27.10.06

உள்ளுறை உவமம் - தேவமைந்தன்

கண்ணே!

என்னூர் மலையின் பக்கம்

ஒருநாள் நான் கண்ட காட்சி இது.



ஒதுக்குப் புறமானதோர்

ஒற்றைப்பெரும் பாறை.

போயும் போயும் அதன்மேல்

சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று

மோதி மோதிப் பார்த்துச் சலித்தது.



எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது?

கற்பாறைமேல் மோதாதே என்று..

சலித்துப் போனேன்..

புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென

நம்பி இறங்கி வீடு திரும்பினேன்.



நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல்.

அறியும் ஆர்வம்.

ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே.



மீண்டும் மலையேறினேன்.

ஒற்றைப்பெரும் பாறை

ஓரம் திரும்பினேன்.

திடுக்கிட்டேன்.

நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல்

ஈரமூறிய இறகுப் பந்தாய்

வன்பாறைதன் காலடியில்.


(தேவமைந்தன்,'புல்வெளி',1980)

No comments: