6.7.15

Vishwas Mudadagal எழுதிய Losing My Religion நாவல் தொடர்பான எதிர்வினையாக எனக்கு வந்த மின்னஞ்சலின் பகுதி

“அன்பு ....க்கு,

நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

.. .. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். [தகவல் தொழில் நுட்பத் துறை சர்ந்த] நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான். Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா..

இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்புகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கை..”

[Edited the mail]

No comments: