27.10.06

எலிப்பொறி - தேவமைந்தன்

வடைக்காசைப் பட்டு
மாட்டிக் கொண்டாயிற்று.
உள்ளே ஓடிஓடி
கதவொடு மோதி
கம்பியை ஆட்டி
ஓய்ந்துபோய்ச் சுருண்டு
போனதும் தப்பில்லை. எப்படியும்
கோணி சுருக்கித்தான் கதவைத்
திறக்கப் போகிறார்கள்.
அதில்தான்
இன்னும்
ஆபத்துள்ளது.
அனுபவசாலிகள்,
ஓட்டைக் கோணியைத்
தவிர்த்து விடுவார்கள்.
கட்டையோடு சுற்றிலும்
நெஞ்சக் குறுகுறுப்போடு
முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும்.
ஆகவே,
மிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம்.

அடுத்தவர் எல்லைக்குள்
எதை நாடியும்
மறந்தும் புகாதிருக்கத்
திட்டமிடு மனமே -
ஒருவேளை நாம்
வெற்றிபெற்று விடுவோம் என்றால்.

(தேவமைந்தன்,'போன்சாய் மனிதர்கள்',1993.)

No comments: