27.10.06

வள்ளல்களைக் காணவில்லை...... - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம்

அளவில்லாத கொடைகள்பல.

எதைக்கேட்ட போதினிலும்

அதைஅதை அந்தஅந்த முறைப்படி

வாரிவாரி வழங்கிடவே

வள்ளல்கள் வாழ்ந்தனராம்.

வாய்திறந்து கேட்காத

தேருக்கும் மயிலுக்கும்

நுண்ணுணர்வால் ஆராய்ந்து

கொடைகள்தாம் அளித்தனராம்.

இன்றைக்கு-

நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும்

நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும்

அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும்

நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும்

உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும்

‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன்

மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும்

கைசிவக்க வழங்குதற்கு

வள்ளல் இல்லையே.

ஈகைகளைச் செய்வதற்கு

மனமும் தொல்லையே…

No comments: