் இடை 'ஆடப்படும்' பாடல் -

‘டாடி மம்மி வீட்டில் இல்லே
தடைபோட யாருமில்லே
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
இண்டோர் கேம் இது.................
மைதானம் தேவையில்லே, அம்பயரும் தேவையில்லே
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா!”

என்பதாம். தமிழ்ப்பற்றுள்ள தங்களை டாடி மம்மி என்றழைக்க, புலம்பெயர்ந்தோர் மனங்கள் எவ்வாறு ஒப்புகின்றன? - என்று நொந்து கேட்டிருந்தார் கனடாவைச் சார்ந்த கட்டுரையாளர்.(வி.என். மதிஅழகன், ‘கலாச்சாரம் காக்கத் துடிக்கும் கனேடிய டாடி மம்மிகள்’ (பத்தி), யுகமாயினி 2:6, எண்:18, மார்ச் 2009. பக். 18-21.) அவர்களே இப்படி எனில், தமிழக மக்களிடையே எளிமையை, தமிழுணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆராய்ச்சி மூளையை அறவே சாடுகிறார் தங்கப்பா.

துருவிப் பார்க்கும்
உனது மூளையாம்
நுண்பெருக் காடியைத்
தூக்கி வீசு.

கொசுவும் கூடப்
பூதமாய் வெளிப்படும்;
வேண்டாம்.
வியப்புறும் விழிகள்
விரியட்டும் அன்பால்.
வாழ்க்கை விளங்கும்.

ஏன்? எதையெடுத்தாலும் நோண்டி நோண்டி, தோண்டித் துருவிப்பார்க்கும் மூளைக்கு அன்பு புலப்படாது என்பதால்தான். அது தன்னகந்தையிலே திளைக்கும். அடிவருடிகளை ஒழுங்கு செய்து கொள்ளும். விழா விருதுகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும். தன்னைக் கொண்டவனின் ஒவ்வொரு காலடியும் தன் நலத்தை நோக்கி நடைபோடுகிறதா அல்லவா என்று உளவு பார்க்கும். யாரை வீழ்த்தலாம், எப்படி வீழ்த்தலாம் என்று ஒவ்வொரு கணமும் திட்டமிடும். அது நடத்து விழா பற்றி, 'பனிப்பாறை நுனிகள்' நூலில் அருமையான பகடிப் பாடல் ஒன்றிருக்கிறது. அது இது:

எப்படி?

அரசியல் தலைவர்
பிறந்தநாள் விழாவில்
மேடை மீது
வீற்றிருந்தவர்களின்
கால்களை எண்ணினேன்.
சரியாய் நாற்பது.

வாழ்த்துப் பாட
எழுந்து நிற்கையில்
முகங்களை எண்ணினேன்
அவையும் நாற்பது!
அடடே, எப்படி?

வாசித்தீர்கள் அல்லவா? இந்தக் கணக்கு உங்களுக்குப் பிடிபட்டதா? பிடிபடவில்லையென்றால் தமிழகத்துக்கு வந்து அத்தகையதொரு மேடைமுன் அமர்ந்து எண்ணிப் பாருங்கள். புலப்படும்.

இதுதான் போகிறது! அரசு விழாக்கள் எப்படி? 'தமிழன் என்றோர் இனமுண்டு / தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.. அந்த இனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) அரசுகள் நடத்தும் விழாக்கள் குறித்த தங்கப்பாவின் பாடல்:

அரசு விழாக்கள்

குயில்களாய்ப் பாடக்
கோட்டான் கூட்டமும்,
மயில்கள் போல் நடிக்க
வான் கோழிகளும்
அழைக்கப் பட்டன -
அரசு விழாக்கள்.

மெத்தப் படித்தவர்கள் நடத்தி மகிழும் கருத்தரங்குகளுக்கும் மேனிமினுக்கிகள் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொழுக்கும் ஆடரங்குகளுக்கும் ஒன்றும் பெரிதாக வேறுபாடு இல்லை. அவை அறிவின் கொழுப்புகள். இவை உடலின் கொழுப்புகள். அத்தகையதொரு திரைக்கொழுப்பினால்தானே டானி பாயில் நம் சேரி மக்களை 'சேரிநாய்கள்' என்றான்? வறுமையைக் கண்டு பொங்கி எழ வைக்காமல், பொழுதுபோக வைத்த டானி பாயிலுக்குப் புகழ்.. உடலாலும் உளத்தாலும் ஊனமுற்றவர்கள் யார் யார் என்று இனங்காட்டிய பாலாவுக்குக் கண்டனம்(படம்: 'நான் கடவுள்'). இது இன்றைய உலகம்.

அதனால்தான் 'அறிவுச் செவி'டாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறார் தங்கப்பா.......

அறிவுச் செவிடு

வேண்டாம் என்று
சொல்லச் சொல்ல
என்னை மேடையில்
ஏற்றி வைத்தனர்.
படித்தவர்களின்
பளபளப்புகளில்
கண்கூசிப் போனேன்
என் காதுகளும்
அறிவுச் செவிடு
உலகையே புரட்டும்
உரைகள் நடுவிலும்
உறங்கிப் போகிறேன்.

இலையில் வைத்த
இடியாப்பத்தில்
அடிமுடி காணும்
ஆராய்ச்சி எல்லாம்
என் மூளைக்குள்
எட்டுவதில்லை.

மெத்தப் படித்தவர்கள் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தம் தாய்மொழி வளர்ச்சிக்கும் இனமான வளர்ச்சிக்கும் அன்றாடம் ஆற்றிவரும் அழிம்புகள் எண்ணிலடங்கா. வெய்துயிர்ப்பு மட்டுமே நமக்கு எஞ்சும். ஆனால் தங்கப்பா அவற்றை ஆவணமாக்குகிறார்:

எதைச் செய்யட்டும்?

மேடைகள் மீது நடக்கும் உங்கள்
பொய் வழிபாடுகள் நடுவில்
சட்டையைக் கிழித்துக் கொண்டு
கத்தத் துடிக்கிறேன்.
சட்டியில் பொத்தல் போட்டுக்
கழுத்தில் மாட்டிக் கொள்ளவும், முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு, உங்கள்
ஆய்வரங்குகளில்
கோணங்கித் தனங்கள் செய்யவும் நெஞ்சு
துருதுருக்கின்றது.
விளையாட்டில்லை ஐயா மார்களே,
வினையாகத்தான் சொல்கிறேன், உங்கள்
போலிப் புனிதங்களைத்
திரை கிழித்துக் காட்டுதற்கும்
உங்கள் பண்பாட்டுப் பொய்முகங்களை
உடைப்பதற்கும் எனக்கு
வேறு வழி எதும் தெரியவில்லை.
......................................................
மண்ணின் மக்களைத்
தீயிட்டுக் கொளுத்தி
மனுதருமங்கள்
தத்துவம் பேசுகின்றன.

இனவெறி அரசுகள்
இணைந்து நடத்தும்
மக்கள் படுகொலைகளிலும்,
பட்டாளங்களின் அட்டூழியங்கள்,
காவல்நிலயக் கற்பழிப்புகளிலும்
வாழ்க்கையே மாசு பட்டழிகின்றது.
இங்கே, நீங்கள், சும்மா
அறிவுப் புலியாட்டங்கள் ஆடியும்
இலக்கியப் பொய்க்கால் குதிரை ஏறியும்
விளக்கின் நெய்யைத் திருட்டில் விற்று
வெளிச்சத்தைப் படம் வரைந்து காட்டிப்
புகழ் வாங்குகின்றீர்.
வாழ்க்கை சவமாய் வலித்துப் போகின்றது.
அதற்குப்
பளபளப்புச் சட்டை மாட்டிப்
பண்பாட்டு நறுமணம் பூசுகின்றீர்கள்.
ஒன்று நான்
கொலை வாளைத் தூக்க வேண்டும், அல்லது
கோமாளி ஆகி
வாழ்க்கையை மாசு படுத்தும் உங்கள்
வழிபாடுகளை மாசு படுத்தி
அதிர்ச்சி மருத்துவம் அளிக்க வேண்டும்.
எதைச் செய்யட்டும்?
என்ன இது? அன்பு வழி என்கிறார் தங்கப்பா. அவருக்குள் இவ்வளவு மறவுணர்வா..என்பவர்களுக்கு வள்ளுவர் முன்பே விடையிறுத்து விட்டார்:

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

இந்தக் குறள் உரையாசிரியர்களால் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் 'அன்புடைமை'யே.

மனநலமுடைய வாழ்க்கை குறித்து தங்கப்பா இந்நூலில் நிறைய மொழிந்திருக்கிறார். காட்டுகள் சில:

ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை;
அன்பாய் ஒரு சொல். (ப.37)

மீசை நரைத்துத் தலை வெளுத்தாலும்
விளையாட்டு உள்ளம் வேண்டும் நண்பர்காள்.
ஆசைக் கடலில் தோணி ஓட்டலாம்
அன்புள்ளே இருந்தால் தப்பு வராது.
பாசி பற்றாமல் வாழ்ந்து பாருங்கள்
பளிச்சென்று உள்ளே வெளிச்சம் தெரியுமே.(ப.38)

இயக்குநர் அகிரோ குரோசாவா பாராட்டிய திரை உத்தி - 'கணப்பொழுது இயங்கும் உறைந்த படிமம்.' அது இயற்கைக் காட்சியாகவும் இருக்கலாம். வியர்த்துப்போன உழைப்பாளியின் தோற்றமாகவும் விளங்கலாம். மழலையின் முகமாகவும் திகழலாம். அப்படிப்பட்ட காட்சிகள் பனிப்பாறை நுனிகளாகச் சில உள்ளன. பாருங்கள்:

மரங்களில் சொட்டும்
இம் மழைத் துளிகள்
இலைக் காதுகளில்
என்னதான் அப்படிப்
பேசுகின்றன?
இப்படித் தலை ஆட்டுகின்றனவே
அந்த இலைகள்!

***

நீல நெளிவில் ஓசைச் சுழிப்பு.
நிலையில் பறந்து மடுவில் குதிக்கும்
புள்ளிப் பாய்ச்சல்.
உள்ளான் கழுத்தில் ஒளியின் சுளுக்கு.
முங்கி எழுந்த மூக்கின் முனைக்கீழ்
ஆடி அடங்கும் அலைவட்டங்கள்.
***

பட்ட மரத்தின்
வெட்டுவாய்ப் பொந்தில்
பசுமை தளும்பி
ஒரு நுணாக் கன்று.
குடு குடு கிழவன்
தோளில் தாங்கிய
கொழு கொழு குழந்தை.

***

பன்றி கிளறிய குழியில்
காட்டுக் கோழி இட்ட முட்டை
முகிலிடை முழுநிலா.

********

நன்றி: தமிழ்க்காவல்.நெட்.

No comments: