6.7.15

Facebook Note #3 of Puducherry Devamaindhan 'காஃப்காவின் நாய்க்குட்டி' நாகரத்தினம் கிருஷ்ணா நாவலைக் குறித்த மூன்றாவது முகநூல் குறிப்பு

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.

No comments: