1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?


No comments: